முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !





முக்கனி!
நூல் ஆசிரியர் :
கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
******
      கவிநயச்செல்வர் மன்னை பாசந்தி அவர்கள் துளித்துளி நிலா, மின்னல் துளிப்பா என்ற ஹைக்கூ நூல்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர்.  ‘முக்கனி’ என்ற பெயரில் கதை, கவிதை, கட்டுரை வடித்துள்ளார்.  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, ஒரே நூலில் மூன்று வகை தமிழ் விருந்து வைத்துள்ளார். 

பலகலை வித்தகராக உள்ளார். கதை, கவிதை, கட்டுரை மூன்றும் எழுதுவது என்பது அரிதிலும் அரிதான ஆற்றல் தான். மூன்று வகையிலும் முத்தாய்ப்பாக எழுதி உள்ளார். பாராட்டுக்கள். இவரது படைப்புக்களில் மனிதநேயம் மேலோங்கி உள்ளது.
      கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியாரின் அணிந்துரையும், நூல் விமர்சனம் போட்டியில் முதல் பரிசு வென்ற மேனாள் சோவியத் தூதரக அலுவலர் USSR கோ. நடராசன் அவர்களின் அணிந்துரையும் பொன் குடத்திற்குப் பொட்டு வைத்தாற் போல உள்ளன. சிறப்பாக உள்ளன.
நூலின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளன. இந்த நூலில் உள்ள படைப்புகளை பிரசுரம் செய்த இதழ்களின் பெயர் மட்டுமன்றி அதன் ஆசிரியர்களின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
      முக்கனி என்றால் மா, பலா, வாழை. தமிழர்களின் விருந்துகளில் முக்கனி வைப்பது உண்டு.  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாள் விழாவில் நடந்த விழாவில் முக்கனி வைத்தார்கள். முக்கனிகளின் சுவையை உணர்த்தும் வண்ணம் நூல் உள்ளது.  மூவேந்தர், முத்தமிழ், முக்காலம் என்று மூன்றுக்கு என்று பல சிறப்பு உண்டு. இந்த நூலிற்கும் பல சிறப்பு உண்டு.
      சிறுகதை சிற்பி அமரர் பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு கதைப்பகுதியைக் காணிக்கை ஆக்கி உள்ளார்.  9 சிறுகதைகள் உள்ளன.  ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சேதி தரும் விதமாக சிறப்பாக எழுதி உள்ளார்.

முதல் கதை ‘நேரமடா சாமி’ – ஆட்டோக்காரர்கள் மீட்டருக்கு மேல் ரூ.5 கேட்டால் தயங்காமல் கொடுங்கள் என்கிறார் ; இரண்டாவது கதை ‘உல்லாசப் புறா’ – நாம் பிறருக்கு உணர்த்தினால் பிறர் நமக்கு உதவுவார்கள் என்ற நீதியை உணர்த்தி உள்ளார் ; மூன்றாம் கதை ‘இரண்டாம் தாரம்’ – திருமணத்திற்கு முன்பே அனாதை விடுதியிலிருந்து தத்து எடுத்து வளர்க்கும் உயர்ந்த உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார் ; நான்காம் கதை - ‘கால தாமதம்’ மருமகள் என்றாலே காலம்காலமாக மாமியாரைக் குறை கூறியே வருவார்கள் என்ற இயல்பினை உணர்த்தி உள்ளார் .
ஐந்தாவது கதை – ‘விடிவு காலம்’ – மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் சோகத்திற்கு முடிவுரை எழுதி இயந்திரம் பயன்படுத்தும் நிலையையும் அதனை அறிவிக்கும் அதிகாரியை குப்பன் மகன் சுப்பன் என்று காட்டி இருப்பதும் அருமை ; ஆறாவது கதை ‘அடுத்த குரு’ குருவாகும் தகுதி என்ன? என்ன? என்பதை விளக்கிய விதம் அருமை ; ஏழாவது கதை ‘உயில்’ பிச்சைக்காரன் கூட பிச்சை எடுத்ததில் சேமித்து வைத்து இறந்ததும் இறுதிச் சடங்கிற்கும் மீதப்பணம் அனாதை இல்லத்திற்கும், முதியோர் இல்லத்திற்கும் வழங்கிட உயில் போன்று எழுதி வைத்து இறந்த கதை பணக்காரர்களின் கல் நெஞ்சை கரைப்பதாக உள்ளது.
எட்டாவது கதை ‘கோயில் பூசாரி’ – நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கவில்லை என்று மனைவி சாடிய போதும் மனதைத் தேற்றி வாழும் உண்மை ஊழியன் கதை நன்று ; ஒன்பதாவது கதை – ‘ஓடி விளையாடு பாப்பா’ – பாபு, கோபு நட்பின் மேன்மையை விளக்கி காணாமல் போன நாயைக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்த விலங்காபிமானம் நன்று.
9 தலைப்புகளில் கவிதை எழுதி உள்ளார். கவிதைப்பகுதியை ‘கவிமாமணி இளையவன்’ அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
உறவுகளில் உன்னதமான ஒப்பற்ற உறவான தாய் பற்றிய கவிதை முதல் கவிதையாக உள்ளது. தாயை நேசிப்பவர்கள் நல்ல படைப்பாளியாக விளங்க முடியும். நூல் ஆசிரியர் கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி அவர்களும் தாய் நேசர் என்பதால் தாயைப் பற்றி உணர்ந்து வடித்த கவிதை நன்று.
தாய்!
அன்பில் மிகவும் சிறந்தவள் தாய்
      பண்பில் மிகவும் உயர்ந்தவள் தாய்

       தன்பால் கொடுத்து வளர்ப்பவள் தாய்
      அன்பால் அனைவரையும் காப்பவள் தாய்
!
இக்கவிதையைப் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தாய் பற்றிய நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது.  இது தான் படைப்பாளியின் வெற்றியாகும்.  தான் உணர்ந்த உணர்வினை படிக்கும் வாசகனுக்கும் உணர்த்துவது சிறப்பு.
உலகில் உள்ள மொழிகள் அனைத்திலும் தேடிப்பார்த்தாலும் திருக்குறள் போன்ற ஒரு உன்னதமான இலக்கியத்தைக் காண முடியாது.  தமிழின் சிறப்பிற்கு சிகரமாகவும் அகரமாகவும் விளங்குவது திருக்குறள்.  திருக்குறள் பற்றிய கவிதை நன்று.
திருவள்ளுவரும் திருக்குறளும்!
அதிகாரம் என்றும் பயன் தராதே – திருக்குறள்
      அதிகாரம் என்றும் பயன் தரும்!
உலகப் பொதுமறையாம் திருக்குறள் – இப்
      புவியுலகுய்ய ஒரே மறை!
திருக்குறளைக் கையோடு வைத்திரு – நாளும்
      திருக்குறளின் வழியே நடந்திடு!
பயன்தராதே பயன்தரும் என முரண்சுவையுடன்
      படைத்த கவிதை நன்று.
கவிதை எழுதுவதோடு நின்று விடாமல், கவிதையாகவே வாழ்ந்த மகாகவி பாரதி, வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தன் பாரதி!  மன்னரைப் பார்த்து வந்த போதும் பொன்பொருள் வாங்காமல் நூல்கள் வாங்கி வந்தவன் பாரதி.  இரவல் வாங்கி வைத்த அரிசியையும் சிட்டுக்குருவிகளுக்கு தந்து பசி போக்கி மகிழ்ந்தவன் பாரதி. பாட்டரசன் பாரதி பற்றிய கவிதைகள் நன்று.
பாரத விடியல் நம் பாரதியடா!
புவி உள்ளவரை நிலைத்திருக்கும்
      புகழின் உச்சியில் நிறைந்திருக்கும்
      கவிதை உள்ளவரை கனிந்திருக்கும்
      கரை கண்டவன் நம் பாரதியடா!
சென்னையின் பெருமைகளில் ஒன்றானவர்.  வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பித்தவர். பொருள் ஆசை பணத்தாசையின்றி வாழ்க்கையை பொருளோடு வாழ்ந்து வரும் நல்லவர் பாலம் ஐயா பற்றிய கவிதை நன்று.
அன்பு பாலம் ஐயா!
எளிய தவ வாழ்க்கை உண்மை அன்பு குணத்தை   சேர்த்தவர் !
      எதற்கும் உதவும் கை உயர்வான பண்பு பணத்தை சேர்க்காதவர் !
      உதவிடும் உவகை உளத்தே நட்பு பிறர்க்குதவுவதில் சிறந்தவர் !
      உயரிய கொள்கை உதவிடும் துடிப்பு பிறர்க்குவ்வே பிறந்தவர் !
      ஆலம் விழுது போல நாளும் – அன்பு
      பாலம் விழுதாய் நாமிருப்போம்!
நல்ல மனிதரைப் பாராட்டி வடித்த கவிதை நன்று.  பாராட்டிய நல்ல உள்ளத்திற்குப் பாராட்டுக்கள்.
நூல் ஆசிரியர் கவிநயச்செல்வர் மன்னை பாசந்தி அவர்கள், தான் குருவாக மதித்து போற்றும் வெங்கட்ராமன் அவர்களைப் பாராட்டியும் கவிதை வடித்துள்ளார்.
வாழ்நாள் சாதனையாளரே வடமலை யழகரே – பிறரை
      வாழ்த்தி வழிகாட்டியாய் விளங்கிடும் நற்குண்சீலரே – உமை
      வாழ்த்த வயதில்லையே முத்து விழா நாயகரே – சிரம்
      தாழ்த்தி வணங்கிடும் மன்னை பாசந்தியை வாழ்த்திடுவீரே!
வாழ்த்துப்பாவில் தன்னை வாழ்த்துங்கள் என்று சொல்லும் நல்ல சீடராக உள்ளார்.
கட்டுரை பகுதி – தன் குருநாதர் பி. வெங்கட்ராமன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். குருபக்தியுடன் சீடர் இருப்பதற்குப் பாராட்டுக்கள்.  இன்று ஆசிரியர் மாணவர் உறவு செம்மையாக இல்லை என்பது வருத்தம்.நினைவிற்கு வந்தது .
நூற்றாண்டு நாயகர், பதிப்புலகில் மதிப்புமிகு மாமனிதர் புதுக்கோட்டை பரசுராம் பற்றிய கட்டுரை நன்று. அவர் பற்றி அறிந்திராத பல புதிய தகவல்கள் அறிந்திட வாய்ப்பாக உள்ளது.
நூற்றாண்டு விழா நாயகர் வெ. சந்தானம் பற்றிய கட்டுரை மிக நன்று. அதிலிருந்து சிறு துளிகள்.
“இளமைக் காலம்”
வெ.சந்தானம் பிறக்கும் போது செல்வ சீமானாகத்தான்
பிறந்தார். திடீரென்று கடலில் மூழ்கிய கப்பலால் அவரது தந்தையாரின் வியாபாரம் மிகுந்த கடனில் தத்தளித்த்து.  இளமையேலேயே வெ.சந்தானம் அவர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் சுதந்திர தாகம் இளமையின் முறுக்கு அவரை சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்து விட்டன."
குழந்தை இலக்கிய முன்னோடி அழ. வள்ளியப்பா அவர்களைப் பற்றிய கட்டுரையும் நன்று.
"தமது பதின்மூன்றாவது வயதில் எழுதத் தொடங்கி அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு தமிழ் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் நல்லுழைப்பு நல்கிய குழந்தைக் கவிஞர்”.
பல அரிய தகவல்களின் களஞ்சியமாக கட்டுரைகள் உள்ளன. கதை, கவிதை, கட்டுரை எழுதும் சகலகலா வல்லவரான நூல் ஆசிரியர் கவிநயச்செல்வர் மன்னை பாசந்தி அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன .பாராட்டுக்கள் .மணிவாசகர் பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .

கருத்துகள்