கவிச்சுவை ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !



கவிச்சுவை !

நூல்ஆசிரியர்   :      கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் :      செல்வி இர. ஜெயப்பிரியங்கா !

வெளியீடு        :               வானதி பதிப்பகம்,
                        23, தீனதயாளு தெரு. தி. நகர், சென்னை-17.

கவிஞர் இரா. இரவி அய்யா அவர்கள் எனக்கு குரு. அவர் தினமலர் நாளிதழில் 2015-ல் எழுதிய கவிதை எழுதுவோம் என்னும் கட்டுரையே முதன்முதலாக என்னை கவிதைகள் எழுத ஊக்கப்படுத்தியது. கவிஞர் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராக மதுரையில் பணிபுரிந்து வருகிறாரர். தமிழ்த் தேனீ. பேராசிரியர் இரா.மோகன் அவர்ளை நடுவராகக் கொண்ட விழிப்புணர்வுப் பட்டிமன்றங்களில் பேசி வருகிறார்.

பொதிகை உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது உரைகள் ஒளிபரப்பாகி உள்ளன. இவர் பெற்ற விருதுகள் : “ஹைகூ திலகம்” “கவியருவி” “கவிமுரசு” “எழுத்தோலை” “ஹைகூ செம்மல்” “துளிப்பா சுடர்” என விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. “ஹைகூ திலகம்” “மதுரைக் கவிஞர்” “இணையதளக் கவிஞர்” என்னும் அடைமொழிகளை கொண்டவர். உள்நாட்டு வெளிநாடு சிற்றிதழ்கள். மின்இதழ்கள். பல்வேறு இணையதளங்களில்  தொடர்ந்து  எழுதி வருகிறார்.

கவிஞரின் 18-வது நூல் கவிச்சுவை.  நூலின் பெயரே  சுவையாக  உள்ளது. நூலின்  முன் அட்டைப் படத்தில் கவிஞரின் படமும் பின்அட்டைப் படத்தில் பேராசிரியர் இரா. மோகன். தேசிய நல்லாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜு மற்றும் வித்தக கவிஞர் பா.விஜய். ஆகியோரின் வாழ்த்துரையும் இடம் பெற்றுள்ளது. கவிச்சுவை நூல் ஏழு உள்ளடக்கங்களாக பகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் கவிஞரின் நண்பர்கள் மூலம்  துபாயில்  அறிமுகப்படுத்தப்பட்டது  என்பது கூடுதல்  சிறப்பு.

சான்றோர் உலகம் :     

காந்தியடிகள் :

உண்மை, சத்தியம், அஹிம்சை, ஆகியவற்றை தன் உயிர்மூச்சாக கொண்டு இந்திய விடுதலைப்போரினை தலைமையேற்று நடத்திச் சென்றவர் உலக உத்தமர் காந்தியடிகள். காந்தியடிகளின் அஹிம்சை போராட்டம் வெற்றியினைப் பெற்றது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் சுதந்திரம் கிடைக்கப் பெற்றது. நம் தேசபிதா காந்தியடிகளுக்கு கவிஞர் அவர்கள் கடிதம் என்ற முறையில் தம் கவிதையைப் படைத்துள்ளார்.

                ‘மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை
                மறுபடியும் நீ வருவாய் என நம்பிக்கை இல்லை!
                ஆர்வம் மிகுதியில் சிலா; அழைக்கின்றனர்
                அண்ணலே நீ மறுபடியும் வரவேண்டாம் இங்கு!
                செய்யக்கூடாது என்று சொன்ன ஏழு பாவங்களையும்
                செய்து வருகின்றனர் நாட்டில் உள்ள மக்கள்!
                நெறியற்ற வாணிபம் வேண்டாம் என்றாய்
                நெறிதவறிய வாணிபமே எங்கும் நடக்கின்றது!
                உப்புக்கு வரியா? என்று  உணர்ச்சியோடு எதிர்த்தாய்
                உதடு பேசினால் இனி வரி வசூலிப்பார்கள்  இங்கு!
                பணத்தாளில் மட்டும் உன் படத்தை அச்சடித்துவிட்டு

                பாரத்தின் தந்தை உன்னை மறந்து விட்டோம் வர வேண்டாம்!’ காந்தியடிகளை மீண்டும்  ஊழல் மிகுந்த இந்த உலகிற்கு வரவேண்டாம் என்பதாக கவிதை அமைந்துள்ளது.

பாவேந்தருக்கு நிகர் பாவேந்தர் :

                தமிழின் இனிமையும் உயர்வையும் தமது இனிய பாடல்கள் மூலம் உணர்ச்சி பொங்கப் பாடியவர் புதுவைக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். இவர் தனது கவிதைகளில் தெறித்த தீவிரக் கருத்துக்களால் புரட்சிக் கவிஞர் என்றும் போற்றப்பட்டார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கனகசுப்புரத்தினம். பாரதியார் மீதும் அவர் கவிதைகள் மீதும் கொண்ட நாட்டத்தின் காரணமாகவே தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார் பாவேந்தர் பற்றி கவிஞர்

                ‘பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களை
                பாடலில் புகுத்தி பகுத்தறிவை ஊட்டியவர்!
                பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து
                புரட்சிக்கவிஞர் என்ற பட்டத்தைப் பெற்றவர்!
                புதியதோர் உலகம் செய்வோம் என்று பாடி
                புதியதோர் உலகத்தை பாடலால் காட்டியவர்!’
                கனக சுப்புரத்தினம் என்ற பெயரை
                குரு பாரதிக்காக பாரதிதாசனாக மாற்றியவர்!’

------என்று பாரதிதாசன் மாண்புகளை எடுத்துரைக்கிறார்.

தமிழ்முற்றம்;:

                தாயிடமிருந்து நாம் கற்றமொழி தாயாக நம்மைப் பெற்ற மொழி நம் அருமைத் தமிழ்மொழி. தமிழ், தமிழ் என்று தொடர்ந்து சொன்னால் “அமிழ்து, அமிழ்து”என்று நம் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. உலக மொழிகள் ஆறாயிரத்திலும் சிறந்தமொழி நம் அன்னைத்தமிழ்மொழி. பல  நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மொழிகளான கிரேக்கமும் எபிரேயமும் இலத்தீனும் இன்று பேசுவதற்கு அதிக மக்கள் இல்லை. பல்லாயிரக்- கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தாய்மொழியான தமிழ் இன்றும். இணையத்தின் இதயத்தில் இதமாய் வீற்றிருக்கிறது. திராவிட மொழி-களின் தாயாகத் திகழும் நம் தமிழ்மொழி சொல் வளமும் பொருள்வளமும் மிக்கதாக இன்றும் இளமையோடும் இனிமையோடும் திகழ்கிறது.

மொழி பற்றி கவிஞரும்

                “தேமதுரத் தமிழோசை தமிழகத்தில் ஒலிக்கட்டும்
                தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதற்கு முயலட்டும்!
                நல்ல தமிழ் நாளும் பேசிடுவோம்
                நல்ல தமிழ் நாளும் எழுதிடுவோம்!
                தமிழ்மொழியின் முகவரி நம் தமிழ் எழுத்தே ஆகும்;’!

தமிழ்மொழியே முதலில் தோன்றிய முதன்மொழி! என்பதாக தமிழின் மாண்பாக கவிதை அமைகின்றது.                                                                             

பெண்ணுலகு:

                “அன்று அடுப்பூதிய பெண்கள்
                இன்று ஆகாயத்தில்
                காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்”

என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம். இன்று காற்றோடு காற்றாக. பைலட் ஆகப்பறந்து கொண்டிருக்கின்றனர். பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் என கவிமணி மிக அழகாகப் பெண்ணின் பெருமையை எடுத்துக் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பெண்ணானவள் அகிலத்தையே ஆளும் சக்தி வாய்ந்தவள். இருந்தாலும் அன்றைய காலங்களில் பெண் பிள்ளை என்றால் கள்ளிப்பாலை ஊற்றிக் கொலை செய்யும் கொடுமை தற்போது மாறி பெண் பிறப்பு பெருமை அடைந்துள்ளது.

பெண்களின் பெருமை குறித்து கவிஞரும்.

                “பெண் இனத்தின் சாதனைகள் சொல்லில் அடங்கா.
                பெருமைமிகு பெண் இனத்தை வளர விடுங்கள்!
                பெண் கல்வி கட்டாயம் வேண்டுமென்று அன்றே
                பெரியார் அனைவரிடமும் வலியுறுத்தினார் நன்றே!
                பெண் படித்தால் வீட்டிற்கு மட்டுமல்ல
                பிறந்த நாட்டிற்கும் பெருமைகள் சேரும்!
                பெண்ணை சக தோழியாக மதித்திட வேண்டும்!
                பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகப் புறப்படு
                பாரதிதாசன் கண்ட பெண்ணாகப் புறப்படு!”

என்ற வரிகள் மூலம் பெண்களின் பெருமைகளை எடுத்துரைக்கிறார்.

உறவுகளின் உன்னதம் .

                உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என்று நான்கு பக்கங்களும் உறவுகளால் சூழப்பட்ட நாடு நம் நாடு. பிறநாட்டவர்கள் வியந்து நம்மை உற்று நோக்குவதற்கான காரணம் நம் பண்பாடு. பாரம்பரிய பழக்கவழக்கங்கள் தான் இதற்கான அடிப்படை காரணம் என்னவென்றால் பிற நாடுகளில் எல்லாம் கோவில்கள் தனியாகவும் இருக்கும். ஆனால் நம் நாட்டில் மட்டுமே குடும்பங்களே கோவில்களாக உள்ளன. அன்பு, பண்பு, பாசம். பகிர்ந்து வாழ்தல் விட்டுக்கொடுத்தல் போன்ற குணநலன்கள் எல்லாம் உறவுமுறை-களினால் தான் உருவாகியது. காந்தி தாத்தா. நேரு மாமா என்று நாம் விரும்பும் தலைவர்களையும் உறவுகளாக்கி உறவுக்கு உயிர் கொடுப்பது நம் மண்ணிற்கே உரிய மாண்பு.

உறவுகள்  பற்றி  கவிஞரும்.

                தந்தை சொல் ஆரம்பத்தில் கசப்பாக இருக்கும்
                பின் தானாகப் புரியும் சொல்லில் இருக்கும் மகத்துவம்!
                கல்வியை விட ஒழுக்கம் உயர்ந்தது என்று
                கனிவோடு தந்தை சொல்வதைக் கேட்பது சிறப்பு!
                பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை
                பத்தியமாக உணவருந்திக் காக்கிறாள் சேயை!
                அன்று தாலாட்டில் வீரம் கற்பித்தார்கள்

                அன்று தாலாட்டில் தாய்மாமன் பற்றிப் பாடினார்கள்! என்ற கவிதைகள் வழி உறவுகளின் மாண்பை எடுத்துரைக்கிறார். மேலும் தெய்வீகத் தாயைப் பெற்று இருக்கும் எந்த மனிதனுமே ஏழையில்லை என்பது முன்னாள் அமரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் கூற்றாகும். ஆத்மார்த்தமான அன்பைத் தருவது தாயன்பு மட்டுமே. கருவறையில் இருக்கும் போது நமக்கு இதயவறை தந்தவள் தாய்”. காதறுந்த ஊசியும் கடை வழிக்கு வாராது காண்”என்று பாடிய உலகவாழ்வை முற்றும் துறந்த பட்டினத்தடிகள் கூட தன் தாய் இறந்தபோது கதறி அழுத வரலாற்றை இவ்வுலகு அறியும்,. அன்பை கூட கண்டிப்புடன் தான் காட்டத்தெரியும் அப்பாவிற்கு ஆனால் சோர்ந்து நிற்கும் நேரங்களில் அப்பா தரும் கை அழுத்தம் ஆயிரம் ஆறுதல்களைச் சொல்லும் இந்த உறவுகள் தரும் ஆனந்தமே அலாதியானது தான்.

நம்பிக்கை நாற்றுகள்:

                இன்னும் ஒரு நாள் கூடுதலாய் இந்தப் புவியில் வாழ்வதற்கான வாய்ப்பு இதோ விடியலின் விந்தைப் பூவாய் நம்முன் பூத்திருக்கும் இந்த இனிய நாள், இந்த நாள், இனிய நாள், இந்த நாள், நொந்தாள் என்பதும்
நம் மனதில் தான் இருக்கிறது. மனம் மலர்ந்த இத்தினம் நம் வாழ்வின் மகிழ்வான  தினம் நம் வாழ்க்கைப் பயணத்தின் கசந்த நினைவுகள் அழிந்த வசந்தவரவு இத்தினம். நீலவானம் நமக்கு நிறைய நம்பிக்கையைத்  தருகிறது.

இந்த நம்பிக்கை குறித்து கவிஞரும்           

                இந்த நொடியை இந்த நிமிடத்தை
                இனிமையாக்கு இனிமை நாளையும் தொடரும்!
                தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்
                தரணியில் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும்!
                வாழ்வில் நடந்த மகிழ்வுகளைச் சேகரியுங்கள்
                வளமான நினைவுகளை மட்டும் சேகரியுங்கள்
                ஒற்றைச் சிறகோடும் பறக்க முடியும்
                உள்ளத்தில் தன்னம்பிக்கை உரம் வேண்டும்!
                முயற்சி பயிற்சி செய்தால் போதும்
                முன்னோக்கிப் பறக்கலாம் சிறக்கலாம்!
                சோகத்தில் கரைந்த நிலா போதும் போதும்
                சோகத்தை விட்டு வந்து அழகாய் ஒளிh;ந்திடு!

என்ற வரிகளின் மூலம் எடுத்துரைக்கிறார்.

காதல்

மனித உணர்வில் ஒன்று காதல் உணர்வு. அக்காதல் பற்றி கவிஞர்.

                ‘ ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்
                உயிர் உள்ளவரை நேசிப்பது காதல்!
                புறஅழகு பார்த்து வருவது அல்ல காதல்
                அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல்!
                உன்னத காதலிக்கு உள்ளத்தில் முதல் இடம்
                உலகில் உள்ள உறவுகளுக்கு அடுத்த இடம்!
                உடலில் உயிர் உள்ளவரை இருவருக்கும்
                உடலில் மூளையில் மூலையில் இருவருக்கும்
                நேற்று இன்று நாளை என்று முக்காலமும்
                நிலைத்து இருக்கும் ஒன்று ஒப்பற்ற காதல்!

என்று காதல் உணர்வு பற்றி நூல் எடுத்துரைக்கிறது.

நூலின் இறுதியாக எது கவிதை? என்ற வினாவிற்கு  விடையாக கவிஞர் கவிதைப் படைத்துள்ளார். படைத்துள்ளார்;

                எது கவிதை? என்ற  கேள்வி  எல்லோரும்
                என்றும் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்!
                விடை மட்டும் இன்றும் கிடைக்கவே இல்லை
                வித்தியாசமாக எழுதி இருந்தால் கவிதையா?
                வளமான சொற்கள் இருந்தால் கவிதையா?
                மரபு இலக்கணத்துடன் இருந்தால் கவிதையா?
                மூன்றுவரி ஹைக்கூவாக இருந்தால் கவிதையா?

கவிதைக்கு விடையாக கவிஞா;     

                மரபுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர்!
                புதுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர்!
                வசன கவிதையே கவிதை என்கின்றனர் சிலர்!
                விவேகமான ஹைக்கூவே கவிதை என்கிறனர் சிலர்!
                கவிதையின் வடிவம் எதுவாக இருந்தால் என்ன?
                கவிதை வாசகர் சிந்தையைக் கவருவதாக இருத்தல் வேண்டும்!
                எது கவிதை என்ற கேள்விகள் தொடர்ந்தாலும்
                எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுகிறதோ அதுவே கவிதை!

எழுத்துக்கள் நடந்து வந்தால் உரைநடை நடமாடி வந்தால் கவிதை என்னும் கூற்றுக்கேற்ப  கவிதைக்கு விளக்கம் கொடுக்கின்றார். கவிச்சுவை நூல் இலக்கிய வாசகர்களுக்கு உண்மையில் கவிச்சுவை தான்.

கருத்துகள்