ஞாபகம் வருதே ! கவிஞர் இரா .இரவி !

ஞாபகம் வருதே !            கவிஞர் இரா .இரவி !

ஒன்று முதல் ஐந்து வரை ஆண் பெண் 
ஒன்றாகவே படித்தோம் நட்பாய் இருந்தோம்  !

ஆசிரியர் ஆசிரியை இருவருமே எங்கள் மீது 
அன்பு செலுத்தி கற்பித்து வந்தனர் ! 

நாங்களும் அவர்களை இரண்டாம் பெற்றோராக 
நினைத்து நாளும் கல்வி கற்று வந்தோம்   !

குரு சீடர் உறவு என்பது அன்று எங்களுக்கு 
குதூகலமாக மகிழ்வாக  இருந்து வந்தது !

எல்லோரும் மிக அன்பாகப்  பழகி வந்தோம் 
எங்களுக்குள் வேற்றுமை இல்லவே இல்லை !

யார் என்ன சாதி என்பது அன்று எங்களில்
யாருக்கும் எதுவும் தெரியவே தெரியாது  !
.
வீட்டிலிருந்து கொண்டு  வந்த உணவை 
விரும்பிப்  பகிர்ந்து உண்டு மகிழ்வோம் !

ஆசிரியர் அடித்தாலும் வாங்கிக் கொள்வோம் 
அவரும் மறுகணம் ஆறுதல் சொல்வார் !

பள்ளியின் வாசலில் பாட்டி அன்பாய்  விற்கும் 
பழங்கள் சோளக்கதிர் வாங்கி உண்போம் !

முதல் மதிப்பெண் வாங்கவில்லை நான் 
முழுமனதுடன் பள்ளி சென்று வருவேன் !

பள்ளிக்கு விடுமுறை என்றால் நண்பர்களை 
பார்க்க முடியாதே என மனம் வருந்துவேன் !

நடந்து செல்லும் தூரத்தில்தான் பள்ளி 
நல்ல தமிழ் வழியே பாடங்கள் பயின்றோம் !

அப்போது எல்லாம் அரசுப்பள்ளி ஆலயம் 
அற்புதமாக சொல்லித் தருவர் ஆசிரியர்கள்!

நீதி போதனைக்கு தனி வகுப்பு உண்டு 
நீதிக் கதைகள் தினமும் சொல்வார்கள் !

அசைப்போட்டுப் பார்த்தேன் பள்ளிப் பருவத்தை 
அனைத்தும் மறக்கவில்லை ஞாபகம் வருதே !  


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்