கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

கவிதைத் தேன்


நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு agrphd52@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இராரவி
வானதி பதிப்பகம், 23, தீனதயாளன் தெரு, தி.நகர், சென்னை-17.  விலை : ரூ. 120   
*****
            நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜ் அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் கரங்களால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்.  உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர், பண்பாளர், படைப்பாளர். “கவிதைத்தேன் என்பது நூலின் பெயர் மட்டுமல்ல காரணப் பெயர் என்றே சொல்லலாம்.  தேன் போன்றகவிதைகளை திகட்டாமல் வழங்கி உள்ளார்கள்.  பாராட்டுக்கள்.  வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு பதிப்பாக வந்துள்ளது.  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்
மு.பொன்னவைக்கோ, தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் இருவரின் அணிந்துரையும் நூல் என்ற மகுடத்தில் பதித்திட்ட வைரகற்களாக ஒளிர்கின்றன.
       பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார்.  40 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் இருப்பதால் கல்வி பற்றியும் மாணவர்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக மிக எளிமையாகவும், இனிமையாகவும், வலிமையாகவும் கவிதைகள் வடித்து உள்ளார்கள். பாராட்டுக்கள்.
       தன்னிடம் பயின்ற மாணவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது நூலாசிரியரின் உயர்குணத்திற்கு சான்றாகும்.
       புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதையை நினைவூட்டும் விதமான கவிதை மிக நன்று. 
       நூலைப்படி
       அறியாமை உனக்குள்ளே நூறுபடி
       அதைப் போக்க அன்றாடம் நூலைப்படி!
       தொடங்கையில் தோன்றுமது வருந்தும்படி
       தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி!
       கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது உண்மை.  கல்வி என்பது மிகப்பெரிய சொத்து. பிறரால் களவாட முடியாத, அசையாத, குறையாத சொத்து.  கல்வியின் மேன்மையை மென்மையாக உணர்த்தும் கவிதைகள் நன்று.
       உலகம் உனது காலடியில்
       அறுதி இட்டுச் சொல்லிடுவேன்
       அதனை மனத்தில் பதிவுசெய்
       உறுதி படிப்பில் இருந்திட்டால்
       உலகம் உனது காலடியில்!
       தமிழ்ப்பாட்டி அவ்வை ஆத்திச்சூடி எழுதினார்.  மகாகவி பாரதியாரும் ஆத்திச்சூடி எழுதினார். நூலாசிரியர் இனியன் அவர்களும் இனிமையாக ஆத்திச்சூடி எழுதி உள்ளார். 
       ஆத்திச்சூடி
       சுற்றுச் சுழல்
       அடர்காடு பெருக்கு
       ஆறுகுளம் பேண்
       இயற்கையை நேசி
       ஈ கொசு எதிரி
       உரமிடல் தீது
       ஊருணி போற்று
       எருவிடல் நன்று
       ஏரியை காத்தல் செய்
       ஐந்திணை அறிக
       ஒருவுக நெகிழி
       ஓம்புக ஓசோன்
       ஔடதம் நன்னீர்
.
       மரபுக் கவிதைகள் அதிகம், புதுக்கவிதைகள் கொஞ்சம்.  இரண்டும் கலந்த கலவை தான் கவிதைத்தேன். தேன் உடலுக்கு நன்மை தரும்.  நோய் நீக்கும்.  இந்த கவிதைத்தேன் நூல் படித்தால் மனதிற்கு நன்மை தரும். மன இரும் அகற்றும்.
       பதச்சோறாக புதுக்கவிதை ஒன்று.
       போதி மரம்
       ஓ ....
       யூகலிப்டஸ் மரமே 
       வல்லவனுக்கு வானம் கைக்கெட்டும் தூரந்தான்
       என்னும் ஞானோதயம்
       என்னுள் பிறந்த்து உன்னால் தான்
       எனவே
       நீ
       எனக்குப் போதி மரம்
.
       ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உணர்த்த வந்த உன்னத நோய் எய்ட்சு (ஏமக்குறை நோய்) இன்னும் முழுவதும் குணமாக்கும் மருந்தில்லாத நோய் பற்றி குறள் வெண்பா நடையிலான கவிதை மிக நன்று.
      

       ஏமக்குறை நோய் (AIDS)
       முப்பாலை நன்றாக முப்போதும் கற்றவர்க்(கு)
       எப்போதும் ஏதுமிலை காண்.
            ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உணர்த்திட்ட உலகப்பொதுமறை வழி நடந்தால் ஏமக்குறை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார்.
       காந்தியடிகளின் கொள்கை விளக்கமாக அமைந்த “மூன்று குரங்குப் பொம்மைகள்” தலைப்பிட்டு வடித்த கவிதை இன்றைய நவீன யுகத்தில் கடைபிடிக்க வேண்டிய கவிதை.
       மூன்று குரங்குப் பொம்மைகள்
       நல்லதை மட்டும் பார்ப்பதற்கு
              நமக்கு இரண்டு கண்ணுண்டு
       நல்லதை மட்டும் கேட்பதற்கு
              நமக்கு இரண்டு காதுண்டு
       நல்லதை மட்டும் பேசுவதற்கு
              நமக்கு நல்ல நாவுண்டு
       நல்லவராக வாழ்வதற்கு
              நல்வழி காட்டும் பொம்மையவை.
       கெட்டதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பதை, நேர்மறையாக சிந்தித்து நல்லதை மட்டும் பார், கேள், பேசு என்று கவிதை வடித்தது மிக நன்று. 
       வள்ளலார், வேண்டும், வேண்டும் என்று பாடிய நிகழ்வை நினைவூட்டியது.
       பள்ளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கியது மட்டுமன்றி இலவச மதிய உணவு வழங்கி பசியாற்றிய வள்ளலார் கர்மவீர்ர் காமராசர்.  மதிய உணவில் சாப்பிட்டு படித்து பல உயர் பதவிகள் அடைந்தவர் பலர்.  காமராசர் பற்றிய கவிதை மிக நன்று.
       படிக்காத மேதை!
       படிக்காத மேதை பழம்பெரும் தலைவரைப்
       பச்சைக் குழந்தையும் அறியும்! – பசும்
       புல்லுக்கும் நன்கு தெரியும்!
       சில கவிதைகளில் குட்டிக்கதைகள் சொல்லி நெகிழ வைத்துள்ளார் நூலாசிரியர் கவிஞர் இனியன். தொடர்ந்து எழுத வேண்டும்.


-- 

கருத்துகள்