“மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


 “மகிழ்ச்சி மந்திரம்”


நூலாசிரியர் :  தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இராரவி
வானதி பதிப்பகம்23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
பக்கங்கள் : 248, விலை : ரூ. 150.
*****
நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன், வானதி பதிப்பகம் பதிப்புச்செம்மல் திருநாவுக்கரசு வெற்றி கூட்டணியின் தரமான படைப்பாக நூல் உள்ளது.  40 சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.  இனிய நண்பர் கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு, தினமலர் வாரமலரில் தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை எழுதி இருந்தார்.  படித்துவிட்டு அலைபேசியில் அழைத்து அவரைப் பாராட்டினேன்.  அதில் வரும் ஒரு வரி, “என்றும் மகிழ்ச்சி இதுவே மந்திரம் என்று பெயர் சூட்டிய காரண காரியத்தை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரே ஒரு நூலில் அவ்வை, பரமஹம்சர், பாரதிதாசன், ரசிகமணி, பாரதியார், கல்கி, வாரியார், கி.வா. ஜகன்னாதன், புதுமைப்பித்தன், என்.எஸ். கிருஷ்ணன், வீ. முனுசாமி, கண்ணதாசன், மீரா உள்ளிட்ட எல்லோரும் வருகிறார்கள்.  நம்முடன் பேசுகிறார்கள்.  நாம் நேரில் கண்டிராத பல ஆளுமைகளின் நகைச்சுவை உணர்வை காட்சிப்படுத்தும் விதமாக நூல் உள்ளது.  தகவல் களஞ்சியமாக உள்ளது.  வாழ்வை ரசித்து ருசித்து வாழ பயிற்றுவிக்கும் நூலாக உள்ளது.  எழுத்து, பேச்சு என்ற இரு வேறு துறையிலும்
தனி முத்திரைப் பதித்து வரும் தகைசால் மாமனிதர் நூலாசிரியர்.
பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு!
‘நகைச்சுவைத் தென்றல் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்.  முதல் கட்டுரையிலிருந்து சிறு துளிகள்.  “ஒருமுறை புது தில்லிக்கு டி.கே.சி. சென்றிருந்த போது பிரதமர் நேரு தம்முடைய வீட்டிற்கு விருந்தினராக வரும்படி அழைத்தார்.  டி.கே.சி. நேருவின் வீட்டிற்கு ஓட்ஸ் சாதம் பொங்கிக் கொண்டு போனார். அதைப் பார்த்த நேரு, ‘ஓ! நீங்கள் ஆசாரம் போலிருக்கிறதே! என்று வியந்து கேட்டார். 
இல்லை நான் ஆசாரமே இல்லை. எனக்கு எல்லா வகையான ஆகாரங்களும் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசை.  ஆனால் என் வயிறு இருக்கிறதே.  அது தான் ஆசாரம்   என்றாராம்.  டி.கே.சி. தம்முடைய சர்க்கரை நோயைப் பற்றி இங்னம் வெளியிட்டார். 
பட்டிமன்ற பேச்சாளர்களில் சிலர் சொன்ன நகைச்சுவைகளையே மேடை தோறும் சொல்லி பார்வையாளர்களை சிரமப்படுத்தி வருகின்றனர்.  அவர்கள் இந்த நூல் வாங்கிப் படித்தால் மேடை தோறும் புதுப்புது நகைச்சுவைகளை பயன்படுத்த உதவும்.
மனிதர்களின் ஆசைக்கு அளவே இல்லை.  பேராசையின் காரணமாகவே பலர் குற்றம் செய்து வாழ்க்கையை சிறையில் கழித்து வருகின்றனர்.  அவர்களுக்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் நூலில் உள்ளது.  சிந்திக்க வைத்தது.  கவியரசு கண்ணதாசன் ஊதியம் பற்றியது.
மனது ஐநூறுக்குத் தாவிற்று
      அது ஆயிரமாக வளர்ந்தது
      ஈராயிரமாக பெருகிற்று
      யாவும் கிடைத்தன.
இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது.  எந்த கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.  (அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பகுதி பக். 21-22)
      நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், வாசித்த நூலின் பெயர், பக்க எண்கள் வரை மிகத் துல்லியமாக குறிப்பிட்டு கட்டுரை எழுதுவார்கள்.  இதை அறிவு நாணயம் என்பார்கள்.  இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  வெகுசிலருக்கே வாய்ந்திட்ட பெருமை.அருமை 
      இந்த நூலின் தலைப்பில் உள்ள கட்டுரையில் மகிழ்ச்சி மந்திரம் என்று வழங்கி உள்ளார்கள்.  இதனை கடைபிடித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி வசப்படும் என்பது உண்மை.
  1. உங்களிடம் இல்லாததை எண்ணி ஏங்கித் தவிப்பதை விட உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை நீங்கள் அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால் என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கின்றன என்று காட்டுங்கள்.  இதுவே மகிழ்ச்சி மந்திரம்.
  2. எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும்படி, புண்படும்படி அல்ல-இதமாக-நாகரிகமாக சொல்லுங்கள்.
  3. எதையும் எதிர்மறையாகக் காணாமல், நேர்முகமாக எதிர்கொள்ளப் பழகுங்கள்.
  4. பழைய போக்கிலேயே செல்லாமல், புதிய கோணத்தில் மாற்றிச் சிந்தியுங்கள்.
வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறியை வெற்றிக்கான சூத்திரத்தை மிக இயல்பாகவும், எளிமையாகவும், எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
ஒவ்வொரு கட்டுரை தொடங்கும் போது சிலர் எழுதியவற்றை அவர்கள் பெயருடன் மேற்கோளாகக் காட்டி தொடங்குவது நூலாசிரியர் வழக்கம்.  இதை மற்றவர்களும் கடைபிடிக்கத் தொடங்கி விட்டனர்.
‘இராமகிருஷ்ண பரமஹம்சர்’ கட்டுரையில் வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்ற வரிகளின் மூலம் உலகப்புகழ் அடைந்த கவிஞர் தாராபாரதியின் வைர வரிகளோடு தொடங்கி உள்ளார்கள்.
“நான்மறையைக் கற்றவனா ஞானி?’
      தன்னுள்
      நான் மறையக் கற்றவனே ஞானியாவான்.--
கவிஞர் தாராபாரதி !
நான் என்ற அகந்தையை அழிக்காமல் கர்வத்துடன் வாழ்ந்து கொண்டு தன்னை ஞானி என்று சொல்லிக் கொள்ளும் போலிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.
இலண்டன் கல்லூரியில் துணைமுதல்வராகப் பணியாற்றும் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் பற்றி கவிதை உறவு இதழில் எழுதிய கவிதை அலைவரிசை கட்டுரையும் நூலில் உள்ளது. 
அவரது கவிதைகளில் பதச்சோறாக ஒன்று.  
காந்தியடிகள் பற்றிய கவிதை.
அரிச்சந்திரன், பிரகலாதன், சிரவணன்,
      எல்லாம் கலந்த நிஜம் நீ
      மண்டேலா சூகி, லூதர்கிங், ஒபாமா என
      உலகில் தொடரும் இந்திய புஜம் நீ
      அகிம்சையால் ஐன்ஸ்டைனையும்
      அசரவைத்த இந்திய கஜம் நீ.
பேச்சு எழுத்து  இரண்டு துறையிலும் பிரமிக்க வைக்கும் ஆளுமையாளர் 
நூலாசிரியர்  தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .நேரம் வைக்கும் போதெல்லாம் வாசிக்கிறார் .வாசித்தவற்றில் நேசித்ததை இலக்கியத் தேனாக வழங்குகின்றார் .தமிழ்த் தேனீ என்ற பட்டத்திற்கு  முற்றிலும் பொருத்தமானவர் .இவரது ஒரு நூல படித்தால் போதும் ஒரு  நூறு நூல்கள்  படித்த தகவல்கள் அறிந்து கொள்ள முடியும் .
நூலின் சிறப்பை எழுதிக் கொண்டே போகலாம்.  நூலை வாங்கிப் படித்து பார்த்து பயன் பெறுங்கள்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்