மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மழைப் பேச்சு !
இது இன்பத் தமிழ் !

நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! 
மின் அஞ்சல் arivumathi@hotmail.com
 
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
மின் அஞ்சல்  annamakaram@gmail.com செல் 94431 59371 
விலை ரூபாய் 200.

 நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி அவர்கள் தமிழ் உணர்வும் தமிழ் இன உணர்வும் மிக்கவர் .திரைப்படத்திற்கு ஆங்கிலச் சொற்கள் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என்ற உறுதியோடு தரமான பாடல்களை மட்டுமே எழுதி வரும் பாடல் ஆசிரியர் . ஈழத் தமிழருக்காக தொடர்ந்து  குரல் கொடுப்பவர் .நான் மதிக்கும் நல்ல கவிஞர் .
.
திருவள்ளுவரின் காமத்துப்பால் போல இன்பத்துப்பால்   வடித்துள்ளார் .
 .மழைப் பேச்சு ! இது  இன்பத் தமிழ் ! உண்மைதான் படிக்கப் படிக்க இன்பம் பிறக்கும் நூல் .எல்லோருக்கும் காதல் நினைவுகளை மலர்விக்கும் அற்புத நூல் .சிறிதும் ஆபாசமின்றி , விரசமின்றி  இன்பத்துப்பால் விருந்து வைத்துள்ளார்கள் .கயிறு மேல் நடக்கும் விதமாக கூடல் பற்றி மென்மையாகவும் , மென்மையாகவும் வடித்துள்ளார் .நூலின் பின் அட்டையில்' மணமக்களுக்கான மகிழ்ச்சி' நூல் என்று உள்ளது . மணமக்களுக்கு மட்டுமல்ல 'மக்களுக்கான மகிழ்ச்சி ' நூல் இது .வாங்கிப் படித்து இன்பம் பெறுக.சின்னச் சின்ன வரிகளின் மூலம் பேரின்பம் விதைத்துள்ளார் .   

மிகத் தரமான அச்சு . கை அடக்க நூல் ,கட்டியான அட்டை ,வண்ணப் புகைப்படங்கள் யாவும் மிக நன்று .அன்னம் பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள் .இந்த நூலில் கவிதைகள் சிறப்பா ? வண்ணப் புகைப்படங்கள் சிறப்பா ? என்று வாசகர் மனதில் பட்டிமன்றம் நிகழ்ந்து விடும் .

திருக்குறள் போலவே இரண்டே வரிகளில் இனிய கவிதைகள் வடித்துள்ளார் .இன்ப மழைக்கும் ,இயற்கை  மழைக்கும் பொருந்துவதாக உள்ளது .

நிகழ்கையில் சாரல் 
நினைக்க நினைக்கத்தான் மழை ! 

இளம் இணையர்களின் இனிய உள்ளத்தை கவிதை வரிகளால் படம் பிடித்துக் காட்டுகின்றார் .பாருங்கள் .உணர்ச்சிகள்  பற்றி இலை மறை காய் மறையாக  நூலில் உள்ள கவிதைகள் உணர்த்துகின்றன .

குளித்துவிட்டுத்தான்  வந்திருக்கிறோம் 
வியர்க்க !  

மண்ணில் வாழும் நிலவு  காதலியையும் ,விண்ணில் உலவும் நிலவையும் ஒப்பிட்டு  ஒரு கவிதை மிக நன்று .

விண்மீன்கள் விழுங்கிச் சிலிர்க்கிறது 
உச்சத்தில் நிலா !

பரவசமான இன்ப நிலையை பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகின்றார் .காதலியின்   பரவச நிலை கவிதையில் காட்டுகின்றார் .படிக்கும் வாசகனுக்கு அவன் காதலி நினைவு வருவது உறுதி .

மூடிய இமைகளின் மேல் உருட்டும் எலுமிச்சை 
என் உடல் ! 

பாறைகளின் மேல் விழும் அருவியை நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

எல்லா அருவிப் புகைக்கு உள்ளேயும் 
உருண்டு கொண்டுதான் இருக்கின்றன 
பாறைக்குள் கூழாங்கல் !

இன்பத்துப்பாலை இனிக்க இனிக்க மணக்க மணக்க கவிதையாக வடித்துள்ளார் .

மூடிய இமை  திறந்த உதடு உச்சம் !  

காதலனிடம் போலியாக வேலை இருப்பதாகச் சொல்லி பொய் சொல்லி  மகிழும் காதலியைப் பற்றி உள்ள வரிகள் .

எத்தனை  எத்தனை   வேலைகள் இருப்பதாக 
எப்படி எப்படியெல்லாம்  பொய் சொல்லியிருக்கிறார்கள் !

ஆண்மையில் பெண்மை ,பெண்மையில் ஆண்மை இருப்பது உண்மை என்பதை உணர்த்தும் வைர வரிகள் .

உச்சத்தில் மீசை முளைத்துப் பார்த்தாய் நீ 
பெண்ணாகிப்  போயிர்ந்தேன் நான் ! 

காதல் எப்படி இருக்க வேண்டும் தீண்டல் எப்படி இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் விதமாக வடித்த வரிகள் நன்று .

தொடுகிற பாவனையில் தொடாமல் வருடு !
இருக்கப்படுவாய் !
நாகரிகம் என்பது காமற்ற தழுவல் !

வான்  மழையையும் இன்ப மழையையும் உணர்த்தும் விதமான உன்னத வரிகள் .இதோ !

இது வானத்தின் சுமையைக் கடலறிதல்  !

காதல் வருடலை , காதலர்களின்  கூடலை கவிதை வரிகளில் உணர்த்துகின்றார் .

அடி வயிற்றில் தலை சாய்த்தால் சுகம் !
தலை வருடல் வாய்த்தால் சுகமே சுகம் !

.பெண்களின் ஒய்வு தினங்களில் அவர்களுக்கு ஒய்வு  வேண்டும் என்ற மனிதாபிமானத்தை நன்கு உணர்த்திஉள்ளார்  .சொற்ச்சிக்கனத்துடன் உணர்த்திஉள்ளார்  .எல்லா ஆண்களுக்கும் புரியும் விதத்தில் உணர்த்திஉள்ளார்  .

அந்த மூன்று நாட்களில் நீ தாய் ! 

காதல் கவிதைகளில் முத்தம் பற்றி இல்லாமல் இருக்குமா ?இதோ முத்தம் பற்றி .

சொல்ல முடியாத பாராட்டுதல்கள் முத்தங்களாகின்றன !
கண்களை திறக்காதே ! முழுமையாகப்  பார்க்கலாம் திருடப்படுவதை !

நூலில் உள்ள பிடித்த கவிதைகளை மேற்கோள் காட்ட வேண்டும் என்பதற்காக மேல பக்கத்தை மடித்து வைத்து வந்தேன் .நூலின் எல்லாப் பக்கத்தையும் மடித்து விட்டேன் .பின் மறு பரிசீலனை செய்து மடித்ததை எடுத்து விட்டு மேற்கோளைக் குறைத்துக் கொண்டேன் .நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .


கருத்துகள்