ஒழித்திடு குடி!


ஒழித்திடு குடி!

கவிஞர் இரா. இரவி.
குடிக்க பணம் கேட்டு
கொல்கிறான் தந்தையை
மகன்!

தனக்குத் தானே
தீ வைத்துக் கொள்கிறான்
மது போதையில்!

குடித்துவிட்டு தன்படம் எடுத்து
தவறி விழுந்து இறந்தனர்
இணையர்!

மிதப்பதாக நினைத்து
மூழ்கி விடுகின்றனர்
போதையில்!

குடிபோதையில் வாகனம் ஓட்டி
தானும் செத்து
மற்றவரையும் சாகடித்தான்!

கணவரின் குடியால்
பெருகியது மணவிலக்கு
தேவை மதுவிலக்கு!

பள்ளியின் இருக்கையை
விற்றுக் குடித்த
மாணவ குடிமகன்கள்!

ஆண்களின் குடிபழக்கம்
தொற்றிக் கொண்டது
சில பெண்களுக்கும்!

குடிபோதையில்
பெற்ற தாயைக் கொன்ற
குடிமகன்!

குடும்பத்தின் குதூகலம்
முடிவிற்கு வந்தது
குடியால்!

மது போதையில்
மனைவி மக்களைக்
கொன்ற குடிமகன்!

மதிப்பை இழந்து
அவமதிப்பைப் பெறுகிறான்
குடிகாரன்!

என்ன செய்வதென்று அறியாது
எதுவும் செய்திடும்
குடிமகன்கள்!

குடியால்
குடும்பங்கள் அழியுது
மூடுங்கள் மதுக்கடைகளை!

நாளிதழ்களில்
நாளும் வரும் செய்தி
குடியின் கேடு!

காந்தியடிகள் இருந்திருந்தால்
கண்ணீர் வடித்திருப்பார்
குடிமகன்களைப் பார்த்து!

கருத்துகள்