வானவில் வண்ணங்கள் !பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வானவில் வண்ணங்கள் !


வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள்


பதிப்பாசிரியர் : முனைவர் அ. அறிவு நம்பி ! 
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வானவில் பண்பாட்டு மையம் வெளியீடு
*****
       மகாகவி பாரதியார் உலக மகா கவிஞர் என்று இன்று உலகம் போற்றுகின்றது. ஆனால் வாழும் காலத்தில் அவருக்கு உரிய அங்கீகாரம், பாராட்டு, பரிசு எதுவும் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.  இனியாவது நல்ல படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது தான் இந்த நூல். 

இப்படி பலரும் ஆய்வு நோக்கில் பாராட்டும் போது படைப்பாளி இன்னும் கூடுதலாகவும், மேலும் தரமாகவும் படைக்க ஊக்கமாக அமையும்.  வழக்கறிஞர் க. இரவி அவர்களை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதில் தனி முத்திரை பதித்து வரும் சோபனா இரவியின் கணவர் என்று அறிந்தவர்கள், இந்த நூல் படித்தால் படைப்பாளி வழக்கறிஞர் கவிஞர் க. இரவியின் மனைவி சோபனா இரவி என்று சொல்வார்கள்.

       பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்கள் இந்நூலின் பதிப்பாசிரியராக இருந்து ஆற்றியுள்ள நற்பணி பாராட்டுக்குரியது.  21-02-2015 அன்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வழக்கறிஞர் ‘க.இரவி ஒரு வானவில்’ என்ற கருத்தரங்கில் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  கவிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் இரா. சுந்தரி வரை 35 தமிழ் ஆர்வலர்கள் பேராசிரியர்கள், அறிஞர்கள் கட்டுரை நூலாகி உள்ளது.  வழக்கறிஞர் க. இரவி அவர்கள் ஆங்கிலத்தில் மூன்று நூல்களும், அழகு தமிழில் ஏழு நூல்களும் எழுதி உள்ளார்.  

10 நூல்கள் எழுதியுள்ள படைப்பாளியின் படைப்புப் பற்றிய திறனாய்வு.  எனது பெயரான இரவி அவருக்கும் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.  இந்நூல் படிக்கவும் வாழும் காலத்திலேயே நமது படைப்புகள் பற்றிய ஒரு கருத்தரங்கம் நடத்தி விட வேண்டும் என்ற ஆசை எனக்கும் வந்தது.

       படைப்பாளி வழக்கறிஞர் க. இரவியின் படைப்புகளை வாய்ப்பு உள்ளவர்கள் அவரது இணையத்திலும் வாசித்து மகிழலாம்.  www.ravilit.com இணையத்திலும் பார்த்தேன்.  திருக்குறள் பற்றிய கட்டுரை படித்து வியந்து போனேன்.  சென்னையில் நடந்தது போலவே மதுரையில் திருமலை மன்னர் கல்லூரியில்  அன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது.  நானும் கட்டுரை வாசிக்க உள்ளேன்.

       வழக்கறிஞர் க. இரவி என்பதை க என்ற முன் எழுத்து தந்தைக்காக இருந்த போதும் கவிஞர் இரவி என்பதன் சுருக்கமாக க. இரவி என்றும் பொருள் கொள்ளலாம்.  இவருக்கு மகாகவி பாரதியார் மீது அளவற்ற பற்று உள்ளது.  காரணம் பாரதி கவிதைகளை நன்கு உள்வாங்கிப் படித்து உள்ளார்.  அவரது படைப்புகளில் பாரதியின் தாக்கம் உள்ளது.  பாராட்டுக்கள்.  திருவள்ளுவர் மீது அளவற்ற ஈடுபாடு உள்ளது என்பதையும் படைப்புகள் உணர்த்துகின்றன.

       பதிப்பாசிரியர், பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்கள் பதிப்புரையில் எழுதியுள்ளவற்றில் சிறு துளி இதோ!

    “ஆங்கிலத்திலும் பழுத்த புலமையாளரான   இவரிடம் இருப்பவை இரண்டு (1) அறிவாற்றல் (2) ஆக்கம் நிறை செயல்பாடு இவரிடம் இல்லாதவை இரண்டு (1) அகம்பாவம் (2) ஆடம்பரம்.

       கவிஞர் க. இரவி அவர்களிடம் இருக்கும் இரண்டும், இல்லாத இரண்டும் நாம் கடைபிடித்தால் நாமும் வாழ்வில் உயரலாம்.  வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை வசப்படும்.  உரைநடை வடிவிலும், கவிதை வடிவிலும் படைப்புகளை வழங்கி உள்ளார்.  கவிஞர் தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் குலோத்துங்கன் என்ற பெயரில் அற்புதமான கவிதைகள் எழுதி நூலாக வெளியிட்டவர். அவர் கவிஞர் க. இரவியின் கவிதைகளை மேற்கோள் காட்டி வடித்த வாழ்த்துரை மிக நன்று.  பதச்சோறாக கவிஞர் க. இரவியின் கவிதை ஒன்று.

       தொடுவானம் தீண்டினேன் துணையொன்று
       வேண்டினேன்
       கனவே கடலானது
       முடியாத ஆசைகள் மூழ்கட்டும் என்றால்
       மௌனம் படகானது (உன்னோடு பக். 125)


.

       தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் “இலட்சியச் சுடரொளி இரவி” என்று தலைப்பிட்டு வழங்கியுள்ள வாழ்த்துரை மிக நன்று.  அதிலிருந்து சிறு துளிகள். கவிஞர் க. இரவி பற்றி முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் எழுதிய கவிதை அவரை படம் பிடித்துக் காட்டுவது போல உள்ளது.

       பெண்மைக்குணமுடையான் – சில நேரத்தில்
       பெருஞானி போல் பேசிடுவான் ! மிகத்
       தன்மைக் குணமுடையான், சில நேரம்
       தபூலின் குணமுடையான்.
       எண்ணியொன் றுரைப்பேன் யான்!  எந்த நேரமும்
       இரவியைப் போல் எவர்தான் இலங்கிடுவார் காண்!

       படைப்பாளி க. இரவி அவர்கள் வழக்கறிஞர் என்பதையும் நல்ல இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். கதிரவனைப் போல ஓய்வின்றி உழைக்கிறார் என்பதை கவிதை உணர்த்துகின்றது.

       35 பேரின் கட்டுரைகளில் இருந்து மேற்கோள் காட்டுவது என்றால் இக்கட்டுரை மதிப்புரை மிகவும் நீண்டுவிடும்.  முனைவர் பட்ட ஆய்வு முடித்த பேராசிரியர்கள் பலர் கட்டுரை வடித்துள்ளனர். 

முனைவர் பட்ட ஆய்வு போலவே கவிஞர் க. இரவியின் படைப்புகளை வடித்து உள்ளனர். ஒவ்வொருவரும் மேலோட்டமாக எழுதாமல் மிக நுட்பமாகவும் திட்பமாகவும் எழுதி உள்ளனர்.  கவிதைகளில் உள்ளவைகளில் மோனை, எதுகை, இயைபு என்று அனைத்துக் கோணத்திலும் ஆய்வு செய்து கட்டுரைகளை யாத்து உள்ளனர்.  படைப்புகளில் சொல் விளையாட்டு விளையாடி உள்ள ஆற்றலை அனைவரும் பாராட்டி உள்ளனர்.  

பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் அவர்கள் கவிஞர் வைரமுத்து அவர்களின் ஆசிரியர் அவரும், ‘மந்திரம் போல் சொல்லினம்’ என்ற தலைப்பில் கட்டுரை வழங்கி உள்ளார்.

       தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், பாராட்டும், படைப்பாளி வழக்கறிஞர் கவிஞர் க. இரவி வாழ்க பல்லாண்டு.


.

.

கருத்துகள்