சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் !

சிற்பியின் படைப்புலகம் !




நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ,
தமிழ்ச்சுடர்  முனைவர்  நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி

வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை. 600017.விலை ரூபாய் 100..மின்னஞ்சல்vanathipathippagam@gmail.com

நூலின் முன்  அட்டை பின் அட்டை மிக நேர்த்தியாக உள்ளன . வானதி பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது. பாராட்டுக்கள். வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளியை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் நூல் ஆசிரியர்களுக்கும் ,வானதி பதிப்பாளர் திரு .இராமநாதன் அவர்களுக்கும் வந்துள்ளது .கவிஞர் சிற்பியின் அழகிய ஓவியம் தாங்கி அட்டை மிக நன்று .ஓவியருக்கு பாராட்டுக்கள் .
இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கி உலக அளவில் தமிழன் புகழை, திறமையைப் பறை சாற்றிய இசைப்புயல் ஏ .ஆர் .ரகுமான் போல கவிஞர் சிற்பி அவர்கள் இரண்டு முறை சாகித்ய அகதமி விருது பெற்று  தமிழ்க்கவிஞர்கள் உலகிற்கு பெருமைகள் சேர்த்தவர் .
பேராசிரியர் சிற்பி அவர்களின் பன்முக ஆற்றலை படம் பிடித்துக் காட்டும் மிக நுட்பமான நூல் .

கவிஞர் சிற்பி அவர்களின் படைப்புலகம் பற்றி வந்துள்ள நூல்களில் தலையாய  நூல் எனலாம் .இந்த அளவிற்கு இவரது படைப்புகள் பற்றியும் ,அவர் பெற்ற விருதுகள்  ,அவர் எழுதிய நூல்களின் பட்டியல், சுவையான அவரது கேள்வி பதில்கள் என பல்சுவை விருந்தாக வந்துள்ளது .இந்நூல் படித்தால் கவிஞர் சிற்பி அவர்கள் மன மகிழ்வில் இன்னும் பல அரிய படைப்புகள் படைத்து   இன்னும் பல் உயர்ந்த விருதுகள் பெறுவார் என்று  உறுதி  கூறலாம்.

தகவல் களஞ்சியமாக நூல் வந்துள்ளது .நூல்ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ,தமிழ்ச்சுடர்  முனைவர்  நிர்மலா மோகன் இருவருக்கும் பாராட்டுக்கள் .கூட்டு முயற்சியாக நூல் வந்துள்ளது. இருவருமே தனித்தனியாக நூல் எழுதி புகழ் பெற்றவர்கள் இந்த நூலை இருவருமே இணைந்து எழுதி உள்ளார்கள் .இரண்டு புகழ் பெற்ற இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய திரைப்படம் போல நூல் உள்ளது .

இருவரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .மகாகவி பாரதியாரை உலகத் தமிழர் யாவரும்  இன்று புகழ்கின்றோம் .ஆனால் வாழும் காலத்தில் அவர்க்கு உரிய அங்கீகாரம் வழங்க வில்லை என்பது வருத்தமான உண்மை .ஆனால் கவிஞர் சிற்பி அவர்களுக்கு வாழும் காலத்திலேயே உரிய அங்கீகாரம் வழங்கி  உள்ள நூல் இது . மிகச் சிறந்த ஆளுமையாளர் கவிஞர் சிற்பி அவர்களைப் பற்றி படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .

 "சிற்பி பாலசுப்ரமணியம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆத்துப் பொள்ளாச்சியில்  பிறந்தவர் .பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிச் சிறந்தவர். தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சியில் தடம் பதித்த வானம்பாடி இயக்கத்தைச் சார்ந்த மூத்த கவிஞர் .  இருமுறை சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவர் .கதைக்கவிதை என்னும் வடிவத்திற்கு நிலையான பங்களிப்பினை நல்கி இருப்பவர் . "

கவிஞர் சிற்பி அவர்களின் பார்வையில் நூல் ஆசிரியர்கள் பற்றியும் பதிவு நூலில் உள்ளன ..

" மதுரை என்றதும் நினைவிற்கு வரும் இணையர்கள் பல மீனாட்சியும் சொக்கரும் , மல்லிகையும் மருக்கொழுந்தும், வையையும் அழகரும் ,நக்கீரரும் சோமசுந்தர பாரதியாரும் ,
மதுரைப் பல்கலைக்கழகமும் மற்றொரு   பல்கலைக்கழகமான தமிழண்ணலும் ,அந்த வரிசையில் இடம் பெரும் அற்புத இணையர்கள் பேராசிரியர் இரா .மோகனும் திருமதி நிர்மலா  மோகனும்."
.
பெரியோர்களை மதிப்பது  , துதிப்பது எனபது இரா .மோகனின் இயற்பண்பு .இப்பண்பு -மேலோரையும் நூலோரையும் உச்சி மேல் வைத்துக் கொண்டாடும் பண்பு இவரை வானளவு உயர்த்தி இருக்கிறது வளரும்  இளைஞர்களை ,படைப்பாளிகளைத் தட்டிக் கொடுத்துத் தாங்குவது இவருடைய அரும் பண்பு .காரை இறையடியான் முதல் கவிஞர் இரா .இரவி வரை இவருடைய பாராட்டு மழையினால் புது மலர்ச்சியும் வளர்ச்சியும் பெற்றவர்களுக்கு கணக்கே இல்லை ."  
..
கவிஞர் சிற்பி அவர்கள் முனைவர் இரா .மோகன் அவர்களின் சிறப்பியல்புகளை  நன்கு உணர்த்தி உள்ளார் .

இந்த நூலில் உள்ள கவிஞர் சிற்பியின் கவிதைகள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு மற்றவை நூல் வாங்கிப் படித்துக் காண்க .
 
இன்றைய நிலையை மிக நுட்பமாகப் படம் பிடித்துக்காட்டும் கவிதை .

அந்தக் காலத்தில் 
சாப்பிடக் கடைக்குப் போனால் 
மெதுவடை முறுகல் தோசை 
தயிர்சாதம் போளி 
அப்புறம் உதடு சிவக்க 
வெற்றிலை பாக்கு !

இப்போது எல்லாம் மாறி விட்டது .

ஆனியன் ரோஸ்ட் 
கர்டு ரைஸ் 
மெதுவடா ஆக்டா பேடா 
பீடா போடா 
தமிழ் வளர்ச்சி என்னே 
மை குட்னஸ் 
எத்தனை அபாராம் !   ( சூரிய நிழல் ப .91 )

தமிழா நீ பேசுவது தமிழா ? என்று பாடிய உணர்ச்சிக் கவிஞர் காசி அனந்தன் வரிகளை வழிமொழிந்து பாடியது அருமை .

நூலி பெயர் பக்க எண்  வரை மிகத் துல்லியமாக எழுதுவது நூல் ஆசிரியர்கள் தனிச் சிறப்பு .இலக்கிய மேடைகளில் பலரும் பயன்படுத்தி வரும் வைர  வரிகள் இதோ .

ஜீவானந்தம் உங்களுக்கு 
சொத்து எவ்வளவு இருக்கும் ?

அண்ணல் கேட்டார் .

பளிச்சென வந்தது ஜீவாவின் பதில் 
இந்தியாதான் என் சொத்து !

அருமைத் தொண்டனைக் 
கட்டிப்பிடித்து 
அண்ணலின் 
திருவாய் 
அமுதம் பொழிந்தது !

இல்லை ஜீவானந்தம் நீங்கள்தான் 
இந்தியாவின்  சொத்து !     ப 18.

கவிஞர் சிற்பி அவர்களின் படிப்புகள் என்ற கடலில் மூழ்கி முத்தெடுத்து முத்து  மாலையாக்கி இந்த நூலை வழங்கி உள்ளனர். மகாகவி பாரதி  பற்றி கவிஞர் சிற்பி எழுதிய கவிதை மிக நன்று 

காசிக்குப் போகிறவர்கள் 
விட்டு விட வேண்டுமாம் !
சிலவற்றை விட்டு விட்டேன் !
குடுமியை 
குறுகிய பார்வையை 
குருட்டு நம்பிக்கைகளை !
தலைப்பாகை தரித்தேன் 
தேசபக்தியை வரித்தேன் 
இனிது என் தாய்மொழி 
எனும் உணர்வைப் பெற 
பன்மொழி பயின்றேன் ! ( ப 1217, 1218 )

கவிஞர் சிற்பி அவர்களின் இந்த வைர வரிகளை இளைஞர்கள் வாழ்வில் கடைபிடித்தால் வாழ்வில் சாதிக்கலாம் .

உதயமென்பது விண்ணிலில்லை உன் நெஞ்சிலே !
உலகமென்பது மண்ணிலில்லை உன் தோளிலே !
சிகரமென்பது மலையிலில்லை உன் உன்  பணிவிலே !


கவிஞர் சிற்பியின் படைப்புகளை ஆய்வு செய்து முடிந்த முடிவாக முடித்த வரிகள் மிக நன்று .

முப்பெரும் பண்புகள் !

1. உணர்வுகளைச் சலனபடுத்தல்.
2. உள்ளத்தை உருக்கிக்   கண்ணீரில் ஆழ்த்தல் 
3.உள்ளத்தை  அசைத்து உயர்த்தல். 

கவிஞர் சிற்பி அவர்களின் மொழிபெயர்ப்பு ஆற்றலை வெளிபடுத்தும் கவிதை மிக நன்று .

கடிதத்தின் மரணம் !

தொலைபேசியில் என்ன இருக்கிறது 
இதயத்தின் மௌனத்தைத் தவிர 
சிதைந்துள்ள பண்டைய ஏட்டுச்சுவடி போல் 
படிக்கும் தாகத்தைத் தூண்டுகிறது கடிதம் !
.
கவிஞர் சிற்பி அவர்கள் குழந்தைக் கவிஞராக முத்திரைப் பதித்ததை உணர்த்தும் கவிதை நன்று .

கடலின் நிறம் நீலம் - அந்தக் 
கடலும் எத்தனை ஆழம் !
இலையின் நிறம் பசுமை   - அதில் 
எத்தனை வடிவம் அருமை !

கவிஞர் சிற்பி அவர்களின் கவிதை ,கட்டுரை .மொழி பெயர்ப்பு ,இப்படி பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் அற்புத நூல் .கவிஞர் சிற்பி அவர்களின் அரிய புகைப்படங்கள் எழுதிய நூல்கள் யாவும் நூல் உள்ளன .இது வெறும் நூல் அல்ல கவிஞர் சிற்பி அவர்களின் ஆவணம் .

கருத்துகள்