புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள

மருத்துவ குறிப்புகள் !

நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17.  விலை : ரூ.100.

ஹைக்கூ கவிதைகள் வடிப்பதிலும், ஹைக்கூ தொடர்பாக ஆய்வு நூல் எழுதுவதிலும் முன்னோடியாகத் திகழும் பேராசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த படிப்பாளியும் தான்.  வாசிப்பை சுவாசிப்பு போல மேற்கொள்வதால் தான் படித்த புதுக்கவிதையில் கண்ட பயனுள்ள மருத்துவக்குறிப்புகளை மேற்கோள் காட்டி ஆய்வு நூல் எழுதி உள்ளார்கள்.  பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வரும் பேராசிரியர்.

ஒரு நூலை வாசகராக படிப்பதற்கும் ஆய்வு நோக்குடன் படிப்பதற்கும் வேறுபாடு உள்ளது.  புதுக்கவிதையில் என்ன ? உள்ளது என்று சொல்பவர்களுக்கு புதுக்கவிதையில் எல்லாம் உள்ளது என்று பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் கவிதையும் படிக்கலாம், மருத்துவக் குறிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

கரு என்ற தலைப்பில் தொடங்கி நூலாக்கத்திற்கு உதவிய நூல்கள் பட்டியல் வரை 42 கட்டுரைகள் உள்ளன.  நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரையாசிரியராகச் சேர்ந்து, விரிவுரையாளராகி, இணைப் பேராசிரியர், பேராசிரியர் என் வளர்ந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்து பின் 6 ஆண்டுகள் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

குடும்பக்கட்டுப்பாடு பற்றி நின்று மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது.  ஆனால் தந்தை பெரியார் அன்றே குடும்பக் கட்டுப்பாடு பற்றி உரைத்தவர்.  அதனை நன்கு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
“குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக்கச் சொன்னவர் தந்தை பெரியார் ஆவார்.  பல மருத்த்துவர்களையும், நீதிபதிகளையும், பெரியவர்களையும், பெண்மணிகளையும் கலந்து அவர்களது கருத்துக்களைத் தொகுத்துக் கர்ப்ப ஆட்சி என்னும் நூலை தந்தவராவார்.  அவரைத் தமிழக மால்தூஸ் என்று கூறலாம்.

அதனை,
பெரியார்
குடும்பக் கட்டுப்பாட்டைத்
தீவிரமாக்கச்
சொன்ன தமிழக
மால்தூஸ் !

என்கிறார் இளங்கலைமணி.

பலர் கவிதைகளை மேற்கோள் காட்டி, கட்டுரை எழுதும் போதும், பேசும் போதும் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை குறிப்பிடுவது இல்லை.  ஆனால் நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் ,தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களைப் போலவே மிக நுட்பமாக ஒவ்வொரு கவிதையிலும் எழுதிய கவிஞர்கள் பெயரை குறிப்பிட்டது சிறப்பு.  ஒரு படைப்பாளிக்கு மற்றொரு படைப்பாளி தரும் அங்கீகாரம் நன்று.  இந்த நூல் படித்த போது புதுக்கவிதை எழுதி இருக்கிறோம்.  ஆனால் மருத்துவக்குறிப்புகளுடன் எழுதி இருந்தால் என் பெயரும் இடம் பெற்றிருக்குமே என்று வருந்தினேன்.

பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் நூலில் உள்ளன.  பற்களை நன்கு பாதுகாத்தால், பராமரித்தால் பல்வலி வராமல் தவிர்க்கலாம். பல பயனுள்ள மருத்துவத் தகவல்கள் நூலில் உள்ளன.

ஆரோக்கியமாக வாழ வழி சொல்லும் பல கவிதைகள் நூலில் உள்ளன.  கவிதைகளுக்கான நூலாசிரியர் விளக்கம் மிக நன்று.
வெறிநாய் என்பது மிகவும் மோசமான ஒன்று.  அது கடித்து இறந்தவர்களும் உண்டு.  அது குறித்த புதுக்கவிதை ஒன்று.

வெறிநாய் கடித்தவன்
துப்பியதெல்லாம் விஷம்

என்கிறார் ஜனநேஷன்.

 மலைப்பாம்புகள் உயிரினங்களை விழுங்கும் தன் இரைக்காக. ஆனால் மனிதர்களைத் தீண்டினால், விஷத்தின் வீரியத்தால் கடித்தவர் உடலில் நீலம் பாரித்து விடும்.    கடிபட்டவர்கள் வியர்த்து நடுங்குவர்.  இறுதியில் நுரை கக்கித் துடிதுடிப்பர்.

       இதனை நன்கறிந்த தமிழன்பன்.

 மலைப்பாம்புகள்
 தீண்ட
 நீலம் பாரித்து
 நுரைகக்கித்
 துடிக்கும் நோயாளி.

       ஹைக்கூ கவிதையின் முன்னோடியான கவிப்பேரரசு ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய புதுக்கவிதையிலிருத்து மேற்கோள் காட்டியது சிறப்பு.

       இசையால் மனம் பண்படும்.  பண் ரசிக்க கவலைகள் காணாமல் போகும்.  இசையும் நோய் தீர்க்கும் மருந்தாகும்.  அதனால் தான் தமிழர்கள் தமிழிசையை அன்று முதல் பாடி வந்துள்ளனர்.  அதனை உணர்த்தும் புதுக்கவிதை நன்று.

 யாழ் நரம்பில்
 மென்விரல் வருட
 எழும் இன்னிசை நாதம்
 இசை வெள்ளமாகப் பொங்கி
 ஒலியலைகளாக உருண்டு
 நாற்புறமும் வியாபிப்பது போல.

என்கின்றார் மு.கு. ஜகந்நாதராஜா.

       இசை, மனங்களை இசைய வைக்கிறது.  மயக்குகிறது.  நல்ல இனிய இசை மனதையும் காதுகளையும் நனையச் செய்கிறது.  இதயத்தை ஆக்கிரமித்துக் காற்றால் இசை உருவாகிறது.  இசையால் வசமாகாத இதயம் ஏதுமில்லை என்பது உண்மை.

       உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றிய தகவல்கள் நூலில் உள்ளன.  காய்ச்சல் பற்றி, மூளைக் காய்ச்சல் பற்றி, இரத்த தானம் பற்றி,  நீரழிவு நோய் பற்றி, காமம், மரணம் இப்படி எதையும் விட்டு வைக்காமல் புதுக்கவிஞர்கள் புதுக்கவிதையில் உணர்த்தி உள்ளதை சரியான விளக்கங்களுடன் கட்டுரைகளாக வடித்து உள்ளார்கள்.

       ஹைக்கூ கவிதை மட்டுமல்ல புதுக்கவிதை, மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர் கவிஞர் சி. விநாயகமூர்த்தி.  அவர் உணவு பற்றி எழுதியுள்ள கவிதை இன்றைக்கு அனைவரும் உணர வேண்டிய நல்ல கவிதை.  அதனை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்த நூலாசிரியர் கவிஞர் பேராசிரியர் மித்ரா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

       உண்டு நீ கொழுப்பா யானால்
       உண்டு நோய் உணர்தல் வேண்டும்
       கண்டதை அதிகம் உண்டால்
       கொடிய நோய் உன்னை உண்ணும்
       ஊன் சுவை நாட்டம் கொண்டால்
       உள்ளமோ விலங்காய் மாறும்.

இப்படி பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன.  இந்த நூல் படித்தால் இரண்டு நன்மைகள்.  புதுக்கவிதை எப்படி? எழுத வேண்டும் என்ற புரிதல் ஏற்படும்.  நலமான வாழ்விற்கு வழி என்ன என்ற புரிதலும் ஏற்படும்.  வித்தியாசமாக சிந்தித்து மக்களுக்கு பயன் தரும் நூல் படைத்த நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

232 பக்க நூலை ரூ. 100க்கு அச்சிட்ட மணிமேகலை பிரசுரத்திற்கு பாராட்டுக்கள்.


கருத்துகள்