படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

*உலக கடித தினம் இன்று..,* ஆண்டுதோறும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக, கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. தற்போது நாம் பெரும்பாலும் கைப்பட கடிதம் எழுதுவதே இல்லை. கடிதம் எழுதும் தினம் என்பதால் இன்று சில வரிகள் எழுதி பார்த்தேன். கணினி விசைப்பலகையில், அலைபேசி திரையிலும் தட்டச்சு செய்து பழக்கப்பட்ட விரல்கள் இயல்பாக ஒத்துழைக்கவில்லை. இருந்தும் இப்படியாக சில வரிகளை, இணைப்பில் உள்ளதை எழுதினேன். கடிதம் எழுதுவது பல நூற்றாண்டுகளாக உள்ளது. பண்டைய எகிப்து மற்றும் கிரேக்க காலங்கள் தொட்டே இருந்தது. அந்த நேரத்தில், உலோகம், ஈயம், மெழுகு பூசப்பட்ட மரம், மண்பாண்ட துண்டுகள், விலங்குகளின் தோல் மற்றும் பாப்பிரஸ் போன்ற பொருட்களில் கடிதங்கள் எழுதப்பட்டன. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், குறிப்பிட்ட செய்தி, தகவல் அல்லது வாழ்த்துக்களை அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மற்றவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், குறிப்பிட்ட பாடங்களைப் பற்றிய விமர்சன சிந்தனையை உருவாக்கவும் கடிதங்களைப் பயன்படுத்தினார்கள். கடந்த காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பல கடிதங்கள் வரலாற்றாசிரியர்களுக்கான தனிப்பட்ட மற்றும் இராஜதந்திர தொடர்புகளின் காப்பகமாக செயல்பட்டன. வரலாற்றில் எத்தனை நிகழ்வுகள் நடந்தன, எப்படி நிகழ்ந்தன என்பதை தீர்மானிக்க, அனுமானிக்க கடிதங்கள் பயன்பட்டன.மெல்ல மெல்ல கடிதங்கள் ஒரு கலை வடிவமாக மாறியது மற்றும் இலக்கியத்தின் வகையாகவும் தனித்து நின்றது. அஞ்சல் சேவைகள் உருவாக்கப்பட்டு, மக்கள் தனிப்பட்ட தொடர்புக்காக கடிதங்களைப் பயன்படுத்தத் தொடங்கிய போது பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. உண்மையில், போரின் போது, குடும்பங்கள் மற்றும் காதலர்கள் தொடர்பில் இருக்க உதவிய ஒரே வழி கடிதங்கள் மட்டுமே. அழகான நினைவுகள் அவை. அந்த காலங்கள் எத்தகைய மகிழ்ச்சியானவை!!. விஞ்ஞான விந்தையாலும், அறிவியலின் ஆர்வத்தாலும் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டினாலும் “அன்புள்ள" எனத் தொடங்கி, “இப்படிக்கு" என்று முடிக்கும் போது ,நெஞ்சம் பெற்ற நினைவுகள் மனதில் இன்றும் நிழலாடுகிறது. காலத்திற்கேற்ற மாற்றங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதுதல் என்ற அழகிய வாழ்வியலைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து முன்னேற வேண்டியது தான். நமது சில சௌகரியங்களுக்காக, காலம் விழுங்கி செல்லும் பல விழுமியங்களை நாம் சகித்துக்கொள்ள தான் வேண்டியுள்ளது.., இங்கிலாந்திலிருந்து சங்கர் ✍️

கருத்துகள்