தமிழர் முழக்கம்! நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ கவிஞர் சி. சக்திவேல் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !




தமிழர் முழக்கம்!

நூல் ஆசிரியர் : ‘தேசிய நல்லாசிரியர்’ 
கவிஞர் சி. சக்திவேல் !

அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

******
நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். விவேகானந்தா கல்வியியல் கல்லூரி (கும்மங்குடி) முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  ஓய்வுக்குப் பின் ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு ஓய்வின்றி தமிழ்ப்பணி செய்து வருபவர்.  மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கில் பாடிய கவிதைகளையும் மற்ற கவிதைகளையும் தொகுத்த "தமிழ் முழக்கம்" நூலாக வழங்கி உள்ளார்.

நூலின் தலைப்பிற்கு ஏற்ப நூல் முழுவதும் தமிழ் முழக்கம் கவிதைகளே உள்ளன.  இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் தேவைப்படும் கவிதைகள் இவை.  எங்கும் எதிலும் தமிங்கிலம் பரவி வரும் இக்காலத்தில் உலகத்தமிழர்களுக்கு விழிப்புணர்வு விதைக்கும் கவிதைகள் மிகச்சிறப்பு. 

அன்னைத் தமிழ் வாழ்த்து!

அன்னைத் தமிழே ஆரமுதே 
அகிலம் காக்கும் ஒளிவிளக்கே
முன்னை விதித்த பரம்பொருளே 
மூச்சாய் உயிராய் இருப்பவளே!

     நூலாசிரியர் பேராசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்களின் தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன.

     மம்மி எனும் போதினிலும் 
     டாடி எனும் போதினிலும்
     இம்மியேனும் மகிழ்வுண்டா ?
     இனியதமிழ் ஒலியுண்டா
     மம்மிதானே சடலமென்ற 
     மதி தானும் நமக்குண்டா ?
     வம்படியாய் ஆங்கிலத்தை 
     வந்தவாறு பேசுகிறார்.

     பெற்ற தாயை செத்தப் பிணமே என்று அழைக்கும் மடமையைச் சாடி உள்ளார்.  பலமுறை எடுத்துரைத்தும் பலர் இன்னும் மம்மி டாடி விடவில்லை.

     தமிழைக் காக்கும் தகுந்த வழி!

     இன்றே எழுக தமிழர் கூட்டம் 
 இனிக்கும் தமிழை எடுத்துக் கொள்க !
     ஒன்றே கருதுக; ஒன்றே செயக !
 ஊர்கள் தோறும் தமிழைச் சொல்க !

நூல் முழுவதும் மரபுக் கவிதைகளின் மூலம் மாண்புகள் மிக்க கனித்தமிழை உயர்த்திப் பாடி உள்ளார்.  பாராட்டுக்கள்.

நற்றமிழின் நாயகன்!

சிறுகூடற்பட்டி தந்த கண்ணதாசன்
          செப்பு கவிதத்துவத்தில் தமிழின் அரசன்
     மருவில்லா வளர் தமிழின் கவிமாமல்லன்
           மாசற்ற தெள்ளுதமிழ் உரைத்த ஈசன் !

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதிலும் ஒப்பற்ற பாடல்களால் மக்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசு கண்ணதாசனுக்கு வழங்கிய பாமாலை, அவர் புகழ் பரப்பும் புகழ்மாலை.

வள்ளுவரும் வாழ்வியலும்!

கனிந்துள பழத்தை உண்டு 
 காய்களை ஒதுக்குதல் போல்
     இனித்திடும் சொற்கள் கூட்டி 
 இயம்பலாம் கசப்பை விட்டு
     தனிமிகு சொற்கள் கொண்டு 
 நயம்படப் பேசச்சொன்ன
     த்னிப்பெரும் தெய்வப்புலவன் 
 தமிழ்மறை அய்யன் வாழ்க!

‘கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ என்ற திருக்குறளையும் அதன் பொருளையும் ஆங்கிலத்தில் படித்துவிட்டு மூல்மொழியான தமிழில் படிக்க, செக்கோசுலேவியாவிலிருந்து ஓர் அறிஞர் வந்தார்.  அவ்வளவு பெருமைமிக்க திருக்குறளை அழகாக கவிதையில் வடித்தது சிறப்பு.

தமிழாலே உயரும் நாடு!

சிங்கப்பூர்ப் பேரழகைச் சொன்னா லின்பம்
      சிந்தைகவர் அந்நாட்டில் வாழ்ந்தா லின்பம்
      மங்காத விளக்காகச் சுடரும் நாடு
      மாசில்லா உழைப்பாலே உயரும் வீடு !

சிங்காரமிக்க சிங்கப்பூர் தமிழ் ஆட்சிமொழியாகக் கொண்ட நாடு.  அதன் சிறப்பை கவிதையால் விளக்கியது சிறப்பு.

தடைகளை உடைத்துத் தமிழை உயர்த்து !

     தமிழ்நாட்டில் தமிழுக்குத் தடையா தொல்லை
     தகராத அவற்றிற்கு விடையா இல்லை
     தமிழ்நாட்டில் செம்மொழிக்கு இன்னல் என்றால்
     தள்ளாத முதுமையிலும் எதிர்த்து நிற்போம்!

உடல் முதுமை கண்டாலும், உள்ளம் போராடும் குணம் உண்டு.  தமிழுக்கு ஒரு தடை என்றால் அதனை உடைப்போம் என தமிழ்க்குரல் உரிமைக்குரல் தந்துள்ளார்.  உயர்நீதிமன்றத்திலும் கடவுளின் கருவறையிலும் ஒப்பற்ற தமிழ் ஒலிக்கும் நாளே தமிழருக்கு வாழ்வில் சிறந்த நாளாகும்.  இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் விதமாக கவிதைகள் பல உள்ளன.  பாராட்டுக்கள்.

தமிழா, உன் தமிழ் தமிழா?

     தாயினமுத மொழி மறந்தால் – நீ
     தரிகெட்டலைந்து மடிந்திடுவாய்!
     ஆயிரம் சொற்கள் இருக்கையிலே – நீ
     ஆங்கிலம் சேர்த்துப் பேசுகிறாய்!

ஆயிரக்கணக்கான சொற்களின் சுரங்கம் களஞ்சியம் நம் தமிழ்மொழி.  வளமான இலக்கிய இலக்கணம் உள்ள மொழி தமிழ்.  இல்லாதவன் கடன் வாங்கலாம்.  இருப்பவன் எதற்கு டன் வாங்க வேண்டும்.  ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி நல்ல தமிழில் அனைவரும் பேசிட முயல வேண்டும்.  தமிங்கிலத்தைத் தொடர விடுவது தமிழ் மொழிக்கு இடராகவே அமையும்.

தேமதுரத் தமிழோசை ...

     முத்தான சொல்லெடுத்து முழங்கு கவி வடித்தெடுத்து
     வித்தான தமிழ் பரப்ப வேண்டும் – அதன்
     சொத்தான தமிழ் காக்கத் தூண்டும்.

மரபுக்கவிதைகளை பல்வேறு வகை மரபுகளைக் கையாண்டு மரபுக்கவி விருந்து வைத்துள்ளார். மரபுக் கவிதை காலத்தால் அழியாமல் நிலைத்து இருக்கும், படிக்கும் வாசகர்கள் மனதில் நன்கு பதியும்.  புது எழுச்சியை உருவாக்கும் தமிழ்ப்பற்றை வளர்க்கும்.  தமிழ்இனஉணர்வை ஊட்டும்.

நற்றமிழில் வேற்றெழுத்தைக் கலக்கல் நன்றா?

     மாற்றுமொழி எழுத்துக்களை 
 மதிகெட்டுத் திணிக்கின்றாய்!
     ஏற்றமிகு தாய்த்தமிழை 
 எடுத்தெறிந்து சிதைக்கின்றாய்!
     போற்று தமிழ் பொன்னெழுத்தைப் 
 பிழையென்று தள்ளுகிறாய்!
     துள்ளுமடா தமிழுலகம் 
 துணிந்தாயோ பழியேற்க!

உலக மொழிகளில் அதிக எழுத்துக்கள் உள்ள் மொழி தமிழ்மொழி.  எழுத்துக்கா பற்றாக்குறை தமிழில். எதற்காக தமிழில் பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டுமென்ற கேள்வியை எழுப்பி அழகு தமிழில், அமுதத் தமிழில் சுத்தமான தமிழில் பிறமொழி எழுத்து எனும் நஞ்சை கலப்பதை நிறுத்துங்கள் என்று சொல்லி வடித்த கவிதை நன்று.

பெருமைமிகுதமிழ்மொழியா? 
பிற எழுத்துக் குப்பைமேடா?

     கனிச்சுவை சிந்தும் நற்றமிழில் 
 கலப்படம் செய்வதை நிறுத்தி விடு 
தனித்துவம் மிளிரும் மொழிவிட்டு 
 தரமில் சொல்லை எறியெடுத்து !

உணவில் கலப்படம் உயிருக்குக் கேடு தரும்.  மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் என்பதை கவிதையால் உணர்த்தியது சிறப்பு.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போல தமிழ் முழக்கம் செய்து, உறங்கிடும் தமிழரை மரபுக் கவிமுரசால் எழுப்பி உள்ளார்.  நூலாசிரியர், தேசிய நல்லாசிரியர், கவிஞர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்