வளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

வளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

மூல நூல் ஆசிரியர். கவிக்கடல் இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம் : கவிஞர் இளவல் ஹரிஹரன் எம்.காம்.பி.எல் 

அட்டைப்படத்தில் உள்ள மெல்லிய கோடுகளே நம் கண்முன் கவிக்கடல்
இரவீந்திரநாத் தாகூரை கொண்டு வந்து விடுகின்றது. நூலின் பெயர் தான்
வளர்பிறை. ஆனால் முழு நிலவாக கவிதை விருந்து வைத்துள்ளார்.தமிழாக்கம்
செய்த கவிஞர் இளவல் ஹரிஹரன் இவர் பரப்பரப்பான பத்திரத் துறையில்
பதிவாளராக பணிபுரிந்து கொண்டே கவிதைகள் பல எழுதி, பாரதிதாசன் விருது
உள்பட பல பரிசுகள் பெற்றவர். பழகுவதற்கு இனிமையானவர் முதன் முதலில்,
“வெளிச்சத்தை வெளிக் கொணருவோம்” என்ற தொகுப்பு நூலின் மூலம், நான் உள்பட
பல கவிஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த கவிஞர். சங்கம் வைத்து தமிழ்
வளர்த்த மதுரைக்காரர்.

மகாகவி பாரதியின் கூற்றை மெய்பிக்கும் வண்ணம் பிறமொழி இலக்கியங்களை
மொழிபெயர்த்து தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் வெற்றி
பெற்றுள்ளார். நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த
வங்கக்கவி இரவீந்திரநாத் தாகூரின்,காலத்தால் அழியாத கல்வெட்டுக் கவிதைகளை
அழகு தமிழில் மொழிபெயர்த்து தமிழன்னைக்கு புதிய அணிகலன் பூட்டி உள்ளார்.
வளர்பிறை உரையையே கவிதையாக வடித்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கிய வரைபடத்தில் இந்தியாவை முன்னிறுத்திய
இந்தியக் கவிஞர், தம் இலக்கியத்திற்காக இணையற்ற பரிசு பெற்ற இதயம் பரந்த
கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்.

இப்படித் தொடங்கி மொழி பெயர்த்து சுந்தரத் தமிழில் இலக்கியச் சுவையோடு
தருகின்றார்.நூல் ஆசிரியர் மரபுக் கவிஞர் என்பதால் கவித்துவம் குன்றாமல்
நுட்பமாக எழுதி உள்ளார்.

40 தலைப்புகளில் கவிதை உள்ளது. சங்க இலக்கியத்தில் வரும் இனியவை
நாற்பது,இன்னா நாற்பது போல இனிக்கின்றது. எளிமையாக உள்ளது. எல்லோருக்கும்
புதிய வண்ணம் உள்ளது. புரியாத கவிதை எழுதவில்லை,அதற்காக பாராட்டுக்கள்.

மாலை விளக்குகளுடன்
தாயின் இதயத்துடன்
தொட்டிலும் படுக்கையும்
அமைக்கப் பெற்ற
கணக்கற்ற வீடுகள்
தன் கரங்களுக்குள் சூழ்

இவ்வடர்த்தியான இருண்ட பூமி என்முன் பிரிந்து கிடப்பதைப் பார்த்தேன் நான்.
பூமியின் மீது அமைந்துள்ள வீடுகளை நம் கண்முன் காட்சிப்படுத்தி
விடுகின்றார். குழந்தைகளை மிகவும் நேசிப்பவர் கவிஞர் ரவீந்திரநாத்
தாகூர்.குழந்தைகளின் மனம் புரிந்தால் தான் கவிதை இனிக்கும். குழந்தைகளின்
கள்ளங்கபடமற்ற உரையாடலை, விளையாட்டை படம் பிடித்து காட்டுகின்றார்.
குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.அதனை
உணர்த்தும் கவிதை வரிகள் இதோ!

குழந்தையின் கண்களிலிருந்து
தூக்கத்தை திருடியது யார்
எனக்குத் தெரிய வேண்டும்
கண்டுபிடித்து அவனைக்
கை விலங்கிட வேண்டும்.

தாய்,சேயை பாசத்தோடு முத்தமிடும் காட்சியையும்,அதன் பயனையும் விளக்கிடும்
வைர வரிகள்.

நீ புன்னகைப்பதற்காக நான் உன் முகத்தை
முத்தமிடும் பொழுது என் அன்பே காலையிளங் கதிரொளியில்
வானிருந்து எத்தனை இன்ப ஊற்றுக்குள்
பெருக்கெடுத்தோடுகின்றன எனப் புரிந்து கொள்கிறேன்.

குழந்தையின் சிறப்பு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பாடியதை
வழிமொழிவது போல உள்ளது கவிதை வரிகள். என் நினைவிற்கு வந்த திருக்குறள்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

நூலின் பெயர் வளர்பிறை என்பதால் குழந்தைகளைப் பற்றிய கவிதை வளர்ந்து
கொண்டே செல்கின்றது.குழந்தை அறியாமல் சிறு தவறு செய்து விட்டால்,
பெரியவர்கள் சினம் கொண்டு உரக்கக் கத்தி கூச்சலிடுவதைக் காண்கிறோம்.
ஆனால் இரவீந்திரநாத் தாகூர் குழந்தைகளின் மீது பாசமழை பொழிகின்றார்.

எழுதும் பொழுது உன் விரல்களில் மைக்கறை கொண்டு
பூசி விட்டாய் என்பதால் உன்னை அவர்கள்
அழுக்கானவன் என்று அழைக்கிறர்களா?
ஓ….குழந்தாய் முழு நிலவின் கை முழுதும்
குறை பூசிக் கொண்டதால்
நிலவை அழுக்கெனச் சொல்ல துணிவிருக்கிறதா?அவர்களுக்கு

குழந்தைகளின் சேட்டையை ரசித்து நிலவை ஒப்பிட்டு சமாதானப்படுத்துகின்றார்
கவிஞர். குழந்தை மலராக மாறி, தாயை ரசிப்பது போல, கற்பனை செய்து கவிதை
வடித்துள்ளார். குழந்தைகளை வீட்டில்,படி!படி!என்று தொல்லை
கொடுக்கின்றோம்.ஆனால் இரவீந்திரநாத் தாகூர் என்ன சொல்கிறார் பாருங்கள்.

அம்மா அட்டத்தில் என் புத்தகங்கள் அனைத்தையும்
வைத்து விட்டேன் எனது பாடங்கள் செய்ய
என்னைப் பணிக்காதே இப்போது
என் தந்தையைப் போல வளர்ந்து பெரியவனாகும் போது
கற்க வேண்டிய எல்லாவற்றையும் கற்றுக் கொள்வேன் நான்.

குழந்தைகள் காகிதக் கப்பல் விடுவதைப் பார்த்து இருக்கிறோம்.ஆனால் அதில் தனது பெயரையும்,ஊரையும் பெரிய எழுத்துக்களில் எழுதி, ஓடும் நீரோடையில் விட்டு,குழந்தை ரசிப்பதையும்,அவ்வாறு செல்லும் காகிதக் கப்பலை பார்ப்பவர்கள் என்னையும்,என் ஊரையும் அறிவார்கள் என குழந்தை மகிழ்ச்சி கொள்ளும் விதத்தில் குழந்தையாகவே மாறி கவிதை வடித்துள்ளார். நோபல் நாயகனின் மூலக் கவிதையை,சற்றும் சிதையாமல், சிரத்தையும் செந்தமிழில் கவித்துவம் குறையாமல், இலக்கியச் சுவையுடன்,இளகிய மனதுடன், இனிமையாக வளர்பிறையை மறக்கமுடியாத நினைவுகளாக வடித்து, தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் இளவல் ஹரிஹான் பாராட்டுக்குரியவர். தமிழர்களும் கவிக்கடல் தாகூரை அறிந்திட வெளிச்சம் போட்டு உள்ளார்.

கருத்துகள்