நன்றி . தினமணி இணையம் ! தேர்தல் நாள்: கவிஞர் இரா .இரவி

நன்றி . தினமணி இணையம் ! 

தேர்தல் நாள்: கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 16 May 2016 02:22 PM IST
குடவோலை முறையில் தேர்தல் கண்ட தமிழன்
குவலயம் சிரிக்கும் தேர்தல் காண்கிறான் இன்று !
எவ்வளவு தருவீர்கள் ? எப்போது தருவீர்கள் ?
என்று வாக்காளர்களே கேட்கும் அவலம் இன்று !!
வந்ததும் தருவோம் ! தந்ததும் வாக்களியுங்கள் !
வாக்குறுதி தருகின்றனர் கட்சிக்காரர்கள் இன்று !!
இத்தனை கோடிகள் இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை
எம் தமிழகத்தில்தான் அதிகபட்ச வரவு சோதனையில் !
ஆணையத்தின் கண்களில் மண் தூவிவிட்டு
அனைவருக்கும் வழங்கி விடுவார்கள் பணத்தை !
பணம் மட்டுமல்ல வேறு மளிகைப் பொருளாகவோ
பெட்ரோலாகவோ அலைபேசிடக் கட்டணமோ !
எப்படியும் கையூட்டு வந்து விடும்
என்ற காத்திருப்பில் வாக்காளர்கள் !
பணம் வாங்கி விட்டோம் வாக்களிப்போம் என்று பலர்
பணம் வாங்கினாலும் வாக்களிக்காதோர் என்று சிலர் !
உலகமே வியந்துப் பாராட்டிய மக்களாட்சி
உலகம் சிரிக்கும் வண்ணம் சீரழிந்தது !
சொந்த சொத்துக்களைத் தந்து வந்தனர் அன்று
சொந்தமாகச் சொத்துச் சேர்க்க வருகின்றனர் இன்று !
தொண்டு செய்திட நல்லோர் வந்தனர் அன்று
தொண்டு என்றால் என்னவென்று அறியதோர் இன்று !
பொதுநலம் காத்திட அறவோர் வந்தனர் அன்று
தன்ன்லம் பேணிட தன்னலவாதிகள் இன்று !
மனசாட்சியோடு அரசியல் செய்தனர் அன்று
மனசாட்சியற்ற மனிதர்கள் மலிந்தனர் இன்று !
தந்தை பெரியார் வெறுத்தார் தேர்தல் முறையை
தனக்காக அவர் என்றும் கேட்டதில்லை வாக்கு !
மாண்புகள் மிக்க உண்மையான மக்களாட்சி மலரட்டும்
மாசற்றவர்களை கையூட்டு இன்றி தேர்ந்தேடுப்போம் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்