முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்!
பதிப்பாசிரியர் :
பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கதிரவன் பதிப்பகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை – 627 002. பேச : 0462 2579967,
பக்கம் : 192, விலை : ரூ.150.

******
     இலக்கிய இணையர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் முனைவர் இரா.மோகன், முனைவர் நிர்மலா மோகன். இருவரும் காதலித்துக் கரம் பிடித்து, காதல் இணையர் வெற்றிக்கு முன்உதாரணமாக வாழ்ந்து வருபவர்கள்.  எந்த ஒரு விழாவிற்கு இணையராகவே சென்று வருபவர்கள். 

தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுக்குப் பின், காந்திகிராமம் காந்தியப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகப் பணி செய்தார்கள். பட்டிமன்றங்களில் கணவர் இரா.மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு ஆயிரக்கணக்கான மேடைகளில் அணித் தலைவராக பேசி வருவதுடன், எழுத்து உலகிலும் தடம் பதித்து வருகிறார்கள். 30க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்கள்.  அதில் 12 நூல்களுக்கு மட்டும் ஆய்வுரைகள் பெற்று பதிப்பித்து உள்ளார்.

பதிப்பாசிரியர், பேராசிரியர் முனைவர் பா.வளன்அரசு. இவர் இலக்கியத்தேனீ இரா.மோகன் அவர்களின் புலமை நலம் என்ற நூலையும் தொகுத்து பதிப்பித்து இருந்தார். முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வது போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர்.

     ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். இங்கு ஒரே நூலில் 12 நூல்களின் சாறு, இலக்கியச் சாறு வழங்கி உள்ளனர்.  பாராட்டுக்கள்.  12 நூல்கள் படித்த உணர்வைத் தருகின்றது பாராட்டுக்கள்.  12 வருடங்களுக்கு ஒருமுறை  மலரும் குறிஞ்சி மலர் போல 12 கட்டுரைகளுடன் மலர்ந்துள்ள இலக்கிய மலர் இந்நூல். 

வரலாற்று சிறப்புமிக்க செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய போதே இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டு எழுதவும் பேசவும் தொடங்கி முத்திரை பதித்து தமிழக அரசின் இளங்கோ அடிகள் விருதைப் பெற்ற முதல் பெண்மணியாக உயர்வதற்கு அடித்தளமாக காரணியாக அமைந்தது. எழுத்தும், பேச்சும் இலக்கிய ஆர்வமும் தான்.

  நூல் ஆசிரியருக்கு வாழும் காலத்திலேயே மகுடம் சூட்டும் பணி தான்.  நூல் ஆய்வு தொகுப்பு நூல். படைப்பாளிக்கு கோடிப் பணத்தை கொட்டிக் கொடுத்தாலும் வராது மகிழ்ச்சி. நூல் ஆய்வில் பாராட்டில் வந்து சேரும்.

     ‘ இந்த நூலிற்கு தான் விமர்சனம் எழுதி இணையத்தில் பதிவு செய்துள்ளேன். பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு அவர்களின் ஆய்வுரை முதல் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. கட்டுரையின் முடிவுரையில் உள்ள வைர வரிகள் இதோ! 

பரந்துபட்ட புலமை நலமும், ஆய்வுத்திறமும் கொண்ட அறிஞர் நிர்மலா மோகன் பாராட்டத்தக்கவராக ஒளியுடன் மிளிர்கிறார்.

     ‘கோதை ஆண்டாள் நூல் பற்றி இளமுனைவர் திருக்குறள் கி.பிரபா அவர்கள் ஆய்வுரை எழுதி உள்ளார். நூலின் பல்வேறு பகுதிகள் பற்றி திறம்பட எடுத்தியம்பி விட்டு முடிவுரையில் எழுதியுள்ள முத்தாய்ப்பு வரிகள் இதோ!

     “ஆண்டாள் எனும் நூல் வழியே இயற்கை பற்றிய கருத்தோட்டம், பெண்ணாகப் பிறந்த கோதையின் தவ வேள்வி ஆழ்வார்கள் பன்னிருவரில் தனித்து சிறப்புடைய பெரியாழ்வாரின் திருத்தொண்டு, திருப்பாவையின் பாச்சுவை, கனவுகள் நிறைவேறும் எனும் மெய்போக்கு என அனைத்தும் அறிவதற்கு முனைவர் நிர்மலா மோகன் அவர்களின் இந்நூல் ஆய்வின் அடிப்படையில் இன்புறத்திணை நிற்கிறது.

     பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் நூல் பற்றி இளமுனைவர் தி. முகுந்தன் அவர்கள் ஆய்வுரை வழங்கி உள்ளார்.  கட்டுரையின் முன்னுரையில் இருந்து சிறு துளிகள் உங்கள் ரசனைக்கு.

     “பண்டிதமணி கதிரேசன், கோமலே, கி.வா.சகந்நாதன், அ.ச.ஞானசம்பந்தன் எனப்பல நூல்களைச் சாகித்திய அகாதெமி வழியாக வெளியிட்டுள்ளார். இக்கட்டுரை நிர்மலா மோகன் அவர்களின் எழுத்தோவியங்களுள் ஒன்றாகத் திகழும் அ.ச.ஞானசம்பந்தன் என்னும் நூல் தரும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து திறன் காண முற்படுகிறது.

     சாகித்திய அகாதமியின் சார்பில் ஒரு நூல் வருகின்றது என்றால், அது தரச்சான்று மிக்கதாகவே அமையும். தரமற்ற நூல்களை ஒருபோதும் சாகித்ய அகதெமி வெளியிடுவதில்லை.  தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களின் பல நூல்கள் சாகித்திய அகாடமி வெளியீடாகவே வந்துள்ளன. 

இதுவே முனைவர் நிர்மலா மோகன் அவர்களின் எழுத்தாற்றலை பறைசாற்றும் விதமாக உள்ளது.  தமிழையும், தமிழ் அறிஞர்களையும் போற்றும் விதமாக நூல்கள் எழுதி தமிழன்னைக்கு அணிகலன்கள் பூட்டி அழகு பார்த்து வருகின்றார்.  பாராட்டுக்கள்.  முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

     ஆய்வு உத்திகளை, நோக்கங்களை, விளைவுகளை விளக்கிடும் நூல் இது.  ஆய்வுக்கட்டுரைகள் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கட்டுரைகள் உள்ளன.  இந்நூலில் பங்குபெற்ற 12 கட்டுரையாளர்களுக்கும் பாராட்டுக்கள். 

‘மோகனம் என்ற நூலிற்கு முன்னைப் பதிவாளர் உ. சிதம்பர பாண்டியன் அவர்கள் ஆய்வுரை வழங்கி உள்ளார்.  அதிலிருந்து சிறு துளிகள் இதோ!

     “மோகனம் என்ற இந்நூலானது ஓர் ஆவணமா, கருத்துக் களஞ்சியமா அல்லது காலமெல்லாம் புகழ்பாடும் காலப் பெட்டகமா? என்று வியந்து தமிழுலகம் நோக்கும் வகையிலே தன் அன்புக் கணவர் பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் படைப்பாற்றல் திறம் போற்றும் மதிப்பீடுகளைத் தொகுத்து பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களால் பேராசிரியர் இரா. மோகன் அவர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு தொகை நூலாகும்.

இந்த நூலிற்கு விமர்சனம் எழுதி இணையத்தில் பதிவு செய்துள்ளேன்.

     ‘எடுத்தேருழவர் சோமலே என்ற நூல் பற்றி முனைவர் பதிவாளர் ந. இராசகோபால் ஆய்வுரை எழதி உள்ளார். அதிலிருந்து பதச்சோறாக சில வரிகள்.

     சோமலேயின் இதழியல் பங்கு!

     பத்திரிகைத் துறையிலும் பலரும் போற்றத் தடம் பதித்த தகைமையாளர் சோமலே.

     பத்திரிகை படிக்காத நாளெல்லாம் பிறவா நாளே என்னும் அளவுக்கு மக்களின் அன்றாட நடைமுறை வாழ்வில் பத்திரிகை இடம் பெற்று விட்டது, காலை எழுந்தவுடன் படிப்பு என்ற பாரதியின் வாக்கோடு பத்திரிகையையும் சேர்த்துக் கொள்ளலாம் எங்கின்ற அளவுக்கு பத்திரிகை  நம் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது எனவும் சோமலே குறிப்பிட்டுள்ளதை எடுத்துரைத்து அவரது கூர்ந்த மதிநுட்பத்தைப் பாராட்டுகிறார் நூலாசிரியர் நிர்மலா மோகன்.

     பல்துறை வித்தகர் கி.வா. சகந்நாதன் நூல் பற்றி முன்னைப் பதிவாளர் ச. கிருபாகரன் ஆய்வுரை எழுதி உள்ளார். அதிலிருந்து சில துளிகள்.

     நாட்டுப்புற இலக்கிய நண்பர்.

     கி.வா.ச. அய்யனார் பன்முகப் பரிமாணங்களில் ஒன்றான நாடோடிப் பாடல்களின் நண்பராகப் பரிணமித்ததை ஆசிரியர் நிர்மலா மோகன், இக்கட்டுரையில் விவரிக்கிறார். தமிழ்நாட்டில் மனிதன் நடமாடத் தொடங்கிய காலம் முதல் இந்தப் பாடல்கள் பிறந்து வளர்ந்து வழங்கி வருகின்றன.

     ஆய்வுக் களஞ்சியத் தொகுதி 1 

     இந்த நூலிற்கு திறனாய்வுத் தென்றல் புலவர் வீ. செந்தில்நாயகம் ஆய்வுரை வழங்கி உள்ளார். இந்நூலிற்கு நானும் மதிப்புரை எழுதி இணையத்தில் பதிந்து உள்ளேன். கட்டுரையில் இருந்து நெஞ்சம் கவர்ந்த வரிகள்!

     “தமிழின் மணத்தையும், அழகையும், சுவையையும், திறத்தையும் அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் முனைவர் நிர்மலா மோகன் அவர்களால் எழுதப்பெற்ற நூலே ஆய்வுக் களஞ்சியத் தொகுதி என்ற நூலாகும்.

     பண்டிதமணி மு. கதிரேசனாரின் தமிழ்ப்பணி என்ற நூலிற்கு இளமுனைவர் அ. இராசகிரி ஆய்வுரை எழுதி உள்ளார். அதிலிருந்து சில துளிகள்.

     வாழ்க்கைச் சித்திரம் !

     நிர்மலா மோகன் அவர்களின் ஆய்வுப் புலம் ஏழு தலைப்புகளாகக் கொண்டு மிளிர்கிறது. அவற்றில் முதலாவதாக வருவது வாழ்க்கைச் சித்திரம், கதிரேசனாரின் இளமைப் பருவம், கல்வி, தமிழ்ச்சான்றோர்களின் தொடர்பு பணி, ஈட்டிய நற்பெயர் ஆகியவை செவ்வன விரிந்துரைக்கப்-பட்டுள்ளன.

     “குறுந்தொகை உரைத்திறன் நூல் பற்றி இளமுனைவர் ஜி. சவுந்தரராசன் ஆய்வுரை வடித்துள்ளார். அதிலிருந்து சிறு துளிகள்.
     ‘உ.வே.சா.வின் உரைத்திறனை மட்டுமல்லாது குறுந்தொகைப் பதிப்பு வரலாறு பற்றியும் உ.வே.சா.வுக்கு முன்னர் குறுந்தொகைக்கு உரை எழுதி வெளியிட்டோர் பற்றிய செய்திகளையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் முனைவர் நிர்மலா மோகன்.

     ‘சிற்றிலக்கியங்களில் முன்முனைப்போக்கு என்ற நூல் பற்றி முனைவர் ந. உசாதேவி ஆய்வுரை வழங்கி உள்ளார்.

     “முனைவர் நிர்மலா மோகன் அவர்கள், மதுரை செந்தமிழ்க் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆறு விருதுகள் பெற்ற கவிஞர், ஆற்றல்சால் ஊடகங்களில் பங்கேட்டு எட்டுத்திக்கும் கேட்டு மகிழும் வகையில் தமிழ் முழக்கம் செய்து வருபவர்.

     ‘இலக்கிய மணிகள் என்ற நூலிற்கு இளமுனைவர் வே. ஆனந்தன் அவர்கள் ஆய்வுரை எழுதி உள்ளார்.  அதிலிருந்து சில வைர வரிகள்.

     “தான் சுவைத்த காட்சிகளை நடப்பியல் நிகழ்வுகள் மூலம் படிப்பவர்க்கும் புலனாகிற வகையில் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கி உள்ளார். இலக்கிய உலகம் பேராசிரியரின் சிந்தனைகளைப் போற்றும் என உறுதியாகக் கூற முடியும்.

     “படித்தாலே இனிக்கும் என்ற நூலிற்க்கு நல்லாசிரியர் முனைவர் வை. இராமசாமி ஆய்வுரை எழுதி உள்ளார்.  இந்நூலிற்கு நானும் இணையத்தில் மதிப்புரை பதிப்பித்து உள்ளேன். நூலிலிருந்து சில துளிகள்.

     “பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கியத் துறையிலும், சமுதாயத் துறையிலும் அழிக்க இயலாத அடையாளங்களை விட்டுச் சென்ற மாபெரும் மக்கள் கவிஞர். ஆன்மீகத்தில் தொடங்கிய பாவேந்தரீன் கவிதைப் பயணத்தில் பின்னாளில் தீவிரமும் நாத்திகமும் புகுந்து விட்டதை எடுத்துரைக்கிறார் அருட்செல்வர்.

இந்த நூலிற்கு விமர்சனம் எழுதி இணையத்தில் பதிவு செய்துள்ளேன்.

     இளங்கோ அடிகள் விருது பெற்ற தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களின் எழுத்துப்பணிக்கு மகுடம் சூட்டி உள்ள மகத்தான நூல். பாராட்டுக்கள்.

http://eraeravi.blogspot.in/2014/11/blog-post_72.html

http://eraeravi.blogspot.in/search?q=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

http://eraeravi.blogspot.in/2013/04/1.html

http://eraeravi.blogspot.in/2017/01/blog-post_13.html

கருத்துகள்