பாரதிராஜா- காலத்தை உறைய வைத்த கலைஞன். ச. பிரபு சண்முகம்
♦️
இயக்குனர் இமயம் பாரதிராஜா இறந்துவிட்டார் என்கின்ற செய்தி எனக்கு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் சென்ற வருடம் மார்ச் மாதம் அவருடைய ஒரே மகன் மனோஜ் எதிர்பாராத விதமாக இறந்தபோதே அவர் அன்றே மனதளவில் இறந்து விட்டார். அவரைப் போன்ற மனிதர்கள் உயிரைத் தாண்டிலும் உணர்ச்சிகளை மதிப்பவர்கள்.
Cinema Paradiso என்ற புகழ்பெற்ற திரைப்படத்தில்.. இடிக்கப் போகும் ஒரு திரையரங்கில் அமர்ந்து கொண்டு கடைசியாக ஒரு திரைப்படம் பார்த்த ஒரு ரசிகன் போல இன்று செய்தி வந்தவுடன் அவருடைய கிளாசிக் திரைப்படங்களின் சில மறக்க முடியாத காட்சிகளை மீண்டும் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தேன்.
பாரதிராஜா என்கின்ற பெரும் கலைஞன் நம்மிடையே தோன்றி வாழ்ந்து மறைவதெல்லாம் ஒருவகை கொடுப்பினை தான். அவரைப்போல உணர்வுத் தளத்தில் திரைமொழியை கையாளுபவர் தோன்றுவது எப்போதாவது ஒருமுறைதான். எங்கள் தலைமுறையில் நாங்கள் பாரதிராஜா இயக்கத்தில் வைரமுத்து வரிகளில் இளையராஜா இசையில் பாடல்களை கேட்டு பார்த்து மகிழ்ந்தோம் என்பதெல்லாம் உண்மையிலேயே வரம் தான்.
சினிமா ஸ்டுடியோக்களில் அடைந்து கிடந்த தமிழ் சினிமாவை விடுதலை செய்து வெளியே அழைத்துச் சென்று வயல்வெளிகளிலும் ஆற்றங்கரைகளிலும் கிராமத்து தெருக்களிலும் புழுதி காடுகளிலும் உலவ வைத்தவர் பாரதிராஜா.
30க்கும் மேற்பட்ட அவரது திரைப்படங்களில் காதலை அவர் கையாண்ட விதம் போல தமிழ்நாட்டின் வேறு எந்த இயக்குனரும் இதுவரை கையாண்டதில்லை. பதின் பருவத்து காதலுக்கு ஒரு அலைகள் ஓய்வதில்லை., நடுத்தர வயது காதலுக்கு ஒரு கடலோரக் கவிதைகள், முதிர்வயது காதலுக்கு ஒரு முதல் மரியாதை என அவர் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு காதல் கதையை சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவரது முதல் படமான 16 வயதினிலே காதல் என்பது வெறும் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல, மனதை சார்ந்தது என்பதை காவியத் தனமாக எடுத்துக் கூறியது. அவரது காதல் ஓவியங்கள்- நிறைவேறாத காதலின் தவிப்பை பற்றியது. அவரது கல்லுக்குள் ஈரம் - ஒரு தலைக் காதலின் அவஸ்தையை பற்றியது. அவரது மண்வாசனை- உறவுமுறைகளுக்குள் சிறுவயதில் இருந்து எழுகின்ற காதலைப் பற்றியது.
குறிப்பாக அவரது இயக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் கடலோரக் கவிதைகள். அந்த முட்டம் கடற்கரையும், ஓங்கி உயர்ந்து விண்ணை தொடுகின்ற அந்த தேவாலயமும் இன்றளவும் நம் மனதில் அலையடிக்க வைப்பவை.
குறிப்பாக.. அதில் வருகின்ற வசனங்கள்.
"கல்யாணம்னு சொல்றீங்களே.. பெண்ணுக்கிட்ட இத பத்தி சொன்னீங்களா..??
பெண்ணின் தகப்பனார்:
நாம என்ன அவளை கிணத்துலயா பிடிச்சு தள்ளிட போறோம் ??
அதுக்கு அவளை கிணத்திலேயே தள்ளி இருக்கலாம்."
இப்படி படம் முழுக்க ரசனை மிக்க காட்சியமைப்புகள்.
அதேபோல முதல் மரியாதை. இந்தப் படத்தைப் பற்றி தனி புத்தகமே எழுதிவிடலாம். அவ்வளவு இருக்கிறது. இன்றளவும் தமிழின் ஆகச்சிறந்த காவியங்களில் முதல் மரியாதைக்கு முக்கியமான இடம் இருந்து கொண்டே இருக்கிறது.
தன் படங்கள் முழுக்க அசத்தலான எடிட்டிங் காட்சி அமைப்புகளோடு, குறியீடுகளோடு திரை மொழியை உருவாக்குவதில் வல்லவர் பாரதிராஜா. முதல் மரியாதை திரைப்படத்தில் இந்த யுத்தியை இளையராஜாவின் இசை உதவியோடு பரவலாக பயன்படுத்தி இருப்பார்.
அவருடைய வேதம் புதிது மிக முக்கியமான ஒரு திரைப்படம். அது எந்த அளவுக்கு முக்கியமானது என்றால்..வேதம் புதிது போன்ற ஒரு திரைப்படத்தை இன்று நினைத்தாலும் எடுக்க முடியாது என்கிற அளவுக்கு துணிச்சல் மிகுந்த கதை அமைப்பு. சுயசாதி மறுப்பும், மனித நேயமும் இணைகிற அந்த காவியக் கணங்களை நம் கண் முன்னே தரிசனமாக்கி உலவ விட்டிருப்பார். வேதம் புதிது "சரிதா கதாபாத்திரம்" அதிகம் பேசப்படாத அற்புதம்.
அரசியல் அடிமைத்தனத்திற்கு சாட்டையடி கொடுக்கும் என் உயிர் தோழன் அப்போது அதிகாரத்தில் உச்சத்தில் இருந்த திராவிடக் கட்சிகளுக்கு மிகப்பெரிய விமர்சன திரைப்படமாக அமைந்தது.
இன்றைக்கும் எண்பதுகளின் கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதற்கு அவரது திரைப்படங்களே ஆவணங்கள். ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் என்னென்ன சடங்குகள் என்னென்ன முறைப்படி நடக்க வேண்டும் என்பதை மண்வாசனை திரைப்படத்தில் அணு அணுவாய் காட்சி அமைப்பில் செதுக்கியிருப்பார்.
கடந்து போன ஒரு காலத்தில் நினைவுகளாக தேங்கிவிட்ட இது போன்ற பண்பாட்டு விழுமியங்கள் பாரதிராஜா திரைப்படங்களில் மட்டுமே ஆவணங்களாய் பாதுகாக்கப்பட்டு பத்திரமாக்கப்பட்டிருக்கின்றன.
திரைக்கதை அமைப்பில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் உணர்ச்சிமிக்க மனிதராக பாரதிராஜா திகழ்ந்தார். காவிரி பிரச்சனை உச்சத்தில் இருந்த போது காவிரி நீர் தர மறுக்கின்ற கர்நாடகத்துக்கு தமிழ்நாட்டின் மின்சாரம் அளிக்கக்கூடாது என நெய்வேலிக்கு சென்று போராடியவர். ஈழத்தின் இறுதி நாட்களில் தமிழ் ஈழ ஆதரவு இயக்குனர்களை அழைத்துக் கொண்டு வீதி வீதியாக காங்கிரசுக்கு எதிராக பரப்புரை செய்தார். அவர் அந்தக் காலத்தில் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் வழங்கிய ஆகப்பெரும் கொடை.. அண்ணன் செந்தமிழன் சீமான்.
பாரதிராஜா திரைப்படங்களைப் பற்றி ஒரு கதாகாலட்சேபம் போல பாரதிராஜாவிடமே சொல்லிக் காட்டும் ஒரு வாய்ப்பினை திரைப்பட தயாரிப்பாளர் ஆருயிர் நண்பர் சுரேஷ் காமாட்சி ஒருமுறை எனக்கு அவரது பிறந்தநாளில் ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது படங்களில் உள்ள முக்கியமான காட்சிகளை அவரிடமே விரிவாக எடுத்துச் சொல்கின்ற ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கேட்டுக் கொண்டிருந்தவர்.. ஒரு கட்டத்தில் "இந்த காட்சிகளை எல்லாம் எடுக்கும் போது, நீ பேசுவது போல எல்லோரும் பேசுவார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எடுக்கவில்லை. அப்படியே இயல்பாக எடுத்ததுதான்." என்று தன்னடக்கத்தோடு சொன்னார். அதற்குப் பிறகு அண்ணன் சீமான் பிறந்த நாளில் நேரடியாக சந்தித்தபோது கட்டி அணைத்துக் கொண்டார். அப்போதுதான் அவர் காதில் ஒரு கேள்வி கேட்டேன். காதலை உருக உருக இப்படி எடுத்து வைத்திருக்கிறீர்களே.. உங்கள் காதலியின் பெயர் என்ன..??
கேள்வி தவறு என்றார்.
"காதலிகள்" என்று சொல்லி சத்தமாய் சிரித்தார்.
அந்த காலகட்டத்தில் நண்பர் சுரேஷ் காமாட்சி எங்களை எல்லாம் வைத்து இயக்குனர் இமயத்திற்கு ஒரு விழா எடுக்க ஏற்பாடு செய்தார். ஒரு மேடை.
நடுவில் ஒரே ஒரு சிம்மாசனம். அதில் இயக்குனர் இமயம் மட்டுமே அமர்ந்திருப்பார்.
அவருக்கு எதிரே ஒரு சிறிய மேடை. நாங்கள் அதில் பேச வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு இருந்தோம்.
அதற்குப் பிறகு மோசமான அவரது உடல் நிலையும் காலச் சூழலும் ஒத்துழைக்கவில்லை.
எந்த நொடியிலும் பாரதிராஜாவை அவரது செல்லுலாய்ட் காவியங்கள் மூலமாக நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம் என்பது மட்டுமே அந்தப் பெருங்கலைஞன் நமக்கு செய்து விட்டுப் போயிருக்கிற கடைசி கருணை.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்து இந்திய வரைபடத்தில் எட்டிப் பார்த்தாலும் கிட்டி விடாத அல்லிநகரம் என்ற ஒரு சிற்றூரில் இருந்து சின்னசாமி என்ற இளைஞன் கருத்த உடலோடு கனவு விழிகளோடு சென்னையில் காலடி எடுத்து வைத்த போது.. கண்டிப்பாக எந்த அதிசயங்களும் நிகழவில்லை.
ஆனால் அந்த மனிதன் பாரதிராஜாவாக வாழ்ந்து முடிந்த போது.. அதிசயமாய் வாழ்ந்து விட்டு முடிந்திருக்கிறார்.
தெற்கத்தி கரிசல்காட்டு காடுகளும், முட்டம் கடற்கரை பேரலைகளும், இன்றைய நாளில் சிலிர்த்து அடங்கியிருக்கும்.
கனவுலகிலேயே தேங்கிவிட்ட வெள்ளை தேவதைகள் இன்றைய தினம் கருப்பு ஆடை அணிந்திருப்பார்கள்.
ஆனால் பாரதிராஜாவோ.. ஆகாயத்தின் மறுபக்கத்திற்கும் சென்று.. ஏதோ ஒரு தேவதூதனிடம் காதல் கதை ஒன்றை உணர்வு பூர்வமாக சொல்லிக் கொண்டிருப்பார்.
காலத்தை ஒரே இடத்தில் உறைய வைத்த அந்தக் கம்பீர பெருங்கலைஞனுக்கு..
எனது கண்ணீர் வணக்கம்.
⚫
ச. பிரபு சண்முகம்

கருத்துகள்
கருத்துரையிடுக