வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி



வைகை ஆறு!

கவிஞர் இரா. இரவி.


      உலகின் முதல் மனிதன் தமிழன் !
      உலகின் முதல் மொழி தமிழ் !

      தமிழ்மொழியை சங்கம் வைத்து வளர்த்தது மதுரை நாகரிகத் தொட்டில் ஆற்றங்கரை என்பார்கள்.  மதுரையின் பெருமைகளில் ஒன்றானது வைகை. உலகில் முதல் மனிதன் நாகரிகம் பெற்றதும் மதுரை வைகையில் தான்.

      வைகையின் பெருமையை சங்க இலக்கியப் பாடல்கள் பறைசாற்றுகின்றன.  பல புலவர்கள் வைகை ஆற்றை புகழ்ந்து பல பாடல்கள் பாடி உள்ளனர்.

      மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்
      யானை கட்டி போரடித்த மதுரை.

      வைகையில் ஆற்றில் தண்ணீர் எப்போதும் ஓடிக்   கொண்டே இருந்தால் தான் விவசாயம் செழிப்பாக நடந்துள்ளது.

      இவ்வளவு பெருமை மிக்க வைகை ஆற்றின் இன்றைய நிலையை நினைத்தால் கண்களில் கண்ணீர் வரும்.  ஆனால் வைகை ஆற்றில் தண்ணீர் வரவில்லை.

      சென்னையில் கனமழை, பெருமழை வந்தபோதும் வைகை வறண்டே உள்ளது.

      தமிழகத்தில் உள்ள ஆறுகளையாவது இணைப்பதற்கு முன்வர வேண்டும்.

      தண்ணீர வராத காரணத்தால் தாராளமாக நடக்கும் மணல் கொள்ளை.

      எந்த ஒரு ஆற்றிலும் காண முடியாத காட்சிகளை வைகை ஆற்றில் காணலாம்.

      முதுமக்கள் தாழி போன்ற மிகப்பெரிய குப்பைத் தொட்டிகள் ஆற்றின் உள்ளே பல இடங்களில் வைத்து உள்ளனர்.  ஆனால் யாரும் அதில் குப்பையைக் கொட்டுவதில்லை.  அதன் அருகிலேயே குப்பையைக் கொட்டி வரலாற்று சிறப்புமிக்க வைகை ஆற்றை குப்பைத் தொட்டி ஆக்கி விட்டனர்.  பெரிய மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுக் குப்பைகளை ஆற்றிலேயே கொட்டுகின்றனர்.  எலெக்டிரானிக் பொருட்களின் குப்பையையும் கொட்டி வருகின்றனர்.  கேள்வி கேட்க நாதியின்றி ஆற்றை, குப்பைத் தொட்டி ஆக்கி விட்டனர்.

      ஆற்றுக்குள்ளேயே மாட்டுக் கொட்டம் அமைத்து, மாடுகள் வளர்த்து வருகின்றனர்.  இன்னும் சிலர் குதிரைகள் வளர்த்து வருகின்றனர்.  வாகனங்கள் நிறுத்துமிடமாக்கி பணம் வாங்கி வாகனக் காப்பகம் ஆக்கி விட்டனர்.  ஆக்கிரமிப்பு என்பது அளவின்றி நடந்துள்ளது, இன்னும் கொஞ்ச நாளில் ஆற்றை பட்டா போட்டு விலைக்கு விற்ரு கட்டிடம் கட்டும் பணி கூட நடந்து விடும்.  அந்த அளவிற்கு வைகை ஆற்று கரையோரங்கள் முழுவதும் ஆற்றுக்குள்ளும் ஆக்கிரமிப்பு நடந்து உள்ளது.

      ஆற்றை ஒட்டி குடிசைகளும் போட்டு விடுகின்றனர்.  இன்னும் சிலர் சாயக்கழிவுகளை துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை வைகை ஆற்றில் சத்தமின்றி கலந்து வருகின்றனர்.

      மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் வெவேறு மாதங்களில் நடந்த சித்திரைத் திருவிழாவை ஒன்றாக்கி சித்திரையில் நடக்க வைத்தார் .வைகை ஆற்றில் அழகர் கடவுளை இறங்க வைத்து விழா வைத்து மக்களைக் கூட வைத்தார் .அதனாலும் வைகை பெருமை பெற்றது .

அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா நடக்கும் இடத்தில் செயற்கையாக தண்ணீர் நிரப்பி அதில் அழகர் இறங்கும் அவல நிலை.  வரலாற்ரி சிறப்புமிக்க வைகை ஆற்றை காக்க அணிவகுப்போம்.  ஆக்கிரமிப்பை அகற்றுவோம்.  சுத்தப்படுத்துவோம், சுகம் பெறுவோம்.

      டெங்கு ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீட்டினுள் பிடித்து வைத்துள்ள தண்ணீரை கீழே கொட்டி விட்டு கொசு உற்பத்தி ஆகும் என்கின்றனர்.  மாநகராட்சி அதிகாரிகள் தண்டத்தொகையும் வசூலிக்கின்றனர்.

      ஆனால் இன்று டெங்கு கொசு உற்பத்தியாகும் தொழிற்சாலையாக வைகை ஆறு உள்ளது.  வைகை ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை. தேங்கி நிற்கும் குட்டைத் தண்ணீர் பாசம் பிடித்து பச்சையாக உள்ளது.  அதை எந்த மூடி போட்டு மூடி வைப்பது.

      குப்பைகள் மலை போல குவிந்து உள்ளன.  இன்னும் சில இடங்களில் ஆற்றின் உள்ளேயே கபடி போட்டிகளும் நடத்துகின்றன.  பொதுக்கூட்டங்களும் போடுகின்றன.  நம் கண் முன்னே புகழ்மிக்க ஆறு புகழ் கெட்டு விடுகின்றது.  விழிப்புணர்வு விதைப்போம், முடிவு கட்டுவோம்.

      வைகை என்பது காரணப் பெயர் வைகை ஆற்றின் ஓரம் நின்று கையை வைத்தல் தண்ணீர் ஓடுவது தெரியும்.  அப்படிப்பட்ட வைகை இன்று பொலிவிழந்து சீர் இழந்து சிதைக்கப்பட்டு வருவது தடுத்து நிறுத்துவோம்.  மண் காப்போம். மண்வளம் காப்போம்.  வைகை ஆற்றை காப்பாற்றி வருங்கால சந்ததிகளுக்கு வழங்குவோம்.  ஆறு இல்லாத ஊரு உண்டு.  ஆறு உள்ள வரை போற்ற வேண்டாமா? வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் கழிவு நீரை ஆற்றிலேயே கலந்து விடுகின்றனர்.

      வைகை ஆற்றில் கரையோரம் திறந்தவெளி கழிவறையாக மாறி விட்டது.  இந்த நிலை மாற வேண்டும்.  இதனால் தான் நோய்கள் பரவுகின்றன.

      டெங்கு நோயை ஒழிக்க முடியவில்லை, டெங்கு கொசுவை ஒழிக்க முடியவில்லை, காரணம் சுகாதாரமின்மை.  உடல்நலம் கருதியாவது வைகை ஆற்றில் மலம் சலம் கழிக்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள மதுரை மக்கள் உதவ வேண்டும். விழிப்புணர்வு வேண்டும்.  விவேகமாகச் சிந்திக்க வேண்டும்.

      முன்னொரு காலத்தில் சங்க இலக்கிய காலத்தில் வைகை ஆற்றில் ஓடியது போன்று தண்ணீர் ஓட வேண்டும். வைகையில் தண்ணீர் ஓடினால் தான் வைகையை நம்பி உள்ள பல கிராமங்களில் விவசாயம் செழிக்கும்.

      வைகை ஆற்றின் அருமை, பெருமை அறிந்து வைகையைச் சுத்தமாக்குவோம்.  மாசற்ற வைகையாக மாற்றுவோம். வைகை ஆற்றை சீரும் சிறப்புமிக்க ஆறாக மாற்றுவதற்கு துணை நிற்போம்.  கடலைச் சேராத ஒரே ஒரு ஆறு வைகை ஆறு.  பெருமைமிக்க ஆறு நம்ம வைகை ஆறு.

கருத்துகள்