ஆதலினால் காதலித்தேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஆதலினால் காதலித்தேன் !

நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி !

நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி !

சிவச்சந்திரா பதிப்பகம் , சிவச்சந்திரா  இல்லம் ,5.சுப்பிரமணியர் கோயில் தெரு ,முத்தியால் பேட்டை ,புதுச்சேரி .605003. விலை ரூபாய் 120.

எரிந்த கட்சி எரியாத  கட்சி என்பது போல காதலுக்கும் இரண்டு கட்சிகள் உள்ளன .ஆதரிக்கும் கட்சி எதிர்க்கும் கட்சி .நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ஆதரிக்கும் கட்சி.இனிய தோழி யாத்விகா நூல் வெளியீட்டு விழாவிற்கு மதுரை வந்தபோது இந்த நூலை வழங்கினார் .

நூலை காணிக்கை ஆக்கிய விதத்தில் காதலுக்கு கொடி பிடித்து விடுகிறார் .

" சாதி மதங்களை   மறுத்து சமத்துவம் நாடி இருமனம் கலந்து திருமணம் புரிந்த காதலர்கள் அனைவருக்கும்  ."

அரியநாச்சி அவர்களின் அணிந்துரையும் ,கவிதாயினி புலமி அம்பிகா அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூல் எது மாதிரியும்  இல்லாமல் புது மாதிரி .புது வடிவம் .பாராட்டுக்கள் . கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் கதை ,கொஞ்சம் விதை என்று உள்ளன .வித்தியாசமாக உள்ள குறுநாவல் .தெளிந்த நீரோடை போன்று மிக நல்ல நடை .யாருக்கும்  எளிதில் புரியும் வண்ணம் உள்ளது .எழுத்து இணையத்தில் தொடர்ந்து எழுதி  வரும் படைப்பாளி.

காதல் பற்றி விளக்கம்  பல கவிஞர்கள் பல எழுத்தாளர்கள் சொல்லி உள்ளனர் ,சொல்கிறார்கள்  .இன்னும் சொல்வார்கள் .ஆனால் காதல் பற்றி விளக்கம் சரியான விளக்கம் இன்னும் யாருமே சொல்லவில்லை என்பதே என் கருத்து .காதலை அன்பு என்று  மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்கள் பொள்ளாச்சியில் பிறந்தவர் .பொள்ளாச்சியில் பிறந்த அனைவருக்கும் பிறந்த மண் பாசம் அதிகம் உண்டு அதனால்தான் பெயரோடு பொள்ளாச்சியை இணைத்துக் கொள்கின்றனர் .அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ,தமிழம் இணையத்தின் ஆசிரியர்  பொள்ளாச்சி நசன் வரிசையில் கவிஞர் பொள்ளாச்சி அபி  அவர்களும் இடம் பிடித்து விட்டார் .இவரால் பொள்ளாச்சிக்கு பெருமை .பெயர் அபி என்ற இருப்பதால் பெண் என்று எண்ணி விட வேண்டாம் எழுத்தாளர் சுஜாதா போல இவர் ஆண்தான் .

கவிஞர் வைரமுத்து அவர்கள் காதல் பற்றி எழுதிய வைர வரிகளுடன் நூல் தொடங்கி உள்ளார் . மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன் , கவிக்கோ அப்துல் ரகுமான், கவிவேந்தர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் கவிதைகளுடன் ,எழுத்து இணையத்தில்  எழுதும்  கவிஞர்கள் பாரதி சுராஜ் , ,அகாரா ,முத்து நாடன் , பிரபா பன்னீர் செல்வம் ,எஸ் .ராஜேந்திரன் ,நவீன் குமார், சங்கரன் அய்யா ,காளியப்பன் ,எசேக்கியல் ,இன்போ அம்பிகா,ரமேஷ், தூ.சிவபாலன் ,கவிதாயினி கோமதி ,( மதி ஓவியம் )நாணல் ,தம்பு ,
சி. பொற்கொடி,பொ.கவியமுதன் ,ஹரிஹரி நாராயணன் ,   புலமி அம்பிகா, பாஷா ,ஜமீல் ,அனிதபாலா ,நிலா சூரியன் ,ஜாவித், மியான்டெட் ,ரௌத்திரன் ,அகன் ,அனுசரண் ,தமிழ்தாசன் ,ஆகியோர் காதல் பற்றி எழுதிய கவிதைகள் தொகுத்து நூலில் பதிவு செய்துள்ளார் .கவிதைகள் படிக்க சுவையாகவும் சுகமாகவும் உள்ளன .அனைவருக்கும் பாராட்டுக்கள் .

கவிக்கோ அப்துல் ரகும்மான் கவிதை நூலின் இறுதியில் உள்ளது.சிந்திக்க வைத்தது .

கீதை இந்துக்களையும் 
குரான் முஸ்லீம்களையும் 
பைபிள் கிறித்துவர்களையும் 
படைத்தது போதும் 
இவை இனியேனும் 
மனிதர்களைப் படைக்கட்டும் !

காதலை எதிர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அற்புத வரிகள்.

நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபியின் கவிதை மிக நன்று .

மங்கை உன்னைக் 
காதலித்த பின்புதான் 
மானுடத்தைக் காதலித்தேன் !
நீதான் என்னை மாற்றினாயடி !
ஒரு மனிதனாய் தேற்றினாயடி !

நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி காதலின் ஆற்றலை நன்கு பறை சாற்றி உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களின் மலரும் நினைவுகளாக மலர்கிறது நூல் .பள்ளிப் பருவம் ,கல்லூரிப் பருவம் சந்தித்த தோழிகள் பற்றி பெயர்களுடன் , நினைவாற்றலுடன் நன்கு பதிவு செய்துள்ளார் .காதல் என்றால் திரைப்படங்களில் காட்டுவது போல அல்லாமல் யாரும் மீது அன்பு செலுத்துவதே காதல் என்கிறார்.பெண் எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய எழுத்தை விரும்பியதால் அவர்களையும் காதலித்தேன் என்கிறார் .தோழிகள் அனைவரையும் காதலித்தேன் என்கிறார் .இவருடைய அகராதியில் காதல் என்றால் அன்பு என்கிறார் .வித்தியாசமான விளக்கம் நன்று. அன்பு தான் இன்றைய தேவை .அன்பால் உலகில் அமைதி நிலவும். நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .


.
.

கருத்துகள்