நிலைக்கும் என்றே ! கவிஞர் இரா. இரவி

நிலைக்கும் என்றே !
கவிஞர் இரா. இரவி!


இன்று இருப்பார் நாளை இருப்பதில்லை
இது அறியாமல் ஆடுகின்றனர் சிலர் !

இரவு தூங்கினால் காலையில் எழுவது உறுதியில்லை
இது அறியாமல் கூத்தாடுகின்றனர் சிலர் !

தான் என்ற அகந்தையில் நாட்டில் பலர்
தறி கெட்டு ஆணவத்தால் அலைகின்றனர் !

சென்னையில் வந்த பெருமழையில் அன்று
செல்வந்தர்களும் ஆண்டியாக நின்றதை மறந்தனர் !

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை
எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதே உலக நியதி !

மாற்றம் ஒன்றுதான் மாறாதது முற்றிலும் உண்மை
மார் தட்டி வீரம் காட்டி மல்லுக்கட்டுதல் ஏனோ?

ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் இறந்துபின்
ஆறடி நிலத்தில் அடக்கமானதை அறிந்திடுங்கள் !

நிலையற்ற வாழ்வில் நிந்தனைகள் செய்வது ஏனோ?
நல்லவண்ணம் வாழ்வதே மனிதனுக்கு அழகு !

மன்னராட்சி முடிவுக்கு வந்து நாட்டில் உள்ள
மன்னர்கள் வீட்டுக்குப் போன வரலாறு உண்டு !

மக்களாட்சி என்ற பெயரில் சில அரசியல்வாதிகள்
மனம் போன போக்கில் நடப்பது முறையோ?

ஆணவத்தில் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்
அழிவுக்கு வழவகுக்கும் என்பதை உணரவில்லை !

நானே பெரியவன் என்ற எண்ணம் அகற்றுங்கள்
நானிலத்தில் உங்களை விடப் பெரியவர் பலர் உள்ளனர் !

குறைகுடம் தான் கூத்தாடும் என்பதை உணருங்கள்
நிறைகுடம் என்றுமே கூத்தாடாது உணருங்கள் !

என்னை மிஞ்ச எவருமில்லை என்ற எண்னம் அகற்றுங்கள்
இவ்வுலகில் வல்லவனுக்கு வல்லவன் உள்ளான் உணருங்கள் !

நிரந்தரமானவர் என்று எவருமில்லை உலகில்
நிம்மதியாக வாழ்ந்திட ஆணவத்தை அகற்றுங்கள்!

கருத்துகள்