சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

சுட்டும் விழி !
நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி !
மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213.

மதிப்பிற்குரிய  நண்பர் , கவிஞர் இரா.இரவி அவர்கள் ,"ஹைகூ " உலகில்  தனக்கென ஒரு இடம் பெற்றிருக்கிறார். இயற்கையை  ரசிப்பதும் , காதலை வருணிப்பதும் தான் ஒரு கவிஞனின் வாடிக்கை என்பதைக்  கடந்து , கவிஞனும் , சமுதாய விழிப்புணர்வை  ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் ,"சுட்டும் விழியைச் " சுழட்டிவிட்டிருக்கிறார்.

இவரது  சமுதாயப் பார்வை  நம்மைப்  பலவாறு சிந்திக்கவைக்கிறது.
எப்படி?
கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

சமுதாய  விழிப்புணர்வை  ஏற்படுத்தத்  தன்னால் முடியும் என்று முழங்கி , அதை அவரது "சுட்டும் விழியில்" நிரூபித்திருக்கிறார்."நல்ல  கூட்டம் பித்தலாட்டப்  பயிற்சி சோதிடம்."
மனிதனின் முன்னேற்றமும் , அவன் வாழ்வும் அவன் உழைப்பில்தான் இருக்கிறதே தவிர , சோதிடம் பார்ப்பதிலா?
பித்தலாட்டத்தை  நம்புகிறாயே மனிதா? சிந்தியப்பா  சிந்தி! என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஆசிரியர்.
"பலனில்லை 
பெயர் மாற்றம் 
எண்ணம்  மாற்று."
எனும் கவிதை பெயர் மாற்றத்திலோ, இட மாற்றத்திலோ உன் உயர்வு இல்லை: உன் எண்ணம் மாறி உயர்ந்தால் உன் வாழ்வு உயரும் என்ற கருத்தைச் சொல்லுகிறது.
இன்றுள்ள  நகர்ப்புற அசுத்தங்களைக் கண்டு மனம் வாடும் கவிஞர், "சுத்தம் தானே சோறு போடும்: அசுத்தம் நோய்க்கு நுழைவாயில் அல்லவா? மனிதா இதைக் கொஞ்சம் யோசி!" என்கிறார்:
"சுத்தமே சுகம் 
அசுத்தமோ நோய் 
குப்பையில் நகரம்."
பசுமையான வயல்களும் , கழனிகளும் நமக்கு உணவளிக்கும்  அன்ன லட்சுமித் தெய்வங்கள்.அப்படிப்பட்டவைகள்  இன்று  அழிக்கப்பட்டு  அவ்விடங்களில் மாளிகைகளும்,தொழிற்சாலைகளும் பெருகிவருவது  அநியாயம் என்று பதறுகிறார்.
ஆசிரியரின் பதற்ற வரிகள்தான், " பன்னாட்டு நிறுவனங்களால் ,கொள்ளை போனது , பச்சை வயல்.என்பவை ஆகும்.
மேற்சொன்ன  ஆசிரியரின் கவிதை வரிகளில் இருந்து, அவரது' சமுதாய அக்கறை ' தெரிகிறது. ஒரு கவிஞன் என்பவன்  கற்பனயில் மிதப்பவன் மட்டுமல்ல ; அவன்  தான்  வாழும் சமுதாயத்தின் 'மாசுகளைக் , குறைகளை'
மக்களுக்குச் சுட்டிக் காண்பித்து , அவற்றைக் களைய ' கவிதை உருவில் ' கோடரியையும் கொடுக்க வல்லவன் என்பதை நம் கவிஞர் நிரூபிக்கிறார்.
எந்த ஒரு படைப்பாளிக்கும்  சமுதாயப்  பற்று வேண்டும் .கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு, சமுதாயத்தின் மீது அளவுகடந்த பற்றும் , பாசமும் இருக்கிறது என்பதற்கு இந்த நூலில் பல கவிதைகளை எடுத்து வைக்கலாம்.
தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட நம் கவிஞர், தன்  காதலியின் பெயர் தமிழில் இருப்பதைப் பெருமையாகக் கூறுகிறார்:
"இனிது இனிது 
 தமிழில் இனிது 
 அவள்  பெயர்"
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து ' பாடுகிறார் :
"யுகங்கள் கடந்தும் 
இளமை  குன்றவில்லை 
தமிழ்."
இன்று  இளைஞர்களும் , இளம்பெண்களும்  அவசர அவசரமாகக்  காதல் என்ற பெயரில் ,கட்டுண்டு , காதல் திருமணம் செய்வது தடுக்கப்படவேண்டிய ஒன்று என்பதைச் சுட்டிக்கன்பிக்கும் கவிஞர்...
"பக்குவப்படாத காதல் 
அவசரத் திருமணம் 
விரைவில் மணவிலக்கு."
என்று  இன்றைய  'விவாகரத்து ' விடயங்களைச் சுட்டிக்காண்பிக்கிறார்.
இவ்விடத்தில் எனது கவிதை ஒன்றை நினைவு கூறுகிறேன் .
"இளமைக்  காதல் சிறுகதை:
 வயசுக் காதல் தொடர்கதை : 
 முதுமைக் காதல் கவிதை!"
பருவத்தே பயிர் செய்' என்பது போலவே பருவம் வந்து , மனம் பக்குவப்பட்டபின்னரே  திருமணம் செய்துகொள்ளவேண்டும்!

இப்படியாகக் கவிஞர் தனது " ஹை  கூ " நடையில்  மூன்று  வரிகளில், முப்பது வரிக் கட்டுரைச் செய்திகளை அடக்கி உள்ளார்.
சிந்தனைக்குப் பல கவிதைகள் உள்ளன....எடுத்துக்காட்டாக ஒன்று:
"சோகத்தில் உளி 
 பாராட்டு வாங்கினர் 
 சிலையோடு சிற்பி."
முத்தாய்ப் பாய் இவரது கவிதை பற்றி எனது சிறப்பு விளக்கம்:
" கிடைக்கவில்லை 
 எங்கு  தேடியும் 
 போதி மரம்"
என்ற கவிதைப் படித்தபோது , நான்  மதுரை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை முடித்து , விமானத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். கவிதைப் படித்ததும் , கவி நண்பர் இரா.இரவி அவர்களை கைபேசியில் அழைத்து, " இப்போது போதி மரம் என் கையில் !" என்று கூறினேன்.
வாசகருக்கும் , ஆசிரியருக்கும்  இதன் முழு அர்த்தமும் புரியும் என நினைக்கிறேன் .......அந்த அளவிற்கு , "சுட்டும் விழி " எனக்குள் "ஞானம் "  புகுத்தியது  என்பதுதான் உண்மை!
ஹைகூ  கவிஞரை  வாழ்த்துகிறேன்.

மேலும் பல அரிய  கருத்துக்கள் கொண்ட நூல்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
.

-- 

கருத்துகள்