சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

சுட்டும் விழி

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

சுட்டும் விழியின் சுடர் பார்வை

 கவிஞர் இரா .இரவி  அவர்கள் ஒரு ஹைக்கூ சிந்தையாளர் .அவர் காண்பதிலும், கேட்பதிலும் ,படிப்பதிலும் அவரது நெஞ்சை வருடும் செய்தி ஹைக்கூ கவிதை ஆகிவிடும் . 
ஹைக்கூவால்  கவிஞரும் ,கவிஞரால் ஹைகூவும் பக்கு
ப்பட்டு இருப்பது  மகிழ்ச்சி அளிக்கிறது.

   கவிஞரே குறிப்பிட்டு இருப்பது போல சமுதாய விழிப்புணர்வை விதைப்பதற்காகவே அவர் ஹைக்கூ கவிதைகளைப் படைத்துக் கொண்டு இருக்கிறார் .இந்நூலில் அவர் விதைத்துள்ளவிழிப்புணர்வு ஹைக்கூ கவிதைகள் ஏராளம் .இயற்கையைப் புறந்தள்ளாத -தள்ளமுடியாத படைப்பு இலக்கியமே நிலைத்து நிற்கும் .    விழிப்புணர்வு ஹைக்கூ கவிதைகளோடு பல அகத்துறை கவிதைகளும் இந்நூலில் மலர்ந்துள்ளன .இந்நூலில் 162 ஹைகூவில் 7காதல் கவிதைகள் நூலுக்கு அழகு கூட்டுகின்றன.

    எக்காலமும் அழியாத காதல் மச்சமாய் ,முத்தமாய் ,ஊடலாய் .கூடலாய் ,மலரும் நினைவுகளாய் நயாகரா போல நடனமிட்டு நம்மிடயே நடந்து வரும் காட்சி அற்புதம் .
கண்ணதாசன் ,வைரமுத்து அளவிற்கு வடித்து உள்ளார் .கவிஞரின் அடுத்த இலக்கு ஹைகூவில் ஒரு காதல் காவியமாகக் கூடஇருக்கலாம்.


மயிலையும் அன்னத்தையும்
நடனத்திற்கும் நடை அழகிற்கும் உவமை கூ றும்  மரபினிலிருந்து மாறுபட்டு  ஒரு புதுமைக் காட்சியை கவிஞர் இரா .இரவி நம் கண் முன் நிறுத்துகிறார் .

நடமாடும் நயாகரா
நடந்து வரும் நந்தவனம்
என்னவள்

இனிமையும், புதுமையும் கலந்த ஓர் அற்புதம் .

கூட்டுக்குடும்ப வாழ்க்கைக் காணாமல் போய்க் கொண்டு இருக்கிற இத்தருணத்தில் அதன் மகிமையை மூன்றுவரிகளில் ஆழமாகச் சித்தரித்து உள்ளார் .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க 
முதியோர் இல்லத்தில் பாட்டி

தாத்தா பாட்டிகளோடு வாழ்ந்த இன்றைய அப்பா அம்மாக்கள் ஏன் ? தங்கள் குழந்தைகளும் அந்தப் பேரின்பத்தை அடைய வழி  செய்ய வில்லை !
குழந்தையோடு நாமும் ஏங்குகிறோம் .
இந்த நூலுக்கு மகுடமாக வாய்த்து இருப்பது பறையின் அதிர்வை நம் உள்ளத்தில் ஒலிக்கச்  செய்யும் ஹைக்கூ தான் .

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை

ஒரு மாட்டின் தோலை மட்டும் இந்த பறை கோபமாகச் சொல்லவில்லை .    
ஆண்டாண்டாய் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஒரு சமுதாயத்தின் குமுறலாய் அதிர்கிறது பறை ! ஒரு தலித் காவியமே இந்த பறையின் அதிர்வில் கேட்கிறது .
மேலும் மேலும் ஹைக்கூ கவிதைகளைப் படைத்தது தமிழுக்குப்  புது உரம் சேர்க்கும்படி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவியைக் கேட்டு அவரை வாழ்த்திப் பாராட்டுகிறேன்  

கருத்துகள்