குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் 
வாழ்க்கைக் குறிப்புகள் !

( மழலைச் சுவடுகள் தொகுதி -5 )

தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் !
இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர்  கன்னிக்கோவில் இராஜா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


மலர் பதிப்பகம் ,எண் 5.ஆண்டியப்பன் தெரு ,முதல் சந்து ,பழைய வண்ணாரப் பேட்டை ,சென்னை 600021.பேசி 9884711802. விலை ரூபாய் 70.
.
கவிமாமணி இளையவன் அணிந்துரை மிக நன்று .வரவேற்பு வாயிலாக உள்ளது .குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் மிகவும் குறைவு .அவர்களை இனம் கண்டு பேசி ,பாடல்கள் வாங்கி மிகவும் சிரமப்பட்டு  50 கவிஞர்கள் முகவரி ,அலைபேசி எண்கள் , பெற்ற சிறப்புகள் அவர்கள் எழுதிய பாடல்கள் யாவும் நூலில் உள்ளன.

தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம், இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர்  கன்னிக்கோவில் இராஜா இருவரின் கடின உழைப்பை  உணர  முடிகின்றது . குழந்தை இலக்கிய பாடல்கள் எழுதுவோரின்  தொகுப்பு நூல் .

குழந்தைகள் பாடல்களுக்கு சிறப்பிடம் என்றும் உண்டு .இந்த நூல் படித்தபோது குழந்தைகள் பாடல்கள் நாம் எழுத வில்லையே நாமும்  எழுதி இருந்தால் இந்த நூலில் இடம் பெற்று இருக்கலாம் என்று மனம்  வருந்தினேன் ..முன்பு இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர்  கன்னிக்கோவில் இராஜா அவர்கள்  ராஜா என்ற பெயரில் உள்ள கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து நூல் வெளியிட்டார். அப்போது நம் பெயரில் இராஜா இல்லியே என்று வருந்தினேன் . 

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் 50 கவிஞர்கள் விபரமும் , பாடலும் உள்ளன .குழந்தைப் பாடல்கள் தேவைப்படுவோர் இவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக நூல் உள்ளது .பாடல்கள் நெறி புகட்டும் விதமாக உள்ளன .அடுத்த பாட திட்டம் தயாரிக்கும் போது இந்த நூல் பாடல்களைப்  பயன்படுத்தலாம் . 

வருங்காலத்தில் வருவோரும் படைப்பாளிகள் பற்றி அறிந்து கொள்ள ஆவணப் படுத்தப்பட்ட அற்புத நூல் .தொண்டு உள்ளத்துடன் தொகுத்த ஆசிரியர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் . 
பாடல்கள் மிக மிக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளன. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பயன்படும் கருத்துக்கள் 

நவீன உலகில் குழந்தைகளை நன்கு வளர்த்திட இந்த நூல் உதவும். இந்த நூலை வாங்கி குழந்தைகளின் பிறந்த நாளின் போது பரிசளித்து படிக்க வைத்தால் தமிழும் தமிழ் நெறியும் அறிந்திட வாய்ப்பாகும்.
அனைத்துக் கவிஞர்கள் பாடல்களும்  சிறப்பாக இருந்தாலும் 
பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ !

அன்பை வலியுறுத்தும் பாடல் மிக நன்று .

அன்பு செலுத்து கண்ணே ! கவிஞர் வே .அருணாதேவி!

அன்பு என்ற ஒன்றினால்    .
அகில உலகைச் சுற்றலாம் !

பண்பு கூட இருந்திடின் 
பாரில் எல்லாம் கற்கலாம் !

எண்களை எழுதி அதோடு கருத்தும் விதைக்கும் உத்தி மிக  நன்று  .

காந்தி போல உயரு ! கவிஞர் அழகுதாசன் !

ஒன்று இரண்டு சொல்லு !
உண்மை பேசி வெல்லு !

மூன்று நான்கு  சொல்லு !
உடலால் உறுதி கொள்ளு !

ஆங்கிலத்தில் வணக்கம் நன்றி சொல்லி வரும் குழந்தைகளுக்கு தமிழ்ப் பற்று விதைக்கும் பாடல் நன்று .

தமிழ் வணக்கம் ! கவிஞர் எழிலன்  ( வாசல் )

வணக்கம் என்றே சொல்லு - தம்பி !
வண்ணத் தமிழது தெரிந்தே நீ  
வணக்கம் என்றே சொல்லு !

மாதா பிதா குரு என்பதை வரிசைப்படுத்தி எழுதிய பாடல் நன்று .

நால்வர் ! கவிஞர் கருவை மு .குழந்தை !

தன்னலம் அற்றவர் அன்னை !
சான்றாண்மை மிக்கவர் தந்தை !

பன்னலம் தருபவர் ஆசான் !
பலனெதும் கருதா நேயர் ( நண்பர் )

இனிக்கும் நா ! கவிஞர்  கன்னிக்கோவில் இராஜா !

நூல் நூல்  - சிறந்த நூல் !
ஐயன் தந்த - குறள்  நூல் !

பெயர் பெயர்  - என்ன பெயர் !
நா இனிக்கும் - தமிழ்ப்பெயர் !  

தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சியை பெற்றோர்கள் பார்ப்பது மட்டுமன்றி குழந்தைகளையும் பார்க்க வைத்து பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு விதைத்து வரும் அவலம் சுட்டும் பாடல் நன்று .
ஓடியாடி விளையாடு ! கவிஞர் கார்முகிலோன் !

உடலும் உள்ளமும் உறுதி கொள்ளவே !
ஓடியாடியே நாளும் விளையாடு !

தொல்லை தந்திடும்  தொலைக்காட்சி நிகழ்வை !
தொடர்ந்து பார்ப்பதை துணிந்து தடை போடு !

தமிழ் எழுத்தோடு கருத்தும் கற்பிக்கும் பாடல் நன்று !

அறிவாய் தம்பி !கவிஞர் இரா பன்னீர் செல்வம் !

அன்பும் கருணையும் மனிதநேயம் !
ஆற்றலும் உழைப்பும் மனிதவளம் !

இன்முகம் வாழ்த்தும் வளம் தரும் !
ஈகையும் மன்னிப்பும் நலம் தரும் !

தமிழ் மொழி இன்று ஊடக மொழியால் சிதைக்கப்பட்டு அது பேசும் மக்களையும் தோற்றி விட்டது .தமிங்கில மொழி எங்கும் பேசி வருகின்றனர் .இந்த நூல் படித்தால் குழந்தைகளுக்கு தமிழ் மொழி மீதான அன்பு பிறக்கும் .ஆங்கிலம் கலந்து பேசுவதை மறக்கும் .

கருத்துகள்