நெஞ்சத்தில் ஹைக்கூ


தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்











புதிய காற்று வழங்கிய மதிப்புரை ; ( - - - - / மு.செல்லா

கவிஞர் இரா.இரவியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. ஏற்கனவே இவரது "விழிகளில் ஹைகூ" "உள்ளத்தில் ஹைகூ" என்ற இரண்டு ஹைகூ கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.

நவீன கவிதை வடிவங்களில் சிறியவர், பெரியவர், அதிகம் படித்தவர், ஓரளவே படித்தவர் என்ற பேதம் இன்றி அனைத்துத் தரப்பினராலும் பரவலாக வரவேற்று வாசிக்கப்படுபவை குறும்பா என்னும் ஹைகூ கவிதைகளாகும். ஆளமான செய்திகளையும் சுருக்கென்று ஒருசில வார்த்தைகளிலேயே நம்முள் பதிய வைத்துவிடுபவை என்பதால் இதற்கான வரவேற்பு நாட்டின் எல்லைக்ள தாண்டி மொழிகளைத்தாண்டி அமைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.

தமிழில் ஹைகூக்களின் மீதான சோதனை முயற்சி மிகச் சமீபத்திலானது என்றாலுமகூட வீரயம் மிக்க நல்ல கவிதைகள் அதிகம் தென்படத்துவங்கியுள்ளன. தமிழில் தேர்ந்த ஹைகூ கவிஞர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் இரா.இரவி. இவரது கவிதைகள் பல்வேறு மேடைகளில், இணைய தளங்களில், ஒருபடி மேலே போய் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பிடித்துள்ளதே இவரது கவிதைத் திறனுக்கு சிறந்த சான்றாகும். "நெஞ்சத்தில் ஹைகூ" என்ற இந்நக் கவிதைத் தொகுதியின் மூலம் கவிஞர் ஹைகூ கவிதைகளின் ஆர்வலர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கிறார்.

தமிழில் முதுபெரும் எழுத்தாளரும், தனது "புதுக்கவிதைகள் - தோற்றமும் வளர்ச்சியும்" என்ற ஆய்வு நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றவரும், மிகச் சிறந்த ஆய்வறிஞருமான வல்லிக் கண்ணன் அவர்களின் அணிந்துரை நூலுக்கு சிறப்பு சேர்ப்பதாகவும், மணிமகுடமாகவும் திகழ்கிறது. "இனிய ஹைகூ" இதழின் ஆசிரியரும் கவிஞருமாகிய மு.முருகேஷின் மதிப்புரையும் இந்நூலுக்கு அளகு சேர்த்துள்ளது.

அழகியல், காதல், இயற்கை, பகுத்தறிவு, அறிவியல், சுயமுன்னேற்ற கருத்துக்கள், சமூக அவலங்களின் மீதான சாடல் என அனைத்து நிலைகளிலும் இவர் ஆக்கியுள்ள கவிதைகளின் தொகுப்பாகவும் இது மலர்ந்துள்ளது. அவற்றில் பலவும் வசீகர மணத்தை வெளிப்படுத்தியுள்ளது கூடுதல் சிறப்பாகும்.........................















இனிய நந்தவனம் வழங்கிய மதிப்புரை ; ( இனிய நந்தவனம் / கவிஞர் பீர்முகமது, சந்திரசேகரன்)








இது ஹைக்கூ காலம். இன்று இளந்தலை முறையினரால் மிகவும் உற்சாகமாக ஹைக்கூக்கள் எழுதப்படுகிறது என்று ஹைக்கூ கவிஞர்களை உற்சாகப்படுத்தும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் அணிந்துரையுடன் கவிஞர் இரா. இரவியின் சமீபத்திய வெளியீடாய் வெளி வந்திருக்கிறது நெஞ்சத்தில் ஹைக்கூ என்ற கவிதை நூல். நூலின் கட்டமைப்பும் முகப்பு அட்டையும் மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது. கண்ணில் படுகின்ற எல்லாவற்றையும் கவிதைகளாய் வடித்திருப்பது பாராட்டக்கூடியதே. ஆனாலும் சில கவிதைகள் தான் மனதில் நிற்கும்படி அமைந்துள்ளன. சில கவிதைகள் தினசரி செய்தித்தாள்களின் தலைப்பைப் போலவே வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். சொல்ல வந்த கருத்து சிறப்பாக இருந்த போதிலும் வார்த்தைகளை இன்னும் செரிவுபடுத்தி இருக்கலாம். நிறைய கவிதைகளை தரும் கவிஞர் இரவி, இன்னும் நிறைவான கவிதைகளைத் தர வேண்டும் என்பது என் கருத்து. தருவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கவிதைகளுக்கென முதல் இணையதளத்தைத் தந்த கவிஞர் இரவியின் கவிதைகளை இன்று உலகத்தமிழர்கள் பலரும் வாசித்து வருகிறார்கள் என்பது இவருக்கு கிடைத்த தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.




தென் செய்தி வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / தமித்தலட்சுமி)
"படிப்பு எதற்கு?
அடுப்பூதும் பெண்களுக்கு
செருப்பாலடி சொல்பவனை'

என்று வருகிறது ஒரு ஹைக்கூ. இதில் ஆசிரியரின் கோபம், கொந்தளிப்பு, வேகம் தெரிவது இருக்கட்டும்! ஆனால் சில பெண்களே பெண்களுக்கு எதிராக இந்த ஆண்கள் கூட்டணியில் உள்ளனரே! அவர்களை என்ன செய்யப் போகிறார் ஆசிரியர்?

"தாழ்த்தப்பட்டவன் விளைவித்த
பஞ்சில் உருவானது
அர்ச்சகர் பூணுல்'

மூன்றே வரிகளில் ஏற்றத்தாழ்வின் எதிரொலி! பளிச்சிடுகிறது.

தீபாவளிக்குத் தப்பி
ரம்ஜானுக்கு மாட்டியது ஆடு'

வலிக்கும் வரிகளில் இயல்பான உண்மை!

இதுபோல் இயற்கை, சமுதாயம், ஆணாதிக்கம், தமிழ்ப்பற்று, குழந்தைகளின் மனநிலை என்று நிறையப் பார்க்க முடிகிறது. அதில் சில வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. மொத்தத்தில் வாசகர்களுக்கு எது எளிதில் புரியும் என்று தெரிந்து ஹைக்கூவை மனதில் பதிய வைத்துள்ள கவிஞர் இரா. இரவிக்கு பாராட்டுக்கள்.

கருத்துகள்