இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார். அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே!

நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார். அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
*****
       ‘இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே’ என்ற கேள்வியே சிந்திக்க வைக்கின்றது. காரணம் காதல் என்று புரிந்து விடுகின்றது, காதலே கவிதையாய் மலர்ந்துள்ளது என்பதை ஒப்புதல் வாக்குமூலம் போல நூலாசிரியர் கவிஞர் கி. இராஜ்குமார் அவர்கள் அறிவித்து உள்ளார் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

       பலருக்கும் முதல் கவிதை, காதல் கவிதையாகவே மலரும்.  அடுத்தடுத்து சமுதாயக் கவிதைகள் மலரும். சிலர் காதல் கவிதை எழுதியதோடு காணாமல் போவதும் உண்டு.  நூலாசிரியர் கவிஞர் கி. இராஜ்குமார் அவர்கள் அடுத்தடுத்த நூல்களில் காதல் தாண்டி சமுதாயம் பற்றி சிந்தித்து கவிதைகள் பல எழுதி நூல்கள் வெளியிடுவார் என்ற நம்பிக்கை உண்டு.  விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்.  பின்னாளில் பெரிய கவிஞராக வருவார் என்பதை பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன.

       நூறில் பாதி 50 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன.  நூல் முழுவதும் காதல், காதல், காதல் தவிர வேறில்லை.  ஆனால் காதல் அன்றும், இன்றும், என்றும் இனிமையான ஒன்று.  காதல் உணர்வு என்பது சொல்லில் அடங்காதது.  காதல் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு, அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைக்கு மட்டுமே உண்டு.  அணிந்துரைக்காக மின்அஞ்சல் வழி அனுப்பிய இந்நூல் கவிதைகளை படித்த போது எனக்குள் என்னுடைய காதல் நினைவுகளை மலர்வித்தது உண்மை.  இந்நூல் படிக்கும் உங்களுக்கும் மலரும் நினைவுகளை மலர்விக்கும்.

       மீண்டும் கிறுக்கி மகிழ்ந்தேனே!

       (என்றோ...)
       தேன் / பாவை அவளின் / பார்வைப் பார்த்து
       உள்ளம் ரசித்து நின்றேன்.

       (நேற்று)
       எப்போதும் போல் / தனிமையில் நான் – இருக்கும்
       தமிழன்னை அருகில்.

       காதல் கவிதையிலும், தனிமையிலும் தமிழன்னையை துணைக்கு அழைக்கும் நூலாசிரியர் கவிஞர் கி. இராஜ்குமார் அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு பாராட்டுக்கள்.

       காதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு கவிஞர்கள் பலர் விடை எழுதி விட்டனர்.  ஆனால் மிகச்சரியான விடை இதுவரை யாராலும் எழுதப்படவில்லை என்பது உண்மை.  இவரும் காதல் என்றால் என்ன? எப்படி? என்பதை விடைகள் கூற முயற்சித்துள்ளார்.  பாருங்கள்.

      விட்டு செல்லும் காதலை 
   தொட்டுப் பார்த்தால் என்ன
      கனமான உன் பார்வை தான் – இந்த
      இதமான இதயத்தை 
   பதம் பார்த்து
       புது மலரின் மணத்துடன்
       உனைத் தேடும் தென்றலாய்
       நீயில்லை என்றதும்
       தூக்கி வீசும் புயலாய்!
       என்னுடன் மட்டும் வருகிறது 
   உனக்கு தெரியாமல்.

வித்தியாசமாக பல கவிதைகள் உள்ளன.  காதலியைப் பற்றியே அதிகம் சிந்தித்த காரணத்தால் குற்றால் அருவியெனக் கொட்டிய காதல் கவிதைகளை நூலாக்கி உள்ளார்.  புதிய முயற்சி காதல் கவிதை ரசிகர்கள் உலகம் ஏற்றுக் கொள்ளும்.

       என்னவளும் எழுதுகோலும்!
       வெள்ளைமனம் கொண்ட 
    காகிதத்தின் கன்னத்தில் 
       எழுதுகோல் முத்தம் 
    தர தயாரான நேரம் !

கவிதையைக் காகிதத்தில் எழுதுகோலால் எழுதுவதைக் கூட முத்தமாக சிந்திக்கும் சிந்தனை என்பது காதல் வயப்பட்ட கவிஞருக்கு சாத்தியமாகும் என்பது உண்மை.  வித்தியாசமான சிந்தனை.  பாராட்டுக்கள். பதச்சோறாக சில மட்டும் இங்கே மேற்கோள் காட்டி உள்ளேன்.  நூலின் உள்ளே படித்துப் பாருங்கள்.  நீங்களே உணர்வீர்கள், நான் எழுதியது உண்மை என்பதை.

மூச்சுக் குழலின் முகவரிக்கு
முத்தம் பதிப்பதே என் காதல்!
என் எண்ணம் என்றும் 
காதல் செய்யும் -
உன் கன்னக்குழியில் 
வீழ்ந்துப் பார்த்தேன் 
விதையாக
உன் விழிநீர் பட்டால் 
மரித்துப் போகும் என்னுயிர்
வியர்வை மட்டும் நீ தந்தால் 
விருச்சமாகும் அவ்வுயிர்.

உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற பழைய திரைப்படப் பாடல் வரிகளை நினைவூட்டும் விதமாக வித்தியாசமாக கவிதை வடித்துள்ள கவிஞருக்கு பாராட்டுக்கள்.

காதலில் முத்தம் என்பது முன்னுரை ஆகும்.  முன்னுரை பலர் எழுதி இருப்பார்கள்.  காதலில் சிலருக்கு முடிவுரை சோகமானாலும் காதலின் முன்னுரை பலருக்கும், ஏன்? எல்லோருக்கும் சுகமாகவே இருக்கும்.

இதழ்களில் கொஞ்சம் தவிழ்த்துப் பார்க்கட்டுமா?
காதல் தேடி 
கால் வலிக்க – நீ
முத்தமிட்ட நேரமே 
முழு நீள முதலுதவி
காதல் கனவுகள் 
கண நேரத்தில் கரைந்தாலும்
நம் கைரேகைகள் மட்டும் 
உரசலில் உறவாடட்டும்.

       காதல் ரசம் சொட்டச் சொட்ட ரசனையோடு கவிதைகள் எழுதி உள்ளார்.  கவிதைக்கு கற்பனை அழகு. கற்பனையும் அழகு தான்.  நூல் முழுவதும் கற்பனைகள் அழகாக உள்ளன.  நடந்த நிகழ்வுகளும் கவிதையாகி உள்ளன.  கற்பனையும் உண்மையும் கலந்த கலவையாக உள்ளது.

       நீ 
நடந்து போற 
நொடியில் ...என்மனசு நிக்குது 
படியில்
தேய்ச்சி 
தேய்ச்சி
தேடுறன் காதல்
   நீ 
 பாதம் பதிச்ச படியில !


       இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே! கேள்விக்கு விடை காதல், காதல், காதல் என்பதே!  காதல் கவிதையாக எழுதியதோடு நின்று விடாமல் காதலும் கவிதையாகி சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

கருத்துகள்