பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !

எது கவிதை ?  கவிஞர் இரா .இரவி !

எது கவிதை ? என்ற கேள்வி எல்லோரும் 
என்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர் !

விடை மட்டும் இன்றும் கிடைக்கவே இல்லை 
வித்தியாசமாக எழுதி  இருந்தால்  கவிதையா ?

வளமான  சொற்கள் இருந்தால்  கவிதையா ?
வற்றாத கற்பனை இருந்தால்  கவிதையா ?

மரபு இலக்கணத்துடன்  இருந்தால்  கவிதையா ?
மரபின்றி புதுமையாக   இருந்தால்  கவிதையா ?

மூன்றுவரி ஹைக்கூவாக  இருந்தால்  கவிதையா ?
முத்தாய்ப்பான வசனமாக  இருந்தால்  கவிதையா ?

உள்ளத்தில் உள்ளதை எழுதினால் கவிதையா ?
உணர்ந்த உணர்வை வடித்தால் கவிதையா ?

அழகியலை அழகாய்த் தீட்டினால் கவிதையா ?
அழகியின் அங்கம் வர்ணித்தால் கவிதையா ?

ஏழ்மைக்காக வருந்தி எழுதினால்  கவிதையா ?
இன்னல்களை எடுத்து இயம்பினால்  கவிதையா ?

தன்னம்பிக்கை விதை விதைத்தால்  கவிதையா ?
தன்னிகரில்லா ஓசை நயம் இருந்தால்  கவிதையா ?

துன்பத்திற்குத் தீர்வு  கூறினால்  கவிதையா ?
துயரத்திற்கு ஆறுதல் தந்தால்   கவிதையா ?

காதலிக்குக்  காதலன் வடித்தால்  கவிதையா ?
காதலை  உயர்வாய் காட்டினால்  கவிதையா ?

மரபுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
புதுக்கவிதையே  கவிதை என்கின்றனர் சிலர் !

வசனக் கவிதையே  கவிதை என்கின்றனர் சிலர்  !
விவேகமான ஹைக்கூவே கவிதை என்கின்றனர் சிலர்  !

கவிதையின் வடிவம் எதுவாக இருந்தால் என்ன ?
கவிதை வாசகர் சிந்தையைக்  கவருவதாக இருத்தல் வேண்டும் !

எது கவிதை என்ற கேள்விகள் தொடர்ந்தாலும் !
எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுதோ அதுவே கவிதை  !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்