‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்

‘புத்தகம் போற்றுதும்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்
*****
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017.
தொலைபேசி 044-24342810. 044-24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 
பக்கம் 224 விலை ரூபாய் 150
அருமை நண்பர் இரா. இரவியின் ‘புத்தகம் போற்றுதும்’ நூல், வாசிப்பவர்க்கு ஒரு இனிய அனுபவமாகும்.
‘புத்தகம் போற்றுதும்’ என்பதும், ‘கடவுளை வணங்குங்கள்’ என்று சொல்வதும் என்வரையில் ஒன்றுக்கொன்று இணையானதாகும்.
கடவுளுக்கு நிகரான புத்தகங்களைப் போற்றுவதன் மூலம், நாத்திகர்கள் கூட மறைமுகமாக ஆத்திகர்களாகி விடுகிறார்கள் என்பதே என் அழுத்தமான கருத்து.
நண்பர் ரவி, இந்த நூலில் ஐம்பது நூல்களுக்கான ஒரு முன்னோட்டத்தை அளித்திருக்கிறார்.  இந்த ஒரு நூலை வாசிப்பதன் மூலம் அந்த ஐம்பது நூல்களையும் ருசி பார்த்த ஒரு திருப்தி ஏற்படுகிறது.  கூடுதலாக, ருசித்த உணவை மிகவே விரும்பி உண்பது போல, அந்த நூல்களை எல்லாம் தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும் என்றும் வேட்கை உருவாகிறது.
இதற்காகவே ரவியை பாராட்ட வேண்டும்.
இலக்கிய உலகில் எவ்வளவோ நூல்கள், நாவல், கவிதை, சிறுகதை, திறனாய்வு, கட்டுரை என்று சுவைகளில் பல பிரிவுகள்.
இந்த ‘புத்தகம் போற்றுதும்’ நூல் இதில் எந்த பிரிவிலும் சேராமல் ஒரு தனிப்பிரிவாய் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஒரு நூலுக்குள் ஐம்பது நூலின் சாரம் அடங்கியிருப்பதை எப்படிச் சொல்வது?  மலர்களில் பல மலர்களைத் தொகுத்தால் கதம்பம்.  அது போல் இதையும் கதம்ப நூல் எனலாமா?
இக்கேள்விக்கான விடையை சான்றோர்களே கூறட்டும்.
நண்பர் இரவி அடிப்படையில் ஒரு கவிஞர்.  அதிலும் ஹைக்கூ கவிஞர்.  இதனால் சுருங்கச் சொல்லி விளங்க மற்றும் வியக்க வைப்பதில் பேர் எடுத்தவர்.  இந்த நூலைத் தந்ததன் மூலம் பெரிய நூல்களையும் ஹைக்கூ போல சிறு கட்டுரை வடிவில் புரிய வைத்து விட முடியும் என்று முனைந்திருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ஹைக்கூ கவிதைகள் எப்படி மின்னல்வெட்டாய் தாக்குமோ அதே தாக்கம் இந்நூலில் எனக்கு ஏற்பட்டது.
இந்த 50 நூல்களும் இவர் வியந்த நூல்கள்.  இதன் சிறப்பை மிக எளிய மொழி கொண்டு இவர் கூறியிருப்பதும், மயிற்பீலியால் வருடித்தருவது போல பாராட்டியிருப்பதும் ஒரு தனிச் சுகமாகத் தெரிகிறது.  சில நூல் ஆசிரியர்கள் எதிலும் தங்களை முன்நிறுத்திக்கொள்வார்கள்.  தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லி அதோடு வாசித்ததை ஒப்பிட்டு, அதோடு தங்களின் கருத்தைச் சேர்த்துக் கட்டி வாசிக்கையில் ஆயாசப்பட வைப்பார்கள்.  இரவி, முகத்துக்கு நேராக நின்று ஒரு சாமான்ய மனிதர் போன்ற பாவனையில் ஜிகினாக்கள் துளியும் இன்றி, ஆனால் தான் உணர்ந்ததை அப்படியே பேசுகிறார்.
இந்த எளிமை ஓர் அரிய விஷயமாக எனக்குப்படுகிறது.  இந்நூலில் கவிஞர் புதுயுகனின் மதிப்புரையும், திரு. இரா. மோகன் அவர்களின் மதிப்புரையும் இடம் பெற்றுள்ளது.  இரண்டுமே மதிப்புரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடம் எழுதுவது போல் உள்ளன.
புதுயுகன் உணர்வுக்கு முக்கியத்துவம் தந்தால் திரு. மோகன் உணர்வோடு வடிவத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார்.  திரு. மோகன் இலக்கிய மரபு வழி செல்பவர்.  தமிழ்க் கொண்டல் திரு. மு. வரதராசனாரின் அருமை மாணவர்களில் ஒருவர்.  பணி ஓய்வுக்குப் பின்பும் எழுத்துக்கு ஓய்வே கிடையாது என்று இயங்கி வருபவர். தான் வளர்வதோடு தன்னைச் சார்ந்தவர்கள் வளர பெரிதும் துணை நிற்பவர்.
திரு. இரவியும், திரு. மோகனின் இதமான அரவணைப்பில் வளர்பவர். அதே போல் பன்முகத்திறமைகள் கொண்ட முனைவர் இறையன்பு அவர்களின் நெறிகாட்டுதலும் உடையவர்.  மறந்தும் பிறரிடம் உள்ள பலவீனங்களைப் பாராதவர்.  உண்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்டவர்.  இப்படிப்பட்டவரின் இந்த நூலைப் போற்றுவதா, இல்லை இவரைப் போற்றுவதா என்கிற ஒரு சிறுதவிப்பு எனக்கு நேரிட்டது. இருவித போற்றுதலையும் கொள்வதே சிறப்பு எனப்படுகிறது.  அவ்வகையில் இந்நூலையும் சரி, திரு. இரவியையும் சரி மனதார போற்றுகின்றேன்.
இந்நூல் வெளியீட்டின் போதே இதன் தொடர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த நூலை விரைவாக எதிர்பார்த்து அதற்கும் இப்போதே என் வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.  வாழ்க! வாழ்க!
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்