இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !
நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தாசபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
திருமகள் நிலையம், சென்னை.  விலை : ரூ. 100

*****
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை நூலின் தலைப்பிற்கு ஏற்றபடி இயற்கை சிலிர்க்கிறதோ இல்லையோ நூலைப் படிக்கும் வாசகர்  சிலிர்ப்பது உறுதி . நூல்  முழுவதும் இயற்கை, இயற்கை, இயற்கை தவிர வேறில்லை எனும் அளவிற்கு முழுவதும் இயற்கை பற்றிய கவிதைகள்.  நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி அவர்கள் இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளோடு, மற்ற கவிஞர்கள் இயற்கை பற்றி எழுதிய கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்.  பாராட்டுக்கள்.  ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கு ஏற்ப தான் ரசித்த கவிதைகளைப் பகிர்ந்து உள்ளார். 
மொத்தம் 24 கவிஞர்களின் கவிதைகள் உள்ளன.  நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி எழுதிய கவிதைகளும் உள்ளன. 
பாடுபொருளாக இயற்கையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு கவிதைகள் பலரும் வடித்துள்ளனர். சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அணிந்துரையும் மிக நன்று.
வானவில் ! கவியரசு நா. காமராசன் 

இயற்கை
ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி

ஒரு ஓவியத்தை சிருஷ்டித்தது
அது தான் வானவில்
சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
துரும்பு கூட
அழகாகத்தான் இருக்கிறது.
வானவில் பற்றி பலரும் கவிதை எழுதி உள்ளனர்.  கவியரசு நா. காமராசன் பார்வை வித்தியாசமானது.

       போட்டி !  கவிக்கோ அப்துல் ரகுமான் !

 ஒரு நாள், எனக்கும் வானத்திற்கும்
       போட்டி நடந்தது.
       நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
       அது புயலை எடுத்து வைத்தது
       இறுதியில் நான்

       புதுப்புது இலட்சியங்களை
       நோக்கி நடக்கும்
       என் பாதங்களை எடுத்து வைத்தேன்
       வானம் தோற்றது.

கவிதையின் முடிப்பு தன்னம்பிக்கை விதைப்பு.  இலட்சியம் நோக்கி நடந்தால் வானமே நம்மிடம் தோற்கும் என்கிறார் கவிக்கோ.

ஆதிவாசி ! கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் !
       
       கனத்திருண்ட 
       காடுகளின் ரகசியங்கள்
             அவன் கண்களில்
       கலைந்தடர்ந்த
             அவன் தலைமுடிக் கற்றைகளில்
       ஆதித் தாவரங்களின்
             அபூர்வ நெசவு.
ஆதிவாசியை அணிந்துரை வழங்கிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்  வித்தியாசமாக பார்த்துள்ளார். 

மேகம்பாடும்பாடல்!தொகுப்பாசிரியர் 
கவிஞர் கவித்தாசபாபதி!

        பெண்மனச் சிறகு போல் – ஒரு
              கன்னியின் கனவு போல்
              என்மேனி விரியும் – நான்
              எழில்மேக இளவரசி
              கடல் என் தாயகம்
              நீர் என் சீதனம்
              மலரும் செடியும்
              மண்ணும் மனிதரும்
              கன்னிப்பெண் என்
              கனிவான பிள்ளைகள்.
மேகம் பாடும் பாடல் இனிமையாக ரசிக்கும்படி உள்ளது.  பாராட்டுக்கள்.
 உப்புநீர்ச் சமுத்திரம் ! கவிஞர் குட்டி ரேவதி
      
        அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
              நிறைய வானங்களான அது நீந்தி விட்டதாம்
              இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
              தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்!

கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் குட்டியான சிட்டுக்குருவியைப் பார்த்த விதம் நன்று.

       மரங்கள் !கவிஞர் மு. மேத்தா!
       நாங்கள் 
       காற்று மன்னவன்
       கால்நடை யாத்திரையைக்
             கண்டு முரசறையும் 
       கட்டியங் காரர்கள்
             தரையில் நடக்கப் 
       பிரியப்படாத போது
             காற்று எங்கள் 
       தலைகளின் மீதே 
       நடந்து செல்கிறது.

புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா அவர்கள் மரங்கள் பற்றி பாடிய கவிதை நன்று.

குருவிகள் ! கவிஞர் ஆர். ராஜகோபாலன்
       
        மேலே துணி உலர்த்தும் கம்பியின் மேல்
              சிறியதாய் வெண்குருவி மேலும் சொன்னது
              இன்னும் கொஞ்சம் கனிவும் வேண்டும்!
              சரி குழந்தைகளைக் கூப்பிடு.
மனிதனுக்கு கனிவு வேண்டுமென்று சிட்டுக்குருவி சொல்வதாக வடித்த கவிதை நன்று.

எறும்பின் தொடர்நடையின் சாட்சி ! ஈழக்கவிஞர் மஜீத்

       உணவு பருக்கையை இழுத்துச் செல்லும்
             எறும்பின் சாட்சி 
       இன்னும் முடிவுறவில்லை
             முடிவுற்றப் பிறகு 
       எனது இக்கவிதை முழுமையாகிறது
             நீங்கள் வாசிக்கலாம்.
இக்கவிதை வாசிக்கும் போது வாசிக்கும் வாசகர் மனக்கண்ணில் எறும்புகளின் அணிவரிசை காட்சியாக விரியும்.
மரத்தின் வீடு ! கவிஞர் தேவதேவன்
       
யார் சொன்னது 
மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று 
தனது இலைகளாலும்
கிளைகளாலும் 
கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கோர் 
வீடு கட்டிக் கொண்டுள்ளது.
பலரும் மரத்தால் வீடு கட்டிக் கொள்கின்றனர்.  ஆனால் மரமே தனக்குத் தானே வீடு கட்டிக் கொள்வதை உணர்த்தியது சிறப்பு!

  இளவேனிலும் உழவனும்!   ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் !
              
              காட்டை வகிடு பிரிக்கும் 
              காலச்சுவடான
              ஒற்றையடிப் பாதை 
              வீடு திரும்ப 
              விழைகின்ற காளைகளை
              ஏழை ஒருவன் 
              தோளில் கலப்பை சுமந்து 
              தொடர்கிறான்.
       காளைமாடுகளையும் ஏர் கலப்பை சுமந்து செல்லும் உழவனை காட்சிப்படுத்தி  வெற்றி பெற்றுள்ளார் கவிஞர்.

      புழுதி இறங்காத காற்று! ஈழக்கவிஞர் பாலமோகன்!
              
              பூக்களும் இதழ் விரித்து 
              என்னை நையாண்டி செய்கின்றன
              பூ என்றதும் 
              நிறம், மென்மை, மணம் என்றெல்லாம்
              பல பரிணாமம் வந்து போகும் 
              இப்படியே எப்போதும்
              வாழ்ந்து காட்டி விட்டுச் செல்கிறது.
      ஈழக்கவிஞர் பாலமோகன் பூக்களின் அழகை வர்ணித்து ரசித்து கவிதை எழுதி உள்ளார்.

கவிதைகள்  மாறி மாறி உள்ளன.  அடுத்த பதிப்பில் ஒழுங்குபடுத்தி ஒரு கவிஞரின் கவிதை தொடர்ச்சியாக வருமாறு வரிசைப்படுத்தி வெளியிடுங்கள்.

நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளை மட்டும் நூலாக்காமல் பொது நலத்துடன் பிறரது கவிதைகளை நூலில் படித்தவற்றை இணையத்தில் படித்தவற்றை தொகுத்து நூலாக்கி சிலிர்க்க வைத்துள்ளார்.  பாராட்டுக்கள்.



.

கருத்துகள்