" தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை" நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

"  தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை" 

 நூல்   ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை 

இணை ஆசிரியர் வழக்கறிஞர் செல்வ  கோமதி.சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் , 

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 150 .நீதிபதி பகவதி பவன் .143.ஏரிக்கரை சாலை .கே .கே .நகர் .மதுரை .625020. தொலைபேசி 0452- 2583932 மின்னஞ்சல்   socotrust82@gmail.com

.இனிய   நண்பர்  நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை ,
இணை ஆசிரியர் வழக்கறிஞர் செல்வ  கோமதி.சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர்இருவரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .இந்த நூல் வெளியீட்டு விழாவில் நீதி அரசர் சிவராஜ் பாட்டீல் குறிப்பிட்டதைக் குறிப்பிட்டாலே நூலின் சிறப்பு விளங்கும் .

" இந்த நூல் ஆய்வு நூல் ,ஆவண நூல் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் . கன்னட மொழியில் மொழி பெயர்க்க நான் முயற்சி செய்கிறேன் .25 நூல்களை விலைக்கு வாங்கி நண்பர்களுக்கு தர உள்ளேன் . இந்த நூல் எல்லா நூலங்களிலும் இடம் பெற வேண்டும் .பஞ்சாயத்து அலுவலங்களிலும் இந்த நூல் இருக்க வேண்டும் , கொத்தடிமை நாட்டில் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் . "

உலகம் முழுவதும் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் இந்திய அரசியல் சாசனம் ஏட்டளவில் ஒழித்துவிட்டப் போதிலும் கொத்தடிமை முறை இன்றும் நடைமுறையில் உள்ள அவலத்தை பல்வேறு ஆய்வுகள் மூலம்  ஆதாரங்கள் முலம் ,புள்ளி விரங்கள் மூலம் நூலில் விளக்கி உள்ளனர் .  

இந்த நூலின் ஆசிரியர் ப .திருமலை மூத்த பத்திரிகையாளர் மனிதநேயம்மிக்கவர் ,நெஞ்சுரம் உள்ளவர் .இந்த நூலின் இணை ஆசிரியரான வழக்கறிஞர் செல்வ  கோமதி.சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனராக இருந்து கொத்தடிமைகளை வட  நாட்டில் இருந்து மீட்டு வந்தவர் .

ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு துணை நின்ற நூல்களின் பட்டியலும் நூலில் இடம் பெற்றுள்ளன  .குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் உள்ளது .ஆனால் நாட்டில் நடைமுறையில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் முற்றிலும் ஒழியவில்லை .அதுபோல கொத்தடிமைகள் முறை ஒழிப்பு சட்டம் உள்ளது ஆனால் நாட்டில் நடைமுறையில் கொத்தடிமைகள் முறை இன்னும் முற்றிலும் ஒழியவில்லை  என்ற கருத்தை மெய்ப்பிக்கும்  விதமாக நூல்  உள்ளது .மனிதநேய ஆர்வலர்கள் கவலை கொள்ளும் விதமாக தகவல்கள் உள்ளன .கசப்பான உண்மைகள் நூலில் உள்ளன .

நூலில் பல்வேறு தகவல்கள் இருந்தபோதும் பதச் சோறாக சில மட்டும் .
இந்தியாவை ஆண்ட அடிமைகள் !
" இந்திய   வரலாற்றின் போக்கை இரண்டு அடிமைகள் மாற்றி அமைத்து இருக்கின்றனர் .அதில் ஒருவர் அடிமை வம்சத்தை இந்தியாவில் ஆட்சி புரியச் செய்த சுல்தான் குத்புதீன் ஐபக்  .இன்னொருவர்  தமிழகம் வரை படை நடத்தி வந்து கதிகலங்க வாய்த்த மாலிக் கபூர் .இருவருமே விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள்தான் .தங்களது எஜமானின் விருப்பத்திற்கு உரியவர்களாகி மாறி அதிகாரத்தினுள் நுழைந்து சந்தர்ப்பங்களைத்  தங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு அதிகாரத்தின் உச்சத்திற்கு வந்தவர்கள் ."

1948  இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அடிமை முறை சட்டத்திற்கு மாறானது என்று அறிவித்தது .

இந்தியாவில் அடிமை முறையின் வடிவம் சாதி ,தீண்டாமை ,என அடிமைத்தனம் தன் வடிவத்தை மாறிக் கொண்டே தொடர்ச்சியாக இன்று வரை வரலாற்றில் நீடிக்கிறது .என்பது ஆய்வாளர்கள் கருத்து .
  
அடிமைகளைக் கொல்லவும் , விற்கவும் ஆண்டைகளுக்கு  உரிமை இருந்தது .இருப்பவன் இல்லாதவர்களைப்  பலவந்தமாக  வேலை வாங்கினான் .ஒருபுறம் கடுமையான அடக்குமுறை .  மறு  பக்கம் உபரி உற்பத்தி ,அதிக விளைச்சல் ,குடியிருப்பு ,கைத்தொழில் வளர்ச்சி முறைகளும் தோன்றின .ஆளும் வர்க்கத்தை ச்  சேர்ந்த பலர் உடல் உழைப்பிலிருந்து விடுபட்டு அறிவுத்துறையில் ஈடு பட்டனர் .

நூலினைப் படிக்கும்போது கொத்தடிமைக் கொடுமையை வெள்ளித் திரையில் ஓவியமாகத் தீட்டிய இயக்குனர் பாலாவின் பரதேசி படம் நினைவிற்கு வந்தது .இதுதான் நூல் ஆசிரியர்களின் வெற்றி .ஒரு செய்தி படிக்கும்போது அது தொடர்பான மற்ற செய்தி நினைவிற்கு  வர வேண்டும் .இதுதான் படைப்பாளியின் வெற்றி .

திருமூலரின் திருமந்திரத்திலும் அடிமை குறித்து கூறிய  குறிப்புகள் நூலில் உள்ளன .

அடியார் அடியார் அடியார் அடிமைக்கு 
அடியானாய்   நல்கிட்டு   அடிமையும்  பூண்டேன் 
அடியார்  அருளாய் அவனடி கூட  
அடியான் இவன் என்று அடிமை கொண்டானே !

பிற்காலச்  சோழர்கள் காலத்தில் தொடர்ந்த அடிமைகள் .பல வரலாற்று உண்மைகள் நூலில் உள்ளன .

வரலாற்றுச் சிறப்பு மிக்க  திருமலை  மன்னர் அரண்மனை கட்டிய  திருமலை  மன்னர்  காலத்திலும் இருந்த அடிமைகள் பற்றிய செய்தி உள்ளது .திருமலை  மன்னர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட செப்பேட்டில் ,குமரன் என்ற நாவிதர் ஒருவர் இருப்புலி என்ற ஊரிலிருந்த  கவுண்டர்களை விலைக்கு வாங்கி வந்து ஊத்தனுரில்   வீடு கட்டி குடியேற்றிய  தைக் குறிப்பிடுகிறது .

மறுமலர்ச்சி ஏற்பட்ட தகவல்களும் நூலில் உள்ளன .அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய மாபெரும் புரட்சி போதனைகளால் , சாதிக்கு எதிரான கருத்துக்களால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன .மேலாடை அணியக் கூ டாது   என்று கட்டாயப் படுத்தப் பட்ட பெண்கள் தைரியமாக மேலாடை அணிந்து வீதிகளில்  உலா வந்தனர் .இப்படி பல வரலாற்று உண்மைகள் நூலில் உள்ளன .

காலங்காலமாக நிலவுடைமை யாளர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்த பண்ணையடிமைகளின்  இரத்தக் கண்ணீர்தான் 1968 இல் தஞ்சை மாவட்டம் கீழ வெண்மணி சம்பவம் .

கொத்தடிமை முறை காரணங்களும் வடிவங்களும் நூலில் மிக விரிவாக விளக்கி உள்ளனர் .

கொத்தடிமைக்கான  காரணங்கள்  !
ஒருவர் கொத்தடிமை யாவதற்கு ஏழ்மை ,திருப்பிச் செலுத்தமுடியாத கடன் ,கல்வி இல்லாமை ,வேலை இல்லாமை ,நிலவுடைமை இல்லாமை , சாதீய  பாகுபாடு ,உயிர் சாதியினரின் அழுத்தம் ,வெறுமையின் காரணமாக இடம் பெயர்தல்  போன்ற பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன .இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை .

வேலையில்லாத் திண்டாட்டம் !
தமிழகம் உள்பட நம்நாட்டில் படிப்பை முடித்து விட்டுப் புதிதாக வேலை தேடுவோர் பட்டியலில் ஆண்டிற்கு 86 லட்சம் பேர் சேர்ந்து  கொண்டு இருக்கிறார்கள் .தமிழகத்தில் படித்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை 54 லட்சம் .இதில் பெண்கள் மட்டும் 17 லட்சம்.எட்டு பேருக்கு ஒருவர் தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கிறார் . வேலை இல்லாத் திண்டாட்டத்தில் தமிழகம் முதல் இடத்தில இருப்பது பெருமைக்குரியது அல்ல .வேலையில்லாததால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனையானது ஒருவரை எந்த வேலை செய்யவும் தயார் என்ற நிலைக்குத் தள்ளுகிறது . இதுதான் அடிமை முறைக்கு வழி  வகுக்கிறது .

படிக்காத பாமர்கள் மட்டுமல்ல படித்த பொறியாளர்களையும் அடிமையாக நடத்தும் அவலம் நாட்டில் நடந்து வருகிறது .நவீன அடிமுறை நிகழ்ந்து வருகிறது .ஒரு நிறுவனம் அதிகம் வேலை வாங்கிக் கொண்டு  குறைவான   ஊதியம் வழங்கி விட்டு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு எங்களிடம் வேலை பார்க்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி விட்டு வேறு நிறுவனம் செல்லக் கூடாது என்று கொத்தடிமையாக நடத்தும் அவலத்தை தொழிலாளர் நல  அதிகாரிகளும்  கண்டு கொள்வ்தில்லை  .
.
நாட்டில் எந்த வடிவில் இருந்தாலும் கொத்தடிமை ஒழிக்கப்பட வேண்டும்  என்ற விழிப்புணர்வை விதைக்கும் விதமாக நூல் உள்ளது நூல் ஆசிரியர்களுக்கு  பாராட்டுக்கள் .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்