தினமணி கவிதைமணி ! தந்த தலைப்பு திருமண நாள் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி  !தந்த தலைப்பு

திருமண நாள் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள்
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் !

பலருக்கு பொறுப்பும் மகிழ்வும் தந்தது 
சிலருக்கு வருத்தமும் சோகமும் தந்தது !

இன்றுமுதல் இணையும் இணைகள் இவர்கள் 
என்று உலகிற்கு அறிவிக்கும் அற்புதநாள் !

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால் 
உலகமே வியந்து பாராட்டுது நம்மை !

இறுதிவரை இணைபிரியாது வாழ்வோர் பலர் 
இணையைப் பிடிக்காமல் பிரிந்து வாடுவோர் சிலர் !

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் 
ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல் !

நான் என்ற அகந்தை யாருக்கு வந்தாலும் 
நல்ல குடும்பம் சிந்தைந்துப் போகும் !

பொறுமை இழந்து கண்டபடி பேசியதால் 
பூமியில் இணைகள் பிரிந்து விடுகின்றனர் !

அன்பு செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால் 
ஆயும் இருவருக்கும் நீளும் என்பது உண்மை !

மனைவியின் மனதை மதித்து நடந்தால்
மனையில் இன்பம் பொங்கி வழியும் !

கணவன் மனதை புரிந்து நடந்தால் 
கடைசிவரை பிரியாது இணைந்து வாழலாம் !

எங்கிருந்தோ இங்கு வந்த மனைவியின் 
எண்ணம் அறிந்து கணவன் நடக்க வேண்டும் !

ஆணாதிக்கச் சிந்தனையை அகற்றி வாழ்ந்தால் 
அகமும் புறமும் வாழ்வு அன்பாய் அமையும் !

எடுத்து  எறிந்து மனைவியைப் பேசியதால் 
இன்னலில்  வாடி வதங்கும் கணவர் உளர் ! 

கணவனின் குணம் அறிந்து மனைவியும் 
கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் இனிக்கும் !

வசமாகும் வானம் மகிழ்வோடு வாழ்ந்தால் 
வருடா வருடம் கொண்டாடி மகிழும் திருநாள் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்