தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு ! 
குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி !     கவிஞர் இரா .இரவி !

குடையின்றி நின்று இருந்தபோது 
குடையோடு வந்தால் என்னவள் !

வருக என்று கண் அசைத்தாள் 
விழாக்கோலமானது மழைக்காலம் !

இருவரையும் இணைத்து ரசித்தது மழை
இனிதே பேசிக்கொண்டே பயணம் !

நெற்பயிர் வளர  மட்டுமல்ல மழை 
நல்காதல் வளரவும் உதவியது மழை !

யாருக்கும்  கேட்காதவாறு  பேசினோம் 
யாரும் பார்க்காதவாறு  மறைத்தது குடை !

மழையில் நனையவில்லை நாங்கள் 
மகிழ்ச்சியில் நனைந்தோம்  நாங்கள் !

குடைக்குள் இடம் தந்து பாரியானாள்
குமரியின் பார்வை குளிருக்கும் இதமானது !

சிக்கி முக்கி கற்கள் உரசல்போல 
சின்ன வெப்பம் வந்து போனது !

குடைக்கு வெளியே சாரல் மழை 
குடைக்கு உள்ளே மகிழ்ச்சி மழை !

சின்னத் தீண்டல் சிலிர்ப்பானது 
சிரிப்பும் முகத்தில் எட்டிப் பார்த்தது  !

வேகநடை நடந்துப் பழக்கப்பட்டவன் 
வஞ்சிக்காக மெல்ல நடந்து மகிழ்ந்தேன் !

பெண்கள் குடை அளவில் சிறிதானது
பெரு மகிழ்ச்சிக்கு காரணமானது !

இடி மின்னல் வந்த போது அவள் 
இன்னும் கொஞ்சம் நெருங்கினாள் !

குடையின்றி   நின்றபோது நான் 
கொடுமை மழை என்று சபித்தேன் !

குடையோடு அவளுடன் செல்கையில் 
அருமை மழை என்று பாராட்டினேன் !

வானுக்கும் நன்றி வான்மழைக்கும் நன்றி 
வஞ்சிக்கும் நன்றி வஞ்சியின் குடைக்கும் நன்றி ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்