நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! செல் 9894058651
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
உலா பதிப்பகம் ,30/23,ஜெ .எம் .வளாகம் ,சின்னக் கடை வீதி ,திருச்சி .620002
விலை ரூபாய் 40.மின்னஞ்சல் ulapathippagam@gmail.com
நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் குறுந் தகவல் இதழ் ஆசிரியர் .தினந்தோரும்  மாற கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளை பலருக்கும் அனுப்பி வருபவர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .பல்வேறு சிற்றிதழ்களிலும் எழுதி வருபவர் .

.பாறையின் கதவு ! நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .நூலாசிரியரின் நண்பரும் ,திரையிசைக் கவிஞருமான வசந்த ராஜாவின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .
நம் நாட்டில் அரசியல்வாதிகள் மக்கள் வறுமையை ஒழிப்பதாக  சொல்லிக் கொண்டு தொடர்ந்து  அய்ந்தாண்டு திட்டங்கள் தீட்டி வருகின்றனர் .அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப வறுமையை ஒழித்து வளமாகி விட்டனர் .ஆனால் மக்கள் வறுமையும் கொசுவும்  அப்படியே உள்ளது ஒழியவில்லை அதனை உணர்த்தும் ஹைக்கூ  மிக நன்று .

குடிசை வீடு 
கிழிந்த போர்வை 
கொசுக்களுக்கு ரத்ததானம் !

ஏழ்மையை காட்சிப் படுத்தி சிந்திக்க உள்ளார் .
கிணறு ,நிலா பற்றி பல கவிஞர்கள் பல ஹைக்கூ கவிதைகள் எழுதினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவே இருக்கும் .நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ்  அவர்களின் ஹைக்கூ .

எட்டிப்பார்த்தேன் 
தூக்கிவிடச் சொன்னது 
கிணற்றில் விழுந்த நிலா !

கோடிகளை ஊதியமாகப் பெரும் கோடம்பாக்கத்து நடிகர்களின் கட் அவுட்டிற்கு பெற்றோரிடம் பெற்ற பணத்தில் பாலபிசேகம் செய்யும் ரசிகனின் அறியாமையை உணர்த்தும் ஹைக்கூ .
கன்றிற்கில்லா பால் 
போனது 
கட் -அவுட்டிற்கு !
தந்தை பெரியார் சொன்னார் .பெண்ணே பட்டுச் சேலை ,தங்க நகை ஆசையை ஒழி என்றார் .ஆனால் பெண்களுக்கு பட்டுச் சேலை மீதும் தங்க நகை மீதும் ஆசை மட்டும் குறைவதே இல்லை .பல படித்த பெண்களும் கூட சராசரிப் பெண்ணாகவே ஆசைப்படுகின்றனர் .படிக்காத ஏழைப் பெண்ணும் ஆசைப்படுகிறாள் .

பருத்தி எடுப்பவளை 
படுத்தியெடுத்தது 
பட்டுச்சேலை கனவு !

நினைத்தாலே இனிக்கும் உன்னத பலா பற்றி சுவையான  ஹைக்கூ .
அறுத்து கூறு போட்டாலும் 
இனிப்பைத் தருகிறது 
பலா !
இன்னா செய்தாரை என்ற திருக்குறளை வழிமொழிந்து ,மரத்தின் மேன்மையை உணர்த்தி ஒரு ஹைக்கூ .
கல்லெறிந்தேன் 
கனி கொடுத்தது 
மரம் !
சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவம் ,நிலையாமையை உணர்த்தும் விதமாக உள்ள ஹைக்கூ .
ஆயிரம் பிணங்கள் விழுங்கியும் 
பசியுடன் கிடக்கிறது 
இடுகாடு !

ஹைக்கூ கவிதையில் மூன்றாவது  வரியில் விடை இருக்க வேண்டும் .அந்த விடை வாசகன் எதிர்பார்க்காத விடையாக  இருக்கும் .இது ஹைக்கூ நுட்பம் .
எந்த தப்பும் பண்ணாமல் 
உதைபட்டுக் கொண்டேயிருக்கிறது 
கால்பந்து !
அதே நுட்பத்துடன் மற்றும் ஒரு ஹைக்கூ இதோ .
அதிகாரமிருந்தும் 
ஆட்சிக்கு வரவில்லை 
திருக்குறள் !
ஆட்சியாளர்களுக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது திருக்குறள் .
சூரியன் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுப்பதில்லை .சூரியன் ஒய்வு எடுத்தால் நமக்கு விடியாமல் போய் விடும் ..நாம் பிரகாசிக்க தூண்டுகோள் வேண்டும் .

யார் தூண்டுவது 
எரிந்து கொண்டேயிருக்கிறது 
சூரிய தீபம் !
புத்தர் ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் .ஆனால் புத்தரை கடவுளாக வணங்கும் சிங்களர் சிலர் இலங்கையில் பேராசைப்பட்ட காரணத்தால் இன்று அவமானத்தையும், அழிவையும் சந்தித்து வருகின்றனர் .மனிதன் ஆசையை ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும் .

புரட்டிக் கொண்டேயிருக்கிறேன் 
தீராமலிருக்கிறது 
ஆசைப் புத்தகத்தின் பக்கங்கள் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைய உள்ளது .நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள்.காவிரி ஆறு போல உங்களிடமிருந்து ஹைக்கூ ஆறு  பெருகட்டும் .

ஹைக்கூ கவிதைகள் மூன்று வரிகள் இருப்பதுதான் சரி .சில கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது .அடுத்த பதிப்பில் மூன்று வரிகளாக செதுக்கி விடுங்கள் .இன்னும் சுவை கூடும் .
--

கருத்துகள்