என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !

என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி ! சௌந்தரராஜன் என்பது பெயர் மட்டுமல்ல ! சௌந்தரமான குரலின் ராஜன் நீ ! உனது தாய் மொழி தமிழ் இல்லை ! உச்சரிப்பில் உச்சமே உன் எல்லை ! உனது தாய் மொழி சௌராஷ்டிரம் மொழி ! உனது வாய் மொழி செம்மொழி தமிழ் மொழி ! கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை ! காதுகளில் தேனாகப் பாய்ச்சியவன் நீ ! கவியரசு கண்ணதாசனின் கருத்துக் கல்லை ! கண் கவரும் சிலையாக வடித்த சிற்பி நீ ! மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களிடமும் முத்திரைப் பதித்த சகலகலா வல்லவன் நீ ! எம் .ஜி .ஆர் . சிவாஜி இரு துருவத்திற்கும் ! இரண்டு குரலில் இனிமையாகப் பாடிய ஒருவன் நீ ! பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை பாடலுக்கு பட்டுக் கட்டியவன் நீ ! மக்கள் திலகம் எம் .ஜி .ஆருக்கு நூறு சதவிகிதம் ! முற்றிலும் என்றும் பொருந்தியது உந்தன் குரலே ! வேறு பலர் அவருக்குப் பாடி ப் பார்த்தார்கள் ! விரும்பவில்லை ரசிகர்கள் கூட்டம் ! செவாலியர் சிவாஜியின் சிறப்பான நடிப்பை ! சிம்மக்குரலில் கர்ஜித்துப் பாடியவன் நீ ! யாரை நம்பி நான் பிறந்தேன் பாடலின் மூலம் ! யாருக்கும் பிடித்தவன் ஆனாய் நீ ! மலர்ந்து மலராத பாடல் மூலம் ! மக்கள் மனதை கொள்ளை அடித்தவன் நீ ! பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி ! கோடிகளுக்கு மேல் ரசிகர்களை உனக்கு ! தானாகவே மரணம் வந்தது உன் உடலுக்கு ! தனி இடம் உண்டு என்றும் உன் குரலுக்கு ! மதுரையில் மாநாடுப் போல நடந்தது ! மண்ணின் மைந்தன் உந்தன் பாராட்டு விழா ! ஒலிநாடாவிற்கும் உனது இசை நிகழ்ச்சிக்கும் ! ஒரு வேறுபாடு கூட என்றும் இருந்ததில்லை ! படிக்காத பாமர்கள் பலருக்கும் தமிழ் படிப்பித்த பாடல் ஆசான் நீ ! உழைப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு ! படிப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு ! ஒரு காலத்தில் நேயர்களின் சொர்க்கமாக இருந்த ! இலங்கை வானொலியில் எப்பவும் ஒலித்தது உன் பாடலே ! ஒப்பற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடி ! உலகத் தமிழர்களை எழுந்து நிற்க வைப்பவன் நீ ! உயிர் உன் உடலை விட்டு பிரிந்திட்டப் போதும் ! உயிராய் வாழும் ரசிகர்கள் உள்ளத்தில் உன் பாடல் ! உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும் ! பாடலால் என்றும் வாழ்வாய் எங்களிடம் !

கருத்துகள்