அடுத்த வரி! கவிஞர் இரா. இரவி


அடுத்த வரி!
கவிஞர் இரா. இரவி
அடுத்த வரி என்ன போடுவார்களோ? என்ற
அச்சத்தில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்!

நின்றால் வரி நடந்தால் வரி என்றானது இன்று
நாடெங்கும் ஒரே வரி என்று முதுகெலும்பை முறித்தனர்!

சிறுதொழில்கள் எல்லாம் மூடுவிழா நடந்தது
பெருமுதலாளிகள் எல்லாம் கொள்ளை இலாபம் அடைந்தனர்!

உப்புக்கு வரியா ?  என்று  நம் காந்தியடிகள்
உணர்ச்சிப் பொங்கிட எதிர்த்துப் போராடினார்!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வருமான வரி
அனேக ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியமில்லை!

வருமானவரியே செலுத்தாத பணக்காரர்கள் உண்டு
வருமானவரி அலுவலகம் கண்டுகொள்வதே இல்லை!

உண்மையாகவே வரி செலுத்தும் அரசுஊழியர்களிடம்
ஒன்பது கேள்விகள் வேறு கேட்பார்கள்!

சாப்பாட்டிற்கு வரி செலுத்தும் நிலைவந்தது இன்று
சாமானியர்களும் வருந்துகின்றனர் இந்நிலை கண்டு !

வரி வரி திரும்பிய பக்கமெல்லாம் வரி என்றானது
வரியின்றி எதுவுமில்லை என்றானது நிலை இன்று !

வீட்டு வரி குழாய் வரி சாக்கடை வரி மட்டுமல்ல
விற்றால் வரி வாங்கினால் வரி என்றானது இன்று!

இன்னும் சில நாளில் பாருங்கள் இது நடக்கும்
இனி மூச்சு விடுவோரெல்லாம் வரி செலுத்திட வேண்டும்!

அந்த வரி இந்த வரி எங்கின்றனர் விற்போர்
எந்த வரி புரியாமலே செலுத்துகின்றனர் வாங்குவோர்!

அந்நியன் ஆண்டபோது கூட இவ்வளவு வரி இல்லை
இந்தியன் ஆளும்போதும் தான் இவ்வளவு வரித்தொல்லை!

அடுத்த வரி என்ன போடலாம் என்று தினமும்
ஆள்வோர் சிந்தித்து தொடர்ந்து வரி போடுகின்றனர்! 

துபாய் சென்று பாருங்கள் வரியே வாங்குவதில்லை
துபாய் போல மாறுங்கள் வரியிலிருந்து விடுதலை வழங்குங்கள்!

வரிப்புலியினைப் போலவே பொதுமக்களை நாளும்
வாட்டி வதைத்து வரும் வரிகளை ஒழியுங்கள்!!

கருத்துகள்