பெண் கல்வி ! கவிஞர் இரா .இரவி !
பெண் கல்வி கட்டாயம் வேண்டுமென்று அன்றே
பெரியார் அனைவரிடமும் வலியுறுத்தினார் நன்றே !
பெண்கள் மாநாட்டில் அதனால்தான் அவர்கள்
பெரியார் என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தனர் !
ஆண் படித்தால் அவனுக்கு மட்டுமே நன்மை
பெண் படித்தால் இரு குடும்பத்திற்கு நன்மை !
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற
அறிவிலிகள் கூற்று மதிப்பற்றுப் போனது !
தீவிரவாதிகள் மிரட்டியபோதும் அஞ்சாமல்
தன்னம்பிக்கையோடு பயின்றாள் மலாலா !
ஏவுகணை ஏவிடும் அறிவியல் கூடத்தில்
ஏற்றமிகு பெண்கள் பங்களிப்பு உள்ளன !
உலகின் தலைசிறந்த நிறுவனங்களின்
உயர்ந்த பொறுப்பில் பெண்கள் உள்ளனர் !
இந்திய ஆட்சிப் பணியிலும் பெண்கள்
இனிய முத்திரைப் பதித்து வருகின்றனர் !
இந்திய காவல்துறைப் பணியிலும் பெண்கள்
இனிய முத்திரைப் பதித்து வருகின்றனர் !
நீதித்துறையிலும் நங்கையர் பலர்
நல்ல பல தீர்ப்புகள் வழங்கி வருகின்றனர் !
மருத்துவத் துறையிலும் மங்கையர் பலர்
மகத்தான சாதனைகள் புரிந்து வருகின்றனர் !
விளையாட்டுத் துறையிலும் வஞ்சியர் பலர்
வானளாவிய சாதனைகள் நிகழ்த்தி வருகின்றனர் !
ஆணை விட பெண் அறிவாற்றல் மிக்கவள்
அனைத்துத் துறையிலும் மெய்ப்பித்து வருபவள் !
பெண் படித்தால் வீட்டிற்கு மட்டுமல்ல
பிறந்த நாட்டிற்கும் பெருமைகள் சேரும் !
பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்
பார் போற்றும் புகழைப் பெற வைப்போம் !
கருத்துகள்
கருத்துரையிடுக