அன்னையர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
அன்னையர் தினம் மட்டுமல்ல தினமும் !
அன்னையை நினைப்போம் போற்றுவோம் !
பத்து மாதங்கள் சுமந்துப் பெற்றவள் அன்னை !
பத்துப் போட்டு வளர்த்து எடுத்தவள் உன்னை !
'அ ' வில் தொடங்கும் அற்புதம் அன்னை !
அம்மா அப்பா சொல்லி வளர்த்தாள் உன்னை !
உறவுகளிகளில் ஒப்பற்ற சிகரம் அன்னை !
உலகம் போற்றிட வளர்த்தாள் உன்னை !
உலகை அறிமுகம் செய்தவள் அன்னை !
உணர்வை ஊட்டி வளர்த்தாள் உன்னை !
வேதனை சோதனை ஏற்றாள் அன்னை !
வேண்டி விரும்பி பெற்றாள் உன்னை !
முப்பொழுதும் போற்றும் உறவு அன்னை !
எப்பொழுதும் உயிராய் காப்பாள் உன்னை !
மாதர் குலத்தின் மாணிக்கம் அன்னை !
மாண்பு மிக்க மனிதனாக்கினாள் உன்னை !
கருவறையில் சுமந்த கடவுள் அன்னை !
கருத்தாக வளர்த்து எடுத்தாள் உன்னை !
பாசத்தை மழையெனப் பொழிந்தாள் அன்னை !
பண்போடு வளர்த்து மகிழ்ந்தாள் உன்னை !
உயிர் தந்துப் பெற்றாள் அன்னை !
உயிராகப் போற்றி வளர்த்தாள் உன்னை !
மனைவி வந்ததும் மறக்காதே அன்னை !
மடியில் வைத்து வளர்த்தாள் உன்னை !
குழந்தை மறந்தாலும் மறக்காதவள் அன்னை !
குழந்தையை என்றுமே வெறுக்காதவள் அன்னை !
அகில உலகம் போற்றும் அன்னை !
அகல் விளக்காய் ஒளிர்ந்தாள் அன்னை !
தன்னலம் கருதாத உறவு அன்னை !
தன்குழந்தை நலம் கருதும் அன்னை !
அன்னையின்றி நீயுமில்லை நானுமில்லை !
அகிலம் இல்லை அன்பு இல்லை !
அன்னைக்கு இணையான உறவு உலகில் இல்லை
அன்னைக்கு இணை அன்னை மட்டுமே !
.
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !
கவிஞர் இரா .இரவி !
எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும்
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !
இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த அழகு முகம்
என்றும் குழந்தைக்கு மறக்காத முகம் அம்மா !
உயிரெழுத்தில் தொடங்கி மெய்யெழுத்தில்மையமாகி
உயிர்மெய்யில் முடியும் உன்னதம் அம்மா !
குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த
குவலயத்தில் சிறந்த உறவு அம்மா !
கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய
கருணைக் கடல் ஒப்பற்ற அம்மா !
தாய்மொழியை சேயுக்கு கருவிலேயே
தன் வயிற்றிலேயே பயிற்றுவித்தவள் அம்மா !
தன் இதயத் துடிப்பின் மூலம் கருவிலேயே குழந்தைக்கு
தனது முதல் தாலாட்டைத் தொடங்கியவள் அம்மா !
குழந்தை பிறந்து பின் அழ நேர்ந்தால் மார்போடு அணைத்து
தன் இதயத் துடிப்பை உணர்த்தி அழுகை நிறுத்திய அம்மா !
குருதியைப் பாலாக்கி வழங்கி பெற்றக்
குழந்தையின் உயிர் வளர்த்தவள் அம்மா !
தன் துன்பம் பொறுப்பாள் அவள் ஆனால்
தன் குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் அம்மா !
தன்னைத் தேய்த்து தன் குழந்தை வாழ்வை
தரணியில் மணக்க வைக்கும் சந்தனம் அம்மா !
தன்னை உருக்கி தன் குழந்தையின் வாழ்வை
தரணியில் ஒளிர வைக்கும் மெழுகு அம்மா !
தான் சுமந்து தன் குழந்தையை வாழ்வில்
தவிக்காமல் கரை சேர்த்தத் தோணி அம்மா !
தான் உயராவிட்டாலும் தன் குழந்தையை
தரணியில் உயர வைக்கும் ஏணி அம்மா !
உலகில் யாரை மறந்தாலும் நீங்கள்
ஒருபோதும் ஒப்பற்ற அம்மாவை மறக்காதீர்கள் !
--
.
கருத்துகள்
கருத்துரையிடுக