தினம் ஒரு புத்தகம்
முகத்தில் தெளித்த சாரல்
இறையன்பு
புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம்.
தமிழ் இலக்கிய உலகில் கவிஞராக முதலில் அறிமுகமானவர் இறையன்பு.
தான் படித்த ஹைக்கூ கவிதைகளை மனதில் ஆராய்ந்து அவை சார்ந்த தனது பார்வையை இப்புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நூலிலிருந்து
வசந்தம் கழிகிறது
பறவைகள் கத்துகின்றன - கண்ணீர்
மீன்களின் விழிகளில்
பாஷோ
வசந்தம் போவதற்காக பறவைகள் ஒருபோதும் வருந்துவதில்லை. வசந்தம் இருக்கும் இடத்திற்கு இடம் பெயர அவற்றால் முடியும்.
பறந்து சாவது பயத்தால் சாவதினும் உன்னதமென பறவைகள் கருதுகின்றன.
பாஷோ நண்பர்கள் பிரிவதை உருவகப்படுத்தி இருக்கிறார்.
ஆழமான இலையுதிரில்
இன்னும் பட்டாம் பூச்சியாகவில்லை
இந்தப் புழு
வாழ்க்கை நம்பிக்கையிலும், அழகுணர்விலும் அடங்கி இருக்கிறது.
நம்பிக்கையுள்ளவன் கண்களில்
இருள்கூட விளக்குகளாகி எதிர்காலத்தை வெளிச்சமாக்குகிறது.
இலையுதிர் காலமும் - கூட்டுப்புழுப் பருவமும் ஒரே மாதிரி.
இரண்டுக்குப் பிறகும் பூக்கள் முளைக்கின்றன.
பூக்கள் என்னும் சிறகுகள் மரத்திற்கு
சிறகுகள் என்னும் பூக்கள் புழுவிற்கு
தேடிச் சென்ற
கள்ளிச் செடிப் புதரில்
குட்டிகளுக்குப் பாலூட்டும்
நாய்
பெண் சிசுவைக் கொல்ல கள்ளிச் செடியை தேடிச் செல்லுகிறாள் தாய்.புதரில் குட்டிகளுக்குப் பாலூட்டும் நாயை கண்டேனும் திரும்புவாளா?
கள்ளிப்பால் கொண்டு செல்வாளெனில் இதில் யார் தாய்? யார் நாய்?
பெட்டிக்குள் வந்த பிறகு
எல்லோரும் சமம்
சதுரங்கக் காய்கள்
சின்னச் சின்ன வெற்றிகளுக்கு ஆசைப்படாமல் திடமான இலட்சியத்துடன் இறுதிவரை பயணிப்பவன் சிப்பாயின் நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு மாற முடியும் என்பதற்கு கடைசி கட்டத்தில் சிப்பாய் நிலை உயரும் காட்சியே சாட்சி.
சதுரங்கம் விளையாட்டு மட்டுமல்ல, வாழ்வைக் கற்றுத்தரும் போதனை.
விளையாடி முடிந்த பிறகும் கற்றுத் தருகிறது - பெட்டிக்குள் போன பிறகு எல்லாம் சமம் என்ற உண்மையை.
சதுரங்கக் காய்களுக்கு அதிகாரம் தருவது நாம்தான்.
நமது இராஜாக்களுக்கும் இராணிகளுக்கும் நம்மிடமிருந்தே அதிகாரம் அளிக்கப்படுகிறது.
பல திறமைகள் பெட்டிக்குள் முடங்கி கிடக்கின்றன.
உரிய களம் இல்லாமல்
உரிய தளம் இல்லாமல்
பெட்டி என்பது சதுரங்கப் பெட்டி மட்டுமல்ல, சவப்பெட்டி மட்டுமல்ல
ஆற்றலைச் சிறைப்படுத்தும் அனைத்துக்குமே பொருந்தும்.
கீழே செல்லச்செல்ல
மேலே போகிறது வால்
ஒரு திமிங்கலம்
தலை கீழே போகப்போக வால் மேலே வருகிறது.
திமிங்கலம் தான் என்றில்லை
நிர்வாகிகளும் அப்படித்தான்
அதிகாரமும் அப்படித்தான்.
தலை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் வால் மேலே வர வாய்ப்பில்லை..
வாசகர்களுக்கு வித்தியாசமான விருந்து படைத்திருக்கிறது இந்நூல்
நீங்களும்தான் வாருங்களேன் சாரலில் கொஞ்சம் நனையலாம்.
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்
கருத்துகள்
கருத்துரையிடுக