தமிழில் புதிய முயற்சி லிபுன் ! கவிஞர் இரா .இரவி

தமிழில் புதிய முயற்சி 

லிபுன் !   கவிஞர் இரா .இரவி 

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இன்று என் கண் முன் இங்கு வந்தாள் .கண்டதும் காதலா ? கேலி பேசியதுண்டு .ஆனால் எனக்கும் கண்டதும் காதல் வந்தது உண்மை .என் பார்வையை விட்டு அவள் அகன்ற போதும் ,அவளது அழகிய விழிகளை மறக்க முடியவில்லை .என் விழிகளைத் திறந்தாலும் , மூடினாலும் அவளது விழிகளே வந்து வந்து போகின்றது .

அவளுக்கு மீன் விழிகள்
பார்த்ததும் விழுந்தேன் காதல் வலைகள்
மறக்க தெரியவில்லை வழிகள்

லிபுன் !    கவிஞர் .இரா .இரவி 

மலர்க்கண்காட்சி யின் உள்ளே நுழைந்தான் .பார்த்தான் பரவசம் அடைந்தான் .இத்தனை வண்ணங்களா ? வியந்தான் .இயற்கையின் இனிய கொடை எண்ணங்களை இனிமையாக்கியது.மலர்களில் எந்த மலர் சிறந்த மலர் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் .
ஒவ்வொரு மலரும் ஒருவித அழகு .வாழ்நாள் குறைவு என்றாலும்,வாடாமல் சிரிக்கும் மலர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டான் . மலர்க்கண்காட்சி காண்பது மனதிற்கு மகிழ்ச்சி ,குளிர்ச்சி என்பதை உணர்ந்தான் .

மனதை வருடும் மலர்க்கண்காட்சி
மண்ணில் மலர்ந்த மலர்களின் ஆட்சி
பரவசம் பார்த்தவர்கள் சாட்சி
.
லிபுன் !   கவிஞர் .இரா .இரவி

காதல் ஜோடி இருவர் .ஆனால் அருகே பலர் .நேரடியாகப் பேசிக் கொள்ள முடியாத சூழ்நிலை .இருவரும் அருகில் உள்ள பலருக்கும் தெரியாமலே விழிகளாலே பல பேசினார்கள் .சம்மந்தப்பட்ட இருவருக்கும் நன்கு புரிந்தது .ஆனால் அருகில் இருந்த எவருக்கும் எதுவும் புரியவில்லை .காதல் மொழி பேச இதழ்கள் வேண்டாம் .விழிகளே போதும் என்று பேசிவிட்டு இருவரும் விடைப்பெற்று சென்றனர் .காதலி என்ன சொன்னாள்.காதலன் என்ன சொன்னான் என்பது இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் .

பேசும் அவள் விழிகள்
காதல் மொழி நாளும் சொல்லும்
ஒய்வு எடுத்தன இதழ்கள்

லிபுன் !   கவிஞர் இரா .இரவி

மனைவியின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை சட்ட விரோதமாக தெரிந்து கொண்ட கணவன் ,கருவைச் சிதைக்க மருத்துவரிடம் வேண்டினான் .பெண் சிசுக் கொலை தொடர்வதால் பெண்ணின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது. எனவே , வேண்டாம் சிசுக் கொலை .தாயாகவும் மனைவியாகவும் பெண் வேண்டும் என்போர், மகளாக பெண் வந்தால் இனிய மனதுடன் ஏற்க முன் வர வேண்டும் .எனவே சிசுக்கொலை செய்ய மாட்டேன் என்றார் மருத்துவர் .

வேண்டாம் பெண் சிசுக்கொலை
வேண்டும் பெண் இனம் என்றும்
மாறவேண்டும் மக்கள் மனநிலை

லிபுன் !   கவிஞர் இரா .இரவி

தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற நிலை இன்று .பள்ளி இல்லாத ஊரிலும் மதுக்கடை திறக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை .பண்டிகை நாட்களில் பல கோடி வருமானம் மதுக்கடைகளுக்கு .உழைத்து வந்தப் பணத்தை குடித்து வீணடிப்பது முறையோ ? சிந்திப்பீர் .குடிகாரனை சமுதாயத்தில் யாருமே மதிப்பதில்லை .குடித்து தன் மதிப்பை தானே இழக்கலாமா ?
குடி குடியை மட்டும் கெடுக்க வில்லை .குடி மதியையும் கெடுக்கும் .

மதியை மயக்கும் போதை
மன நிம்மதி அழிக்கும் மது
தவறாகும் செல்லும் பாதை

.

லிபுன் !   கவிஞர் இரா .இரவி 

வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி முடித்து ,புது மனை புகு விழா நடத்தினார் .வந்த நண்பர் சொன்னார் சமையலறை இருக்க வேண்டிய இடத்தில் குளியலறையும் ,குளியலறை இருக்க வேண்டிய இடத்தில் சமையலறையும் கட்டி இருக்கிறீர்கள் .வாஸ்து பார்த்துக் காட்ட வில்லையா ?என்றார் .வீடு கட்டியவரோ மனம் வருத்தப் பட்டார் .நண்பரை விழாவிற்கு ஏன் ? அழைத்தோம் என்று . 

வாஸ்து என்பது மூடநம்பிக்கை 
விரயம் செய்வது வீண் வேலை 
வேண்டும் மனிதருக்குத் தன்னம்பிக்கை
.

கருத்துகள்