ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் எழுத்தாளர் திருச்சி சந்தர் !

ஆயிரம் ஹைக்கூ !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் எழுத்தாளர் திருச்சி சந்தர் !

காவியக் கவிஞர் வாலியின் நண்பர் !

தங்கள் ஆயிரம் ஹைக்கூ தொகுப்பினை படித்துக் கொண்டே இருக்கிறேன் .இது விமர்சனமல்ல இன்றைய சமுதாய அமைப்பினை நிதர்சனமாக வெளிப்படுத்தியமைக்கு ஒரு பாராட்டு .

முத்துப் பால்கள் -ஆயிரம் ஹைக்கூ !
அட்டைப் படத்தில் இரு வரியில் முப்பால் எழுதிய வள்ளுவரைப் போட்டு விட்டு மூவரியில் முப்பாலை முத்துக் குவியலாய்த் தந்துள்ளார் கவிஞர் இரா .இரவி.
.
அவர் மூச்சடிக்கி  ஆழ்கடலில் முக்குளித்து எடுத்த ஆயிரம் 
முத்துக்களை  என் முன் கொட்டி உள்ளார் .அதனையும் அள்ளிக் கொள்ள ஆசைதான் .என்றாலும் எனக்கு மிகமிகப் பிடித்த முத்துக்கள் மட்டும் பிரித்தெடுத்து   மாலையாக்கி அணிந்து கொண்டேன். அழகாய்த்தானே இருக்கிறேன் .

நானும் இரவியும் நல்ல நண்பர்கள் .என்றாலும் எதிரிகள் .ரவி சூரியன். நான் சந்திரன் .அவர் இருந்தால் நான் இல்லை .நான் இருந்தால் அவர் இல்லை .எங்களை இணைத்தவர் மகாகவி பாரதியே !

சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா 
சூரிய சந்திரரோ !

நான் ரசித்த முதுப்பால்கள் ;

தடுக்கிவிழுந்ததும் 
தமிழ் பேசினான் 
அம்மா !

அம்மாவுக்கும் , தமிழுக்கும் மணிமகுடம் !

உள்ளுரில் இனவெறி 
வெளிநாட்டில் நிறவெறி 
உலக அமைதி கேள்விக்குறி !

புரிந்தால் சரி !

அங்கீகரிக்கப்பட்ட 
சூதாட்டம் 
பங்குச்சந்தை !

மதுவைவிடக் கொடியது !

உண்டு கொழுத்தால் 
நண்டு வளையில் தங்காது 
போலிச் சாமியார்கள் !

சாமி - யார் ? நல்ல விளக்கம் ! 

நினைவு ஊட்டியும் 
மறந்து விடுகின்றனர் 
பகுத்தறிவை !

அறிவு மழுங்கிப் போனதால் !

சொத்துக்களை விட 
சிறந்தவர்கள் 
நண்பர்கள் !

அறத்துப்பால் !

தியாக தீபங்கள் 
தேய்ந்த சந்தனங்கள் 
முதியோர் இல்லங்களில் !

மணக்கிறது !

கொலை செய்தவனை 
கொலை செய்தது அரசு 
தூக்குத்தண்டனை !

எரிகிறது நீதி !

உண்மையிலும் உண்மை 
குரங்கிலிருந்து மனிதன் 
அரசியல்வாதிகள் !

காட்டு தர்பார் !

ஒரு நாள் இன்பம் 
அய்ந்து வருடங்கள் துன்பம் !
ஓட்டுக்கான லஞ்சம் 

வருகிற தேர்தலை நினைவூட்டும் மூவரிகள் !

விழித்த 
விதை  
விருட்சம் !

இயற்கைக்கும் தேவை விழிப்புணர்வு !

தூங்கிய  
விதை  
குப்பை   !

இயற்கைக்கும் தேவை விழிப்புணர்வு !

காணிக்கை  கேட்காத 
கடவுள் 
அம்மா ! 

மிகச் சிறந்த முத்து .பொறுப்பான பொருட்பால்  !

இதழ்கள் வழி 
இனிமைப் பதிவு 
முத்தம் !

இன்பத்துப்பால் !

ஒருவனுக்கு ஒருத்தி 
இராமனின் மனைவிக்கு 
அறுபதாயிரம் மனைவிகள் !

ஒருவனுக்கு ஒருத்தி -வாழ்வியல் ! மற்றொருத்தி தீ -பாழ்வியல் ! 

அணில் கோடு 
வறுமைக்கோடு 
அழிவதே இல்லை !

பகுத்தறிவு !

சக்கர வண்டியில் சென்றேனும் 
வாழ்க்கை சக்கரத்தை உருட்டுபவர்கள் 
மாற்றுத்திறனாளிகள்  !

தன்னம்பிக்கை !

கணவனை இழந்தவள் 
விதவை சரி 
மனைவியை இழந்தவன் ?

ஆண்மையின் வன்மையில் சூடு பறக்கிறது !

பிணமானபின்னும் 
காசு மீது ஆசை 
நெற்றியில் நாணயம்  !

பேராசைப் பேய்களுக்கு  நல்ல சவுக்கடி !

வேலையில்லை 
பூட்டு  சாவிக்கு 
ஏழை வீடு !

வறுமையின் வலிவான விளக்கம் !

அந்நியக் கலாச்சாரம் 
பண்பாட்டுச் சீரழிவு 
முதியோர் இல்லம் !

இன்றைய இளைய சமுதாயத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் ஹைக்கூ .

அன்று நானே கள்வன் 
மாண்டான் அரசன் 
இன்று !

அநீதிக்குப் புகட்டும் நீதி !

சாக்ரடீஷ் ,பெரியார் போன்றவர்கள் மறைந்து விட்டார்களே என மனம் தடுமாறியபோது முறையாக மறையாத வாரிசாக நானுள்ளேன் என்று ஹைக்கூ வேதம் ஒதுகிறாயோ இரா .இரவி .

சிந்தித்துக்  கொண்டே வாழ்கிறாரோ  ? வாழ்ந்து  கொண்டே   
சிந்திக்கிறாரோ ?

எல்லோர் இதயமும் லப் டப் என்று துடிக்கும் என்பார்கள் .இவர் இதயம்  ஹை.... க் ....கூ  எனத்துடிப்பதேன் !

மூவரிக்  கவிஞரே ! ஒன்றுக்கு பின்னால் மூன்று பூஜ்ஜியங்கள்   போதாது .   இன்றைய சமுதாயச் சீரழிவைத் தடுத்திட பூஜ்ஜியங்கள்   தொடரட்டும் .

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com 
184 பக்கங்கள் விலை ரூபாய் 100. 

கருத்துகள்