கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .










கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான  " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .


இறையன்பு ஆற்றுப்படை !

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை- 625 021.

******

      “எம் நெஞ்சம் திறப்பார் நிற்காண்குலரே!” என ஓர் அழகுத் தொடர் சங்க இலக்கியத்தில் உண்டு. அதன்படி, கெழுதகை நண்பர், ‘ஹைகூ திலகம்’ இரா. இரவியின் நெஞ்சம் திறப்பார், ஆங்கே முப்பெரும் ஆளுமைகள் வீற்றிருப்பதைக் காண்பர்.

‘பகுத்தறிவுப் பகலவன்’ எனப் போற்றப்படும் தந்தை பெரியார்.

பாரத மணித்திருநாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர். ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்.

‘இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம்’ முதுமுனைவர் வெ.இறையன்பு.

குறிப்பாகவும் கூர்மையாகவும் கூறுவது என்றால், முதுமுனைவர் வெ.இறையன்பு மீது இரவி கொண்டிருக்கும் மதிப்பு, மலையினும் மாணப் பெரிது ; மரியாதை ; கடலினும் ஆழம் மிக்கது ; அன்பு, வானினும் உயர்ந்தது ; ‘ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே’ என்னும் திருஞானசம்பந்தரின் வாக்கினை நினைவுபடுத்துவது போல், ‘

நாடு அறிந்த நல்ல பேச்சாளர் ; நல்ல எழுத்தாளர் ; நல்ல சிந்தனையாளர் ; நல்ல செயலாளர்’ என இறையன்புவின் பன்முக ஆளுமைத் திறம் குறித்து எழுதியுள்ளார் இரா. இரவி.  ‘அவர் (இறையன்பு) எழுதும் ஒவ்வொரு நூலும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக அமைந்து விடுகின்றது.  இந்த நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது வழங்க வேண்டும் என்பது என் ஆசை.  ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு’ என இரவி, இறையன்புவின் ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற அண்மை நூலுக்கு எழுதிய மதிப்புரையை நிறைவு செய்திருப்பதும் இங்கே நினைவுகூறத் தக்கதாகும்.

கவிஞர் இரா. இரவி, முதுமுனைவர் வெ. இறையன்பு-வின் நூல்களைத் தாம் படித்துப் பயன்பெறுவதோடு நின்று விடாமல், ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயரிய நெறி நின்று, நாமும் அந்நூல்களைத் தேடிப் பிடித்துப் படித்துப் பயன்பெறுமாறு செய்து விடுகின்றார் ; பழத்தின் சாறு பிழிந்து தருவது போல, முதுமுனைவர் வெ. இறையன்பு-வின் நூல்களில் இருந்து சுவையான, சாரமான, சத்தான பகுதிகளை மேற்கோள்களாக எடுத்துக்காட்டி, நம்மையும் அந்நூல்களிடத்து ஆற்றுப்படுத்தியும் விடுகின்றார்.  ‘

நூலில் இருந்து சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு’, ‘நூலில் இருந்து பதச்சோறாகச் சில கருத்துக்கள் இதோ!’, ‘நூலில் இருந்து சிறு துளிகள் உங்கள் ரசனைக்கு’ என்றாற் போல் அவர் முதுமுனைவர் இறையன்புவின் நூல்களில் இருந்து தெரிவு செய்து தந்திருக்கும் பகுதிகள் பயன் மிக்கவையாகும்.

ஒரு மதிப்புரையாளருக்கு வேண்டிய அடிப்படையான தகுதி நூலினுள் ஆழ்ந்திருக்கும் ஆசிரியரின் உள்ளத்தினைக் காண்பதும், அதனை வாசகர்களுக்கு நல்ல வண்ணம் காட்டுவதும், பரந்து விரிந்த தாயுள்ளத்தோடு அதனைப் போற்றுவதும் ஆகும். இவ்வகையில் இரா. இரவி தம் கடமையைக் கண்ணும் கருத்துமாக, செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

“இந்த நூலில் மூளையின் செயல்பாடுகளைப் படித்த போது, வியந்து போனேன். கையளவு உள்ள மூளை, மலையளவு செயல்புரிகின்ற விதம் கண்டு வியந்து போனேன்” ; முதுமுனைவர் இறையன்புவின் நூறாவது நூலான ‘மூளைக்குள் சுற்றுலா’ பற்றிய இரா. இரவியின் தெளிவான மதிப்பீடு இது!

“உலகை உலுக்கிய வாசகங்கள்” படித்தால், படித்த வாசகரின் மனத்தையும் உலுக்கி விடுகின்றது.  ஒரு புத்தகம் என்ன செய்யும்? என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்த நூல் படிக்கும்முன் இருந்த மன நிலைக்கும், படித்து முடித்தபின் ஏற்படும் மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் வெற்றி ; ‘தந்தி’ பதிப்பக வெளியீடான இறையன்பு-வின் ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ என்னும் நூலுக்கு இரவி உளமாரச் சூட்டியுள்ள புகழாரம் இது!

“வாசகர்களாகிய நீங்களும் உடன் முடிவெடுத்து இந்த நூலை வாங்கிப் படியுங்கள்” என இரவி, முதுமுனைவர் இறையன்பு-வின் ‘முடிவு எடுத்தல்’ என்னும் நூலைப் பற்றிய மதிப்புரையினை முடித்திருக்கும் பாங்கு நனிநன்று!

“அவருடைய (இறையன்பு-வின்) எல்லா நூல்களும் வாசகர்களை நல்வழிப்படுத்தும், செம்மைப்படுத்தும் என்ற போதும், இந்நூல் ஆகச் சிறந்த நூலாக விளங்குகின்றது” ; முதுமுனைவர் இறையன்பு-வின் ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் நூலுக்கு இரவி எழுதியுள்ள இரத்தினச் சுருக்கமான பாராட்டுரை இது!

“தொடர்ந்த நேர்மையும், மக்கள் மீது மாறாத அன்பும், நீர்த்துப் போகாத ஆர்வமும், உண்மைக்குச் சார்பாக வாழ்வதும் ஒருங்கே அமையப் பெற்றால் தான் பணிக்குப் பெருமை, பணியால் நமக்குப் பெருமை’ ; ஓர் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் இந்த வரிகளின் படியே நூலாசிரியரும் வாழ்ந்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு” ; ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்றபடி, இங்கே முதுமுனைவர் இறையன்பு-வின் சொற்களைக் கொண்டே இரவி அவருக்குப் புகழ்மாலை சூட்டி இருப்பது சிறப்பு முத்தாய்ப்பு.

மதிப்புரைகளின் இடையிடையே தன்வரலாற்றுப் பாங்கில் சொந்த வாழ்க்கை அனுபவங்களைக் குறித்துச் செல்வது இரவியின் பாணி ; வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு : “நாம் இன்றைய அழிவு உலகத்தில் யாரும் புறக்கணிக்க முடியாதபடி திகழ்வதற்கு அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வது அவசியம்” என முதுமுனைவர் இறையன்பு “சுயமரியாதை” என்னும் நூலில் எழுதி இருக்கும் கருத்திற்குக் கூடுதல் தகவலைச் சேர்க்கும் வித்த்தில் இரவி தெரிவித்திருக்கும் தன்வரலாற்றுக் குறிப்பு வருமாறு :

“உண்மை, புகழ்பெற்ற இதழ்கள் என்னைப் புறக்கணித்த போது எனக்கென ‘www.kavimalar.com’ என்ற இணையம் தொடங்கி வளர்ந்து காட்டிய போது புகழ்பெற்ற இதழ்கள் எனது நேர்முகத்தினை வெளியிட்டன.  புறக்கணிப்பதற்காக வருந்தாமல், சோர்ந்து விடாமல் திறமையை வளர்த்துக் கொண்டால் நம்மைத் தேடி வருவார்கள் என்பது நான் கண்ட உண்மை”.

முதுமுனைவர் இறையன்புவின் ‘நினைவுகள்’ என்னும் நூலுக்கு எழுதிய மதிப்புரையில் இரவி பதிவு செய்திருக்கும் தன் வரலாற்றுக் குறிப்பு :

“மகாகவி பாரதியார் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப்-பள்ளியில் பணியாற்றியவன் நான்.  பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று பின் வெற்றி பெற்று பதினோராம் வகுப்பில் சேர இடம் கேட்டு மறுத்து விட்டனர்.  இளங்கோ மாநகராட்சிப் பள்ளியில் +2 படித்து வென்றேன். எனக்கு இடம் மறுத்த அதே பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக்க கலந்து கொண்டேன்.  தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கவிதைப் போட்டிக்கு நடுவராகக் கலந்து கொண்டேன்.  நூல்கள் நூறு சேதுபதி பள்ளியின் நூலகத்திற்கு வழங்கினேன். அங்கே சென்ற போது ஆறு முதல் பத்து வரை படித்த வகுப்பறை நினைவுகள் வந்து விட்டன”.

‘முடிவு எடுப்பது எப்படி என்பது எல்லோருடைய வாழ்க்கையில் முக்கியமான ஒன்று’ என்று முதுமுனைவர் இறையன்புவின் கருத்தினை விளக்கும் இடத்தில் இரா. இரவி குறித்துள்ள தன்வரலாற்றுக் குறிப்பு இது’.

“எனக்கு மதுரையில் இருந்து பெங்களூருக்கு இடமாற்றம் வந்து 1¼ வருடங்கள் சிரமப்பட்ட போது, விருப்ப ஓய்வில் சென்று விடலாம் என்று முடிவெடுத்தேன்.  எனது மனைவியிடம் கலந்து ஆலோசித்த போது, ‘மகனின் திருமண அழைப்பிதழில் உங்கள் பணியை அச்சிட வேண்டும், அதில் விருப்ப ஓய்வு என்று அச்சிட்டால் நன்றாக இருக்காது’ என்றாள். அவர் சொன்னதிலும் அர்த்தம் உள்ளது என்பதை உணர்த்து விருப்ப ஓய்வு முடிவைக் கைவிட்டேன். தற்போது மதுரைக்கு இடமாற்றம் கிடைத்து வந்து விட்டேன்”.

இக்குறிப்பு தெளிவுபடுத்தும் இன்றியமையாத வாழ்வியல் உண்மைகள் இரண்டு, அனவயாவன :

1.    ஆண்களை விட, பெண்கள் எப்போதும் பொறுப்புடனும் தொலைநோக்கும் சிந்திப்பார்கள். அதனால் தான் கவியரசர் பாரதியாரும் ‘பெண்ணுக்கு நாணத்தை வைத்தான் – புவி வேண்டும் ஈசன்!’ என்று பாடினாள்.  நெருக்கடியான காலத்தில் இரவியின் துணைவியார் சொன்ன ஆலோசனை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

2.    துணைவியார் சொன்ன கருத்துக்கு மதிப்பளித்து இரவி, தம் முடிவினை மாற்றிக் கொண்டது அவரது பெருந்தன்மையைப் புலப்படுத்துகிறது.

வாழ்வு சிறக்க, இல்லறம் இனிக்க, ஆளுமைப் பண்பு வளர   முதுமுனைவர் இறையன்பு வலியுறுத்தியுள்ள விழுமிய சிந்தனைகள் – உண்மை ஒளி வீசும் அனுபவ மொழிகள் – இந்நூலில் அங்கிங்கு எனாதபடி எங்கும் மண்டிக் கிடக்கின்றன.  இவ்வகையில் கருத்தில் கொள்ளத்தக்க சில வாசகங்கள் இதோ :

1.    “கேள்வி : ‘துன்பம் வரும் போது சிரிக்க முடியுமா?”

பதில் :  ‘துன்பம் வரும் போது சிரிங்க’ என்று வள்ளுவர் சொன்னது, ‘வாய் விட்டு சிரிங்க’ என்ற பொருளில் அல்ல’ துன்பம் வரும் போது சோர்ந்து விடாமல் துணிந்து எதிர்கொள்ளுங்கள்’ என்பதே அதன் பொருள்.

2.    “கணவனும் மனைவியும் இந்த நொடியில் இருந்து புதிதாகப் பிறந்திருக்கிறோம் என்று முழுமையாய் உணரும் போது இல்லறம் மொட்டு விடத் துவங்கி, ‘நான் ஏற்கனவே குறையாகப் பிறந்தவன்(ள்) ; நீயே என்னை முழுமையாக்கு-கிறாய்’ என்று இருவரும் எண்ணும் போது அது மலராகிறது”.

“வெள்ளை என்பதால் கர்வம் கொள்வதும் தவறு, கருப்பு என்பதால் கவலை கொள்வதும் தவறு. இயல்பை இயல்பாக எண்ண வேண்டும். பிறரோடு ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை கொள்வதும் தவறு”.               *****



இரவி அடிப்படையில் ஒரு கவிஞர் – அதுவும், சுருக்கத்திற்கும், செறிவுக்கும் பெயர் பெற்று ஹைகூ கவிதையில் சேர்ந்த ஒருவர் என்பதை இந்நூலில் பக்கந்தோறும் கண்டுகொள்ள முடிகின்றது.  “இந்த நூலைப் (இலக்கியத்தில் மேலாண்மை) படிப்பதற்கு முன் வெள்ளைக் காகிதமாக இருந்த நம் மனம், படித்தபின் அச்சரிக்கப்பட்ட நூல் போல ஆகிவிடுகிறது” என்னும் அழகிய உவமையின் ஆட்சியும், “படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது (‘அவ்வுலகம்’)! படித்து விட்டு பாதுகாத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறுவாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல் இது!” என்னும் நாவலைப் பற்றிய தேர்ந்த மதிப்பீடும்,

“காகிதம் பற்றிய சிறப்புக்களைக் காகிதம் மூலம் விளக்கியுள்ள நல்ல நூல்” (‘காகிதம்!’) என்ற இரத்தினச் சுருக்கமான நூல் அறிமுகமும், “சாகா வரம்” (நாவல்) வாசகர் உள்ளத்தில் சாகாவரம் பெற்று விடுகிறது” என்று சாதுரியமான சொல் விளையாட்டும், “நூலாசிரியர் கவிஞர் என்பதால் அவரது உரையிலும் எழுத்திலும் கவித்துவம் மலர்கின்றது” என்ற திறனாய்வுக் குறிப்பும் இரவியின் எழுத்துத் திறத்திற்குக் கட்டியம் கூறி நிற்கின்றன”.

ஒற்றை வரியில் மதிப்பிடுவது என்றால், முதுமுனைவர் இறையன்புவின் படைப்பை , கவிஞர் இரவி பல நாள் எழுத்தெண்ணிப் பயின்றதன் விளைவாக மலர்ந்துள்ள இந்நூல், வாசகர்களின் நெஞ்சங்களிலும், முதுமுனைவர் இறையன்புவின் படைப்புக்களை எழுத்தெண்ணிப் படிக்க வேண்டும் என்று உள்ளார்ந்த வேட்கையைத் தோற்றுவிக்கின்றது. இதுவே இந்நூலின் வெற்றி எனலாம்.

மதுரை – 625 019.
06-02-2019                                             இரா. மோகன்

.


கருத்துகள்