தினமணி இணையம் தந்த தலைப்பு ! அணையட்டும் சாதீ ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !
அணையட்டும் சாதீ ! கவிஞர் இரா .இரவி !

விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாம வளர்ச்சி
விலங்காக மனிதன் மாறுவது  பரிணாம  வீழ்ச்சி  !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில்
சங்கம் வைத்து சாதி வெறி வளர்க்கும் அவலம் !


தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கும் தலைவன்
தூண்டில் புழுவாக இரையாகும் தொண்டன் !

சொந்த புத்தியின்றி சொல்புத்திக் கேட்கும் கொடுமை  
சோகத்தில் ஆழ்த்தி மகிழ்ந்திடும் கொடூர மடமை !

பெற்ற மகளை விட உனக்கு உன் சாதி பெரிதா ?
பெற்ற மகனை  விட உனக்கு உன் சாதி பெரிதா ?

சாதிமத வெறியால் மாண்ட உயிர்கள் போதும்
சாதிமத வெறி உடன் மாண்டால்  போதும் !

எதையும் ஏன் ? எதற்கு  ? எப்படி எதனால் ? என சிந்தி
எவனோ சொன்னதற்காக கூலிப்படையாகலாமா ?

விலை மதிப்பற்றது மனித உயிர்கள் உணர்ந்திடு
வீண் வீம்புக்கு உயிர் பறிப்பதை நிறுத்திடு !

உன் சாதியால் மட்டும் ஒரு நாள் வாழ முடியுமா ?
ஒட்டு மொத்த சாதியின் பங்களிப்பே உன் வாழ்வு !

உன் சாதிக்கு என்று தனி ரத்தமா ஓடுது ?
உனக்கு உயிர் காக்க உதவிய உதிரம் எந்த சாதி ?

விலங்குகள் கூட அன்பு செலுத்தி வாழுதடா
வெட்டி மனிதர்கள் தான் வெட்டி வீழ்கின்றனர் !


சாதீயை வளர விடுவது தமிழகதிற்கு அவமானம்
சா தீயை மனிதநேயம் தண்ணீரால் அணைத்திடுவோம்    

சகோதரர்களாய் அனைவரும்  கூடி வாழ்வோம்
சாதி எனும் தீயை அணைக்க வீரர்களாய் மாறுவோம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
--

.

கருத்துகள்