காலம் இன்னும் இருக்கிறது! நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி ! பேச9629893053 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

காலம் இன்னும் இருக்கிறது!



நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி ! பேச9629893053
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2-வது தெரு,
இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை – 
600 049.  விலை : ரூ. 40

*****
நூலாசிரியர் நாவல் காந்தி வணிகவியல் முதுகலைப் பட்டதாரி.  இவரை நான் நேரடியாக சந்தித்து இல்லை. முகநூல் வழி நண்பரான நண்பர்.  மாற்றுத் திறனாளி.  இவரது கவிதைகள் இவரை கவிதைத் திறனாளி என்று மெய்ப்பிக்கும் விதமாக உள்ளன.  ‘காலம் இன்னும் இருக்கிறது’ என்ற நூலின் தலைப்பே நம்பிக்கை தரும் விதமாக உள்ளது.  எங்கே போய் விடும் காலம் அது நம்மையும் வாழ வைக்கும் என்ற வைர வரிகளை நினைவூட்டுகின்றது.

நூலைப் படித்துக் கொண்டே வந்தேன்.  மேற்கோள் காட்டிட முக்கியமான கவிதைகள் உள்ள பக்கத்தை மடித்து வைத்து பின் எழுதுவது என் வழக்கம்.  ஆச்சரியம்! மிக அதிகமான பக்கங்களை மடித்து விட்டேன். நூலில் உள்ள பெரும்பாலான கவிதைகளை விமர்சனத்தில் மேற்கோள் காட்டிட இயலாது என்பதால் மறுவாசிப்பு செய்து மடித்தவற்றை தணிக்கை செய்து குறைத்துக் கொண்டேன்.

கவிதைகள் யாவும் மிக நன்றாக உள்ளன.  நூலாசிரியர் கவிஞர் நாவல் காந்தி அவர்களுக்கு பாராட்டுக்கள்.  நாவல் காந்தி என்ற பெயரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.  அதுபோல அவர் எழுதிய கவிதைகளையும் எளிதில் மறந்து விட முடியாது.  அசைபோட வைக்கும் அற்புதமான கவிதைகள்.

தந்தை பெரியார் சாதி ஒழிய வேண்டும், சாதி வேற்றுமைகள் ஒழிய வேண்டும் என்று இறுதி மூச்சு உள்ளவரை போராடினார்.  ஆனால் இன்று சங்கம் இல்லாத சாதி இல்லை எனும் விதமாக அனைத்து சாதிகளும் சங்கம் வைத்து சாதி வெறி வளர்த்து வருகின்றனர்.  சாதி சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கவிஞர்.

எரியட்டுமே!

பிணங்களுக்கும் 
உண்டோ சாதி 
சுடுகாட்டில்
சாதிக்கொரு 
கட்டிடம் 
எரியட்டுமே 
பிணங்களோடு
சேர்த்து 
இந்த சாதிகளும்!

இந்த நூலைன் தலைப்பில் உள்ள கவிதை தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை, விரக்தியை விரட்டிடும் கவிதை.  கவலையை காணாமல் ஆக்கும் கவிதை.  மிக நன்று.

காலம் இன்னும் இருக்கிறது.!

சில அவமானங்கள் தான் 
நமக்கான 
முன்னேற்றப்படி
      சில வருத்தங்கள் தான் 
நமக்கான 
புதிய சிந்தனையின் தொடக்கம்
      சில புறக்கணித்தல் தான் 
நமக்கான 
வளர்ச்சிப்பாதை
      சில ஏமாற்றங்கள் தான்
நமக்கான 
தடைகள் உடைக்கும் ஆயுதம்
      கவலையை விடு 
காலம் இன்னும் இருக்கிறது.
      கிழக்கே சூரியன் 
நமக்காக உதிப்பான் 
தைரியமாக இரு!

எது ஆன்மீகம்? மனிதநேயமே ஆன்மீகம் என்று வலியுறுத்தும் விதமாக வடித்த கவிதை நன்று.

பாவம் மனிதன்!
கடவுளின் காலடியில் 
காசு கொட்டும்
      மனிதனெல்லாம் கடவுளைச் சுற்றி வரும்
      இயலாத ஒருவனுக்குக் 
கொடுத்திருந்தால்
      கொடுத்தவனும் கடவுளாயிருப்பான் 
அவன் பார்வையில்
      பாவம் மனிதன் 
மனிதனாகத் தான் இருக்கிறான் இன்றும்.

நூலாசிரியர் கவிஞர் நாவல் காந்தி மாற்றுத் திறனாளி என்பதால் அவர்களின் சார்பாக உணர்ந்து வடித்த கவிதை நன்று.

மாற்றுத்(ம்) திறனாளி !

முடியாது என்பதெல்லாம் 
எங்களுக்கில்லை
      பாதங்கள் தரை மிதிக்க 
தயங்கிய போதும்
      தலை நிமிர்த்தி 
எப்பணியும் செய்வோம்
      தன்னம்பிக்கை கொண்டு
      தோழர்களே நாங்கள் 
மாற்றுத் திறனாளிகள் அல்ல
      இந்த உலகை 
மாற்றும் திறனாளி !

நூலில் ஊறுகாய் போல காதல் கவிதைகளும் இருப்பதால் ரசிக்க முடிந்தது.

தெரிந்தும்!

நீ வர மாட்டாய் 
தெரிந்தும் 
நீ வந்த பாதையில்
      நடக்கச் சொல்கிறது 
மனம்!

கல்லில் தேவையற்ற பகுதிகளைக் நீக்கிடத்தான் சிற்பம் பிறக்கும்.  மனிதனும் தன்னுள் உள்ள தேவையற்ற பயனற்ற சிந்தனைகளை நீக்கிட, நல்லது நினைக்க நல்ல சிற்பம் ஆவான் என்பதை உணர்த்திடும் விதமான கவிதை.  சிலையே பேசுவது போல.
கல்லின் குரல்!

கல்லாய் போன என்னை 
காலத்தின் கல்வெட்டாய்
      மாற்றிட கூர்மை உளிகள்
என்னைக் கோரப்படுத்தியது
      கோபங்கள் இல்லை 
நான் சாபமிடவில்லை
      என்னையும் கடவுளாய் 
மாற்றிய சிற்பியின்
      கைவண்ணம் மெச்சக் கூடியது.

காதலர்கள் காதலில் பிரிவு வந்த பின் மறந்துவிடு என்று சொன்னாலும் உண்மையில் மறப்பது இல்லை இருவருமே!  மூளையின் ஓர் ஓரத்தில் அந்த நினைவுகள் இருக்கும் என்பதே உண்மை.  அதனை உணர்த்திடும் கவிதை.

புரிந்து கொண்டேன்!
என்னை மறந்து விட்டேன் 
என்று நீ சொன்னாய்
      நானும் தான் நம்பி விட்டேன் 
ஆனால் தூரத்தில்
      யாரோ உன் குழந்தையின் 
பெயர் சொல்லி
      அழைக்கையில் 
புரிந்து கொண்டேன்
      நீ இன்னும் 
என்னை மறக்கவில்லையென்று.

நூல் முழுவதும் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார்.  சந்தித்தவற்றை, சிந்தித்தவற்றை, உணர்ந்தவற்றை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார்.  எழுத்து இணையத்தில் எழுதி வரும் படைப்பாளி.
       சில கவிதைகள் தலைப்பு இன்றி எழுதி இருந்தால் ஹைக்கூ வடிவம் பெற்று இருக்கும்.  பதச்சோறாக ஒன்று.
       மண்!

       வயல் எல்லாம் வீடு
       வாய்ச் சோற்றில்
       மண்!
       இக்கவிதையில் தலைப்பில் உள்ள மண் என்பதை எடுத்துவிட்டால் சிறந்த ஹைக்கூ.  இனி எழுதும் கவிதைகளை ஹைக்கூ பற்றிய புரிதலுடன் எழுதுங்கள். 

       காலம் இன்னும் இருக்கிறது என்ற தலைப்பில் நம்பிக்கை விதைக்கும் விதமாக நேர்மறையான சிந்தனையுடன் வடித்த கவிதைகளுக்கு பாராட்டுக்கள் நூல் . ஆசிரியர் கவிஞர் நாவல் காந்திக்கு பாராட்டுக்கள்.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்