டாக்டர் கே.பி. அருச்சுனன் ! கவிஞர் இரா.இரவி !

டாக்டர் கே.பி. அருச்சுனன் !


கவிஞர் இரா.இரவி !

      டாக்டர் கே.பி. அருச்சுனை அவர்களைப் பற்றி, இனிய நண்பர், கவிஞர், கவிச்சூரியன், ஹைக்கூ மின் இதழ் ஆசிரியர் கண்ணன் சேகர் அவர்கள் மூலம் அறிந்து இருக்கிறேன்.  அடிக்கடி முகநூலில் டாக்டர் கே.பி. அருச்சுனன் அவர்களின் செயல்பாடுகளை பதிவு செய்வார்கள், படித்து இருக்கிறேன், பார்த்து இருக்கிறேன்.
      ஆங்கில மருத்துவம் என்பது இன்றைக்கு மக்களின் நம்பிக்கையை இழந்த ஒன்றாக மாறி இருக்கின்றது.  சாதாரண காய்ச்சலுக்கு ஸ்கேன் எடுக்கச் சொல்லி அதில் கமிசன் பெறும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டனர் சில மருத்துவர்கள். ரமணா படத்தில் வருவது போல, ஏற்கனவே இறந்தவர்களை சில நாட்கள் வைத்து இருந்து விட்டு லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.

      ஜல்லிக்கட்டுக்குத் தடை செய்து காளை இனங்களை அழித்து வெளிநாட்டுப் பசுக்களை இறக்குமதி செய்யும் உலகமய அரசியல் போலவே, காலம்காலமாக இருந்து வரும் சித்த வைத்தியத்தை அழித்து விட்டு, ஆங்கில மருத்துவம் ஆட்டம் போட்டு வரும் காலத்தில் சித்த மருத்துவத்தை இன்னும் அழியாமல் காத்து வரும் காவலர்களாக உள்ள மருத்துவர்களில் குறிப்பிடத்தகுந்த மருத்துவர் திரு. கே.பி. அருச்சுனன்.

      வில்லிற்கு அருச்சுனன் என்பார்கள் ; அது போல, சித்த மருத்துவத்திற்கு கே.பி. அருச்சுனன் என்றால் மிகையன்று.  ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தை நிறுவி, தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்து, ஓய்வின்றி உழைத்து, மருத்துவ சேவை செய்து வருகிறார், பாராட்டுகள்.

      சில வகையான மூலிகையில் குணமாகும் நோயுக்கு சில லட்சங்கள் பிடுங்கி வரும் ஆங்கில மருத்துவ மோசடியிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்.  விழிப்புணர்வு பெற வேண்டும். சர்க்கரை நோய் அறிமுகமே, சர்க்கரை நோய் மருந்து விற்பனைக்கான மோசடி.

      மருத்துவர் அருச்சுனன் போன்ற சித்த மருத்துவர்களை அணுகி சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றால் அதிலிருந்து விடுபடலாம்.  மஞ்சள் காமாலைக்கு ‘கீழ்வாய்நெல்லி’ என்ற மூலிகைதான் மருந்து. ஆங்கில மருத்துவத்திலும் இந்த மூலிகையிலிருந்து எடுக்கப்பட்ட மருந்தை, மாத்திரையைத் தான் எழுதுகின்றனர்.  இது போன்று பல நோய்களை குணமாக்கும் அற்புத மூலிகைகள் நம் வசம் உள்ளன.  அவற்றை வளர்க்க வேண்டும். எப்படி மருந்தாக உட்கொள்வது என்பதை அருச்சுனன் போன்ற மருத்துவர்களிடம் அறிந்து உண்டால் நோய்கள் தீரும்.  வளமாகவும் நலமாகவும் வாழ வழிவகுக்கும்.

      மருத்துவர் கே.பி. அருச்சுனன் அவர்கள் பல்வேறு விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார்.  பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தி பலருக்கு நோய்களை நீக்கி உள்ளார். 40 ஆண்டுகள் மருந்து அனுபவமும், 35 ஆண்டுகள் சமூக சேவையில் அனுபவமும் மிக்கவர். 100க்கு மேற்பட்ட கட்டுரைகள் வடித்தவர்.  மறைந்து போன மூலிகைகள் பற்றி விழிப்புணர்வு விதைத்தவர்.  சித்த மருத்துவப் பயிற்சியும் பலருக்குத் தந்துள்ளார்.  ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்கும் மருத்துவர் கே.பி. அருச்சுனன் அவர்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன். நீங்கள் வாழ்ந்தால் சித்த வைத்தியமும் நீடுழி வாழும். 


கருத்துகள்