புதிய மரபுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நா. முத்துநிலவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

               புதிய மரபுகள் !




நூல் ஆசிரியர் : கவிஞர் நா. முத்துநிலவன் ! 
muthunilavanpdk@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !அகரம் மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007.
தொலைபேசி : 04362 239289, விலை : ரூ. 70

*****
       நூலாசிரியர் கவிஞர் நா. முத்துநிலவன், நாடு அறிந்த நல்ல பேச்சாளர் மட்டுமல்ல.  உரத்த சிந்தனையுடன் உன்னதமான கவிதைகள் படைக்கும் படைப்பாளி என்பதை உணர்த்திடும் நூல்.  இந்த நூலின் முகப்பு ஓவியத்தை மதுரைக்காரர் உலகப்புகழ் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள் வரைந்து உள்ளார்கள். நூலின் அட்டையைப் பார்த்தவுடனேயே நூலினை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது.  பன்முக ஆற்றலாளர் கவிஞர் மீரா அவர்கள் குடும்பத்தின் ‘அகரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.  புதிய மரபுகள் என்ற நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது.

       கந்தர்வன் அவர்கள் எழுதிய அணிந்துரையில் இறுதியாக உள்ள மூன்று வரிகளே இந்த நூலிற்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது.

 “முத்துநிலவன் என்ற ஆளுமையை 
 நீங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் 
 பார்த்து ஆனந்திக்க வேண்டும். 

நூலாசிரியர் செம்மலர், தீக்கதிர், கல்கி, அறிவியக்கம், புதிய தலைமுறை இதழ்களில் எழுதிய கவிதைகளையும், த.மு.எ.க.ச. – கலைஇரவு மேடைகளில் பாடிய கவிதை-களையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்.  காதல் கவிதைகள் எழுதுவது மட்டுமே கவிதைகள் என்று சிலரும், இயற்கை பற்றி எழுதுவது மட்டுமே கவிதைகள் என்று சிலரும் நினைத்து எழுதி வருகின்றனர்.  ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி சமுதாயம் பற்றி சிந்தித்து எழுதுவது தான் சிறந்த கவிதை என்று எண்ணி சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் வடித்துள்ளார் நூலாசிரியர் கவிஞர் முத்துநிலவன்.  மதுரையில் நடந்த தமிழ் வலைப்பதிவாளர் மாநாட்டில் சிறப்புரையாற்றினார், மிக நன்று.

       முத்துநிலவன் என்பது பெற்றோர் வைத்த இயற்பெயரா? அல்லது புனைப்பெயரா? என்பது எனக்குத் தெரியவில்லை.  ஆனால் காரணப்பெயர் என்றே எண்ணுகின்றேன்.  முத்துப் போன்ற சொற்களால் நிலவைப் போன்று அழகான பெயர் பெற்றுவிட்டார் என்றும் கூறலாம். 

       நூலாசிரியர் சமுதாயத்தை உற்றுநோக்குகின்றார்.  செய்திகள் படிக்கின்றார். பார்க்கின்றார். மனதை பாதித்தவற்றை கவிதையாக்கி விடுகின்றார்.

 விஸ்கி பாட்டிலுக்காய் 
 தேக ரகசியம் விற்கும் 
 அதிகாரிகள்
 தியாகிகள் பதற  
 துரோகிகள் செலுத்தும் 
 அரசியல்
 தந்தைக்கு சாராயம் தந்து 
 பிள்ளைக்கு சத்துணவு 
 போடும் திட்டங்கள்

(மதுராந்தக இராணுவ ரகசியம் தந்த கொடுமை நடந்த நிகழ்வு)

       ஆம்.  குடியால் குடிப்பவர் மட்டுமல்ல, குடிப்பவரின் குடும்பமே அல்லல்பட்டு வருகின்றது.  குடியால் தான் குற்றங்கள் நடக்கின்றன.  குடி ஒழிந்தால் குற்றங்கள் ஒழியும்.  அமைதி நிலவும்.

       விடுதலை வேண்டும் என்று போராடிப் பெற்றோம்
       பெற்ற விடுதலையை பேணி காக்காமல்
       அந்நியருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து
       உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் .

       என்ற பெயர்களில் தேசத்தை இழந்து வருவதைச் சுட்டும் கவிதை நன்று.

 சுதந்திரம் !
 சட்டைத்துணி கேட்டு 
 சண்டையிட்டோம் 
 மூன்று வண்ணத்தில்
 ஒட்டுத்துணி கிடைத்தது.

       தொலைக்காட்சி இன்று தொல்லைக்காட்சியாகி விட்டது.  தொலைக்காட்சித் தொடர்கள் மனிதர்களை மனநோயாளிகள் ஆக்கி வருகின்றன. இசை நிகழ்ச்சிகள் பிஞ்சுக்குழந்தைகளின் மனத்தைக் காயப்படுத்தி அழ வைத்து வேடிக்கை பார்த்து வருகின்றன.  சமுதாயத்தின் பழுது நீக்காமல் பாழ்படுத்தி, கோளாறு செய்து வரும் தொலைக்காட்சி பற்றிய கவிதையிலிருந்து எனக்குப் பிடித்த சில வரிகள் :

 இரண்டாம்ப்பு படிக்கும் 
 என் மகன் 
 COLOUR TV
 
என்பதை 
 கோளாறு டிவி என்றே
 சரியாகப் படித்தான்.

       மகாகவி பாரதியாரின் வைர வரிகளை வைத்து சொல் விளையாட்டு விளையாடி புதுக்கவிதைகள் வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

       எந்தையும் தாயும் !

       புத்தன் ஏசு காந்திய வழியார் 
       போதனை செய்ததும் இந்நாடே
       ரத்தக்களரியும் ஜாதிக்கொடுமையும் 
       நித்தம் நடப்பதும் இந்நாடே
       சுதந்திரம் வந்ததும் சொர்க்கம் வருமெனச் 
       சொல்லித் திரிந்ததும்
       இந்நாடே!  அட்டத் 
       தரித்திரம் எங்கள் சரித்திர வாழ்வில்
       நரித்தனம் செய்வதும் இந்நாடே!

       த.மு.எ..ச மேடைகளில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பாடல்களை மெய் சிலிர்க்க வைக்கும் வண்ணம் பாடும் நெல்லை கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் இசைப்பாடல் ஒலிநாடாவில் மேலே உள்ள கவிதைகள் வந்துள்ளன என்பது நூலாசிரியர் கவிஞர் முத்துநிலவன் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தி இது.

       மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற கவிதை வர்கள் வைத்தே, மாற்றி யோசித்து வடித்த கவிதைகள் மிக நன்று!.

       பாரதி! எங்களை மன்னிக்காதே!
       பாரத நாடு கடன் பெறும் நாடு 
       நீரதன் புதல்வர்
       நினைவிருக்கிறதா? 
       வட்டி கட்டுவீர்!
       ஆம் பாரத நாடு உலக வங்கியில் கடன் பெற்று, வட்டி கட்டிய பெரும் அவலத்தை சுட்டிய கவிதை சிந்திக்க வைத்தது.  பாராட்டுக்கள்.  ஆம்.  இந்தியா உலக வங்கிக்கு வட்டி கட்டுவது மட்டுமல்ல.  அது சொல்வதையும் கேட்டு வர வேண்டும்.
       நூலில் ஊறுகாய் போல மட்டும் காதல் கவிதைகள் உள்ளன.  சோறு அளவிற்கு சமுதாயக் கவிதைகள் இருப்பதே சிறப்பு. 
       ஒரு காதல் கடிதம்!

 காதல் எனும் வார்த்தை! 
 அன்பே! என் ஆசை! அத்தான்
 வாங்கய்யா’னு 
 முன்பே ஒரு கடிதம் 
 முந்தா நாள்
 போட்டேனே?
 இங்கே உமக்காக 
 ஏங்கி நா கிடக்கிறப்ப 
 அங்கே
 என்னய்யா 
 அம்பூட்டு வேலை?யின்னு 
 நீ போட்ட
 காயிதமும் 
 நேத்தே கிடைச்சுதம்மா! 
 பூ போட்ட
 கைக்குட்டேயே 
 பொத்தி பொத்தி வச்சிருக்கேன்.

       கவிதையை கிராமிய மொழியிலேயே எழுதி இருப்பதால் கவிதையில் மண்வாசனை வீசுகின்றது. வாசிக்கையில் மணக்கின்றது.
       நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் மரபுக்கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன? நூலாசிரியர் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் கவிதை மொழியிலேயே காண்போம்.
 எதுகை மோனை 
 இருந்தால் போதும் 
 மரபுக் கவிதை
 மறக்காது !
 புதுக்கவிதை நினைவில் நிற்காது.

       தமிழும், ஆங்கிலமும் கலந்து பாடல்கள் பாடி, அப்பாடலை இளைய சமுதாயத்தினரை, குழந்தைகளை பாடி வைத்து தமிங்கிலம் பரப்பிய பாடல் ஒன்றை சாடி எழுதிய கவிதை நன்று.
       ஏன் இந்தக் கொலைவெறி?

       ஏனிந்தக் கொலைவெறி, கொல்வெறி, கொலவெறிய்யா?
       திருக்குறள் நெறி தமிழில் இருப்பதும் தெரியலையா?
       இனிக்கும் தமிழ்வகை மூனு! மூனு! – இப்பக்
       கணினி சேர்த்தா நாலு!

       நூலாசிரியர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் சீரழிந்து வரும் சமுதாயத்தைச் சீர்படுத்தும் விதமாக வடித்த கவிதைகள் நன்று.  பாராட்டுக்கள்.



.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

கருத்துரையிடுக