நான் என்ற அகந்தை அகற்றுங்கள் ! கவிஞர் இரா. இரவி!




நான் என்ற அகந்தை அகற்றுங்கள் !
கவிஞர் இரா. இரவி!
******
நான் பெரியவன். எனக்கு எல்லாம் தெரியும். என் பேச்சை எல்லோரும் கேட்க வேண்டும். என்னை வெல்ல எவருமில்லை. எல்லோரும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள். இது போன்ற நான் என்ற அகந்தை அகற்றுங்கள்.
இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. எதுவும் தெரியாதவரும் எவரும் இல்லை. நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தால் அடியோடு அகற்றி விடுங்கள்.
சக மனிதனை மதிக்க வேண்டும். அவரது கருத்தையும் செவிமடுத்துக் கேட்க வேண்டும். அதில் நல்லவை இருந்தால் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு கீழ் பதவியில் உள்ளவர் சொல்வதை நான் கேட்பதா? என் கௌரவம் என்ன ஆகும்? என்ற தவறான எண்ணங்களைத் தகர்த்து விடுங்கள்.
யாரையும் இவர் நல்லவர், கெட்டவர் என்று முன்மதிப்பீடு செய்யாதீர்கள். நமது மதிப்பீடு தவறாகலாம். அலுவலகத்தில் மட்டுமல்ல் இல்லத்திலும் மனைவியின் கருத்துக்கு மதிப்பளித்துக் கேளுங்கள். கேட்பதில் தவறு இல்லை. கேட்டு விட்டு சரியெனப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். தவறு என்று தோன்றினாலும் விட்டு விடுங்கள். கேட்காமலே, நீ சொல்லி நான் என்ன கேட்பது, உனக்கு ஒன்றும் தெரியாது என்று மனைவியை மட்டம் தட்டும் வழக்கத்தைக் கைவிடுங்கள்.
ஒருவர் என்னால் முடியாத செயல் எதுவுமில்லை என்ற கர்வத்துடன் வாழ்ந்து வந்தார். அந்த ஊருக்கு வந்த முனிவரிடமும் மிகவும் கர்வத்துடன் சவால் விட்டுப் பேசினார். முனிவர் கேட்டார், உங்களால் முடியாத செயல் இந்த உலகில் எதுவும் இல்லையா? என்றார். ஆம் என்றார் அவர். முனிவர் குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்று கையில் உள்ள கமண்டலத்தில் இருந்த தண்ணீரை, குளத்தில் ஊற்றச் சொன்னார். ஊற்றியதும் தற்போது நீங்கள் ஊற்றிய தண்ணீர் அதாவது அதே தண்ணீர் கமண்டலத்தில் கொடுங்கள் என்றார். அது எப்படி முடியும்? குளத்து நீருடன் கலந்து விட்டன. அதே நீரை எப்படி அள்ள முடியும்? என்றார்.
முனிவர் சொன்னார், இந்த உலகில் முடியாத செயல்கள் என்று சில உள்ளன. அதனை உணர்த்தவே உங்களிடம் இவ்வாறு நடந்து கொண்டேன் என்றார். அதனைக் கேட்ட அவருக்கு அவரது “நான் என்ற அகந்தை” அகன்றது.
இன்று வீட்டிலும் நாட்டிலும் உலகத்திலும் ‘நானே பெரியவன்’ என்ற எண்ணத்தின் காரணமாகவே சண்டை, சச்சரவு, பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றன. நான் என்ற அகந்தையை அகற்றி விட்டு பிறரையும் மதித்து அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பு அளித்து வந்தால் எங்கும் சண்டை, சச்சரவு, அமைதியின்மை நிலவாது. மன நிம்மதி, மன அமைதி கிடைப்பதற்கு மற்றவர்களை மதிக்க வேண்டும்.
உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும்? என்று எதிர்பார்ப்பது போலவே நீங்கள் மற்றவர்கள நடத்த முன்வர வேண்டும். உங்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை உணருங்கள். விட்டுக் கொடுத்து வாழுங்கள். “விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை” என்ற பொன்மொழியை நினைவில் கொள்ளுங்கள்.
‘நான் சிறந்தவன்’ என்று எண்ணுவது தவறல்ல. ‘நானே சிறந்தவன்’ என்று எண்ணுவது தான் தவறு. உங்களை விடச் சிறந்தவர்கள் உலகில் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னால் முடியும் என்று எண்ணுவது தவறு அல்ல .என்னால் மட்டுமே முடியும் என்று எண்ணுவது தவறு.வல்லவனுக்கு வல்லவன் உண்டு என்பதை உணர்ந்து வாழுங்கள்.
தான் என்ற அகந்தையின் காரணமாக அழிந்தவர்களின் வரலாறு படித்துப் பாருங்கள். தான் என்ற அகந்தையால் உலகத்தையே ஆட்டிப் படைத்த ஹிட்லர் கடைசியில் தற்கொலை செய்து கொண்டார் என்று வரலாறு சொல்கின்றது. அரசியலிலும் நானே பெரியவன் என்று எண்ணி வாழ்ந்தவர்கள் பின் இருந்த இடம் தெரியாமல் போன வரலாறுகள் உண்டு. அரசியலில் தான் என்ற அகந்தை இன்றி நேர்மையாகவும், நாணயமாகவும்,எளிமையாகவும் வாழ்ந்த கல்வி வள்ளல் காமராசரும், அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன் அவர்களும் இறந்து பல ஆண்டுகள் கழிந்திட்ட போதும் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களது எளிமை, நேர்மை, தூய்மை.
நீங்கள் கேள்விப்பட்ட கதை ஒன்று. காட்டுக்கு ராஜாவாக சிங்கம் இருந்தது. தான் என்ற அகந்தையுடன் வாழ்ந்து வந்தது. தன்னை வெல்ல யாருமில்லை என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்தது. காட்டில் உள்ள விலங்குகள், தினம் ஒன்று வந்து சிங்கத்திற்கு இரையாக வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தது. ஒரு நாள் நரி வந்து இராஜா சிங்கமே, அங்கே உங்களைப் போல ஒரு சிங்கம், நான் தான் காட்டுக்கு ராஜா என்கிறது என்றது. எங்கே காட்டு பார்க்கலாம் என்றது சிங்கம். நரி, சிங்கத்தை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்று காட்டியது. சிங்கம் எட்டிப் பார்த்தது. தண்ணீரில் தெரிவது தன் முகம் என்று அறியாத சிங்கம் உடன் கிணற்றில் குதித்து வீழ்ந்தது.
நான் படித்தவன், எனக்கு எல்லாம் தெரியும். படிக்காதவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணுவதும் தவறு. படித்தவன் ஒரு நாள் நடந்து செல்லும் போது செக்கு மாடு சுற்றி எண்ணெய் எடுக்கும் இடத்தைப் பார்த்தான். அங்கு செக்கு ஆட்டுபவர் வெளியில் நின்று கொண்டு இருந்தார். அவரிடம் கேட்டான் நீங்கள் இங்கே நிற்கிறீர்கள் உள்ளே செக்கு சுற்றுவது எப்படித் தெரியும் என்றான். மாட்டின் கழுத்தில் மணிகள் கட்டி உள்ளேன் அது சுற்றும் போது மணி சத்தம் கேட்கும் என்றார்.அதற்கு படித்தவன் கேட்டான். மாடு சுற்றாமல் தலையை மட்டும் ஆட்டினாலும் மணி சத்தம் கேட்குமே என்றான். சுற்றாமல் நின்றபடி தலையை மட்டும் ஆட்டி ஏமாற்றுவதற்கு உன்னைப் போல கல்லூரி சென்று படிக்கவில்லை என் மாடு, என்றார். படிப்பு என்பது வேறு. அறிவு என்பது வேறு. படித்து விட்டால் நான் அறிவாளி எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் என்பது தவறு என்பதை படித்தவர்கள் உணர வேண்டும்.
படித்தவன் கிராமத்திற்கு சென்றான். அங்கு நின்ற உழவனைப் பார்த்து இந்த மரம் எவ்வளவு காய்கள் ஆண்டிற்கு காய்க்கும் என்றான். நூறு காய்கள் காய்க்கும் என்றார். அதற்கு படித்தவன் சொன்னான். சோடியம் பாஸ்பேட் போன்ற உரங்கள் போட்டால் வருடத்திற்கு ஐநூறு கொய்யா காய்கள் காய்க்கும் என்றான். அதற்கு உழவன் சொன்னான், நீங்கள் சொன்னதைப் போட்டாலும் ஐநூறு கொய்யா காய்க்காது என்றான். ஏன் காய்க்காது என்றான் படித்தவன். தம்பி இது கொய்யா மரமல்ல, கொய்யா காய்ப்பதற்கு, இது தென்னை மரம் என்றார்.
நணபர்களுடன் அசைவ விடுதிக்குச் சென்ற நபர், சொன்னார், உணவு பரிமாற வரும் சர்வரை கேலி செய்கிறேன் பார் என்று சொல்லி விட்டு மூளை இருக்கா? இருந்தா கொண்டு வா! என்றார். அதற்கு சர்வர் சொன்னர், உங்களுக்கு முன்னாடி வந்தவங்களுக்கு எல்லாம் இருந்திச்சு, உங்களுக்கு தான் மூளை இல்லை என்றார். அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவர் அவமானப்-பட்டார். அடுத்தவர் மனதை புண்படும்படி எங்கும் எப்போதும் எவரிடமும் பேசுவதிலை என்ற முடிவு எடுத்து நடந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.
நான் என்ற அகந்தை உள்ள மனிதர்களுக்கு நேர்மறையான சிந்தனை இருப்பதில்லை. எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பார்கள்.
ஜென் கதை ஒன்று ஒரு ஜாடியில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி விட்டு , குரு சீடர்களிடம் ஜாடியைக் காட்டி என்ன தெரிகிறது என்றார். எதிர்மறையாளனான ஒரு சீடன் சொன்னான். பாதி ஜாடி காலியாக உள்ளது என்று. மற்றொரு சீடன் நேர் மறையாளன். அவன் சொன்னான், பாதி ஜாடி தண்ணீர் உள்ளது என்று. ஒரே காட்சி, பார்வை இரண்டு.
குரு, ரோஜாச் செடியைக் காண்பித்து சீடர்களிடம் கேட்டார். என்ன தெரிகிறது என்று. எதிர்மறையாளன் சொன்னான், செடியில் நிறைய முட்கள் உள்ளன என்றான். நேர்மறையாளன் சொன்னான் அழகிய ரோஜா பூத்து உள்ளது. என்றான். ஆம் ஒரே காட்சி பார்வை வேறு ஆகின்றது.
ஆம், அகந்தை உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணம் இருப்பதில்லை. எல்லோரையும் சந்தேகப்படுவது குற்றவாளி போலவே அனைவரையும் பார்ப்பது இவை எல்லாம் கர்வத்தின் விளைவே ஆடும். தன்னைப் போல பிறரை நேசிக்கும் உள்ளம் கர்வம் உள்ளவர்களுக்கு வருவதே இல்லை. நான் என்ற அகந்தையை அகற்றினால் தான் உள்ளத்தில் மனிதாபிமானம் பிறக்கும், மனித நேயம் சுரக்கும்.
நீங்கள் கேள்விப்பட்ட கதை சிறு மாற்றத்துடன். குல்லா வியாபாரி தன் மகனிடம் குல்லா கொடுத்து விற்று வர சொன்னார். செல்லும் முன்பு மரத்தடியில் தூங்கும் போது குல்லாவை, குரங்குகள் எடுத்துச் சென்று விட்டால் உன் தலையில் உள்ள குல்லாவை கீழே போடு. குரங்குகளும் கீழே போட்டு விடும் என்று சொல்லி அனுப்பினார்.
மரத்தடியில் தூங்கும் போது அப்பா சொன்னது போலவே குரங்குகள் குல்லாவை எடுத்து விட்டன. உடன் அப்பா சொன்னது நினைவிற்கு வந்து தன் தலையில் இருந்த குல்லாவை கீழே போட்டான். குரங்குகள் போடவில்லை. குரங்குகளிடம் கேட்டான். எங்க அப்பா சொன்னாரே, நான் கீழே போட்டால் நீங்களும் கீழே போட்டு விடுவீர்கள் என்று. குரங்குகள் சொல்லின : எங்க அப்பா எங்களிடம் சொன்னது, அவன் கீழே போடுவான், நீங்கள் கீழே போடாதீர்கள் என்றன. குல்லா வியாபாரி ஏமாந்து போனான்.
முன்பு நடந்தது போலவே எப்போதும் நடக்கும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. இந்த உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது. எனவே மாற்றங்களை ஏற்றுக் கொள்ள நம் மனம் தயாராக இருக்க வேண்டும். நான் மாற மாட்டேன், நான் மாறாமல் அப்படியே தான் இருப்பேன் என்பது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து உலகில் நடக்கும் மாற்றங்களை எதிர்கொள்ள மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் பெரியவன் என்று நாம் எண்ணும் போதே நாம் மிகச் சிறியவன் ஆகி விடுகிறோம். ஆணவத்தால் அழிந்தவர்கள் பலர். நல் குணத்தால் மற்றவரை மதித்து தன்னைப் போலவே பிறரையும் நேசித்து மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து வாழ்ந்தவர்கள் இறந்த பின்னும் வாழ்கின்றனர்.
கர்வத்துடன், ஆணவத்துடன், அகந்தையுடன் நடந்து கொள்ளும் மனிதனை வீட்டிலோ, அலுவலகத்திலோ, நாட்டிலோ, உலகத்திலோ எங்குமே மதிப்பது இல்லை. ஆணவக்காரர்கள் பற்றி பிம்பம் உடைந்தே இருக்கும்.மக்கள் மதிப்பது இல்லை .
என்னை மிஞ்சிய ஆள் உலகத்தில் இல்லை என்ற எண்ணத்தை அகற்றி விட்டு, என்னை விட உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் உலகத்தில் உண்டு என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும்.
மாமனிதர் அப்துல் கலாம், தன்னை விட வயதில் மிகவும் குறைந்த மாணவ, மாணவியரை இலட்சக்கணக்கில் சந்தித்து அவர்களை மதித்து அன்பு செலுத்தினார். அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த போதும் கர்வமின்றி எளிமையாகவே வாழ்ந்தார். தன் உதவியாளர்கள் நல்ல கருத்து சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் நான் என்ற அகந்தை இன்றி வாழ்ந்த காரணத்தால் தான் அவர் இறந்த பின்னும் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார். எனவே எல்லோரும் நான் என்ற அகந்தை அகற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.
.

கருத்துகள்