காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !


காதல் கவிதைகள் !   கவிஞர் இரா .இரவி !

பார்த்துப் போமா !  கவிஞர் இரா .இரவி !
உன்னை வழியனுப்பும் 
உன் அம்மா பார்த்துப் போமா !
என்கிறார்கள் !
சாலையில் கடந்தும் செல்லும் நீ 
என்னை பார்த்துவிட்டுத்தான் 
செல்கிறாய் !

பார்த்து விட்டனர் ! கவிஞர் இரா .இரவி !
யாரும் பார்க்காதபோது 
இருவரும் பார்த்துக் கொள்கிறோம் !
நாம் பார்த்துக் கொள்வதை 
எல்லோரும் பார்த்து விட்டனர் !

அழகோ அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ பேசுவது அழகுதான் 
நான் பேசாமலே 
அதனை ரசிப்பது வழக்கம் !
ஆனாலும் 
நீ பேசாமல் 
இருக்கும்போதோ 
அழகோ அழகு !
கொள்ளை அழகு !
.
அழித்த கோட்டை ! கவிஞர் இரா .இரவி !
உச்சி எடுத்து சீவ வேண்டாம் என்று 
அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய் !
இன்று வரை உச்சி எடுப்பதில்லை !
கிழித்த கோட்டை தாண்டுவதில்லை 
என்பதை போல 
நீ அழித்த கோட்டை 
நான் போடுவதே இல்லை !

தொட்டு விட்டது !     கவிஞர் இரா .இரவி !
நெற்றியில் நீ வைத்த 
முத்தம் !
முத்தமே அல்ல !
என்னுள் யுத்தம் செய்தது !
ஊடுருவி உயிர் வரை சென்று 
தொட்டு விட்டது !

சத்து !     கவிஞர் இரா .இரவி !
இதழ்களில் நடந்த முத்தம் 
நதி கடலில் கலந்த 
நல்ல சங்கமமாய் !
கடலில் கிடைப்பது முத்து !
முத்தத்தில் கிடைப்பது சத்து !

எனக்கு வலிக்கும் !   கவிஞர் இரா .இரவி !
உன் புகைப்படத்தை 
அஞ்சலில் அனுப்ப வேண்டாம் !
மின் அஞ்சலில் அனுப்பு போதும் !
 அஞ்சலில் அனுப்பினால் 
அஞ்சல்காரர் உரை மீது 
பதிக்கும் முத்திரைகள் 
உனக்கு வலிக்காவிட்டாலும் 
எனக்கு வலிக்கும் !

அது எப்படி ? கவிஞர் இரா .இரவி !
ரோஜா அழகுதான் !
உலகம் அறிந்த உண்மைதான் !
நீ தலையில் சூடியதும் 
ரோஜாவின் அழகு 
குறைந்து விடுகிறது !
உன் அழகோ 
கூடி விடுகிறது !
அது எப்படி ?

என் சுவாசமே நீதானே !    கவிஞர் இரா .இரவி !
மல்லிகை வாசம்தான் !
ஆனால் 
உன் வாசத்தின் முன்னே 
மல்லிகை வாசம் 
தோற்று விடுகின்றது !
உன் வாசத்திற்கு இணையான 
வாசம் உலகில் இல்லை 
என் சுவாசம் சொல்லியது !
என் சுவாசமே நீதானே !

எல்லாமே அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ நின்றால் அழகு !
நீ நடந்தால் பேரழகு !
நீ பார்த்தால் அழகு !
நீ முறைத்தால் பேரழகு !
நீ சிரித்தால் அழகு !
நீ சிகை கோதினால் பேரழகு !
எல்லாமே அழகு ! 

அழகு கூடி விடும் !  கவிஞர் இரா .இரவி !
ஆடைகளில் சுடிதார் 
அழகுதான் !
அனைவரும் அறிந்ததுதான் !
ஆனாலும் 
அவள் அணிந்ததும் சுடிதார் 
அழகு கூடி விடும் 
அற்புதம் நிகழ்த்துவது 
அவளின் அழகு !

காண வந்தேன் ! கவிஞர் இரா .இரவி !
கடவுள் நம்பிக்கை 
எனக்கு 
இல்லாவிட்டாலும் 
திருவிழாவிற்கு வந்தேன் 
கடவுளை வணங்க அல்ல !
கன்னி உன்னைக்  காண 
வந்தேன் ! 
கடவுளுக்காக வந்தவர்கள் 
கடவுளை தரிசிக்க 
உனக்காக வந்த நான் 
உன்னை தரிசித்தேன் !

.நினைத்தாலே இனிக்கும் !  கவிஞர் இரா .இரவி !
சுவைத்தால்தான்  இனிக்கும் 
செய்த இனிப்பு 
நினைத்துப் பார்த்தாலே 
இனிக்கும் 
இனிய  காதல் !

பாட்டு !     கவிஞர் இரா .இரவி !
என் செல்லிடப் பேசியில் 
எந்தப் பாட்டையும் 
வைக்கவில்லை நான் !
ஏன் தெரியுமா ?
பாட்டுப் பிடித்த ஆர்வத்தில் நீ 
பேசாமல் இருந்து விடக் 
கூடாது !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்