இனியவை நாற்பது ! ( அறுசுவை கட்டுரைகள் ) நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இனியவை நாற்பது !

( அறுசுவை கட்டுரைகள் )

நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வானதி பதிப்பகம். 23. தீனதயாளு தெரு .தி. நகர் ,சென்னை .17.   விலை ரூபாய் 100


நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ  பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் ஆஷ்திரேலிய  நாட்டின்   தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் சாபில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிட உள்ள இந்த நூலை ,அன்பு கெழுமிய  நண்பர்  கவிஞர் இரா .இரவி அவர்களுக்கு ,போற்றுதலுடன் "என்று எழுதி கையொப்பம் இட்டு,  நூல் வெளியிடும் முன்பாக முதல் படி உங்களுக்கு என்று சொல்லி  என்னிடம் தந்து என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் .அய்யாவின் இல் வாழ்க்கைக்கு மட்டுமன்றி இலக்கிய  வாழ்க்கைக்கும் துணையாக இருக்கும் அம்மா முனைவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களும் ஆஷ்திரேலியா  பயணமானார்கள்.
இந்த நூலில் துணை நிற்கும் அம்மாவிற்கு நன்றியும் பதிவு செய்துள்ளார்கள் .
 

நூலைப் பெற்றவுடன் படித்துப் பார்த்தேன் .ஆறு சுவைக் கட்டுரைகள் .சிந்தனை ஆறாகப் பாய்ந்தது. இனியவை நாற்பது ,இன்னா நாற்பது தமிழ் இலக்கியத்தில் உண்டு .அதில் இனியவை நாற்பது என்ற
உடன்
பாட்டுச் சிந்தனையை தலைப்பாக வைத்தது மிக நன்று .நாற்பது கட்டுரைகள் உள்ளது. தன்னம்பிக்கை விதை விதைக்கும் நல்ல நூல் .தன் முன்னேற்றம் பயிற்றுவிக்கும் அற்புத நூல் .இன்றைய இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நூல் .நூல் ஆசிரியரின் தோரணவாயிலுடன் நூல் தொடங்கியது .நூலில் யாருடைய அணிந்துரையும்  இல்லை .யோசித்துப் பார்த்தேன் .அய்யா அவர்களுக்கு முன்பு அணிந்துரை வழங்கிய அறிஞர்கள் அளவிற்கு வளர்ந்து விட்ட தன்னம்பிக்கையே காரணம் என்று கருதுகின்றேன் .

முதல் கட்டுரை படித்தேன் "நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை சிறக்கும் " மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. தொடர்ந்து படித்து முடித்து விட்டே நூலை வைத்தேன் .ஒரு கட்டுரை எப்படி ? எழுத வேண்டும் என்பதை பயிற்று விக்கும் விதமாக கட்டுரைகள் உள்ளது .பாராட்டுக்கள் .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதைப் போல வரவேற்பு தோரணவாயிலாக அறிஞர்களின் மேற்கோள்கள் பொன்மொழிகள் சிறப்பு .நல்ல யுத்தி .

" இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே !என்னால் இயலாது ! என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில நீ வரம்பில்லா வலிமை பெற்றவன் ; எதையும் எல்லா வற்றையும் சாதிக்க
கூடியவன் ." விவேகானந்தர் .

கட்டுரைகளின் உள்ளேயும் விவேகானந்தர் பொன் மொழிகள் உள்ளது .குட்டிக் கதைகள் ,ஈசாப் கதைகள்,நீதி நெறி போதிக்கும் கதைகள் நூலில் நிறைந்து உள்ளது .தினமணி சிறுவர்மணியில் எழுதிய கட்டுரை, தினமணி சிறுவர்மணியில் படித்த கட்டுரை என யாவும் உள்ளது .தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு  முற்றிலும் பொருத்தமானவர் .நூல் ஆசிரியர் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .இந்த நூலைப் படித்து முடித்தவுடன் என் நெஞ்சில் தோன்றிய கருத்து " என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் ? கையை எந்த வேண்டும் பிற மொழியில் "
நமது சங்கஇலக்கியத்தில் உள்ள தன்னம்பிக்கை கருத்துக்களை தேடிப் பிடித்து எளிமைப் படுத்தி பதிவு செய்துள்ளார் .

இந்த நூலின் முதல் கட்டுரையே நூலின் நோக்கத்தை விளக்குகின்றது .

"பயில்வோரது  நெஞ்ச வயல்களில் நம்பிக்கை விதைகளை ஆழமாக ஊன்றுவதிலே தமிழ் இலக்கியத்திற்கு நிகர் தமிழ் இலக்கியமே ஆகும் .சங்கச் சான்றோர் தொடங்கி இருபதாம் நூற்றாண்டுக் கவிதை உலகின் தலைமகன் - தவமகன்- பாரதி வரை நீண்ட நெடிய தமிழ் இலக்கியப் பரப்பில் தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப் படுவன நம்பிக்கை மொழிகளே "

கட்டுரையின் தலைப்புகளும் அருமை .நூலின் பெயர் சூட்டுவதிலும், கட்டுரையின் தலைப்பு சூட்டுவதிலும்,  பட்டிமன்றத்தின் தலைப்பு சூட்டுவதிலும் தமிழ்த்தேனீ  பேராசிரியர் இரா .மோகன் அவர்களுக்கு நிகர் பேராசிரியர்  இரா .மோகன்தான் . பட்டிமன்றத்தின் தலைப்பு இவர் சூட்டியதும், மற்றவர்கள் அந்த தலைப்பை எடுத்துக் கொள்வது வாடிக்கை .

திரு .எஸ் .ஏ .பெருமாள் தமிழில் எழுதிய நாடோடிக் கதை மிக நன்று .நம்பிக்கையின் முக்கியத்துவம் உணர்த்துகின்றது .வள்ளலார் மாணவராக இருந்தபோது வேண்டாம் வேண்டாம் என்ற எதிர்மறை சிந்தனை வேண்டாம் .வேண்டும் வேண்டும் என்று கவிதை பாடி ஆசிரியரை வியப்பில் ஆழ்த்திய வரலாறு நூலில் உள்ளது .

விரல் வெட்டு ப்பட்ட  ராஜாவிடம் மந்திரி " எல்லாம் நன்மைக்கே "என்ற போது எரிச்சல் அடைகிறார் மன்னர் .அவர் வேட்டைக்கு சென்றபோது காட்டில் ஆதிவாசிகள் மன்னர் என்று தெரியாமல் பலி கொடுக்கு முற்படும்போது கையில் உள்ள காயத்தைப் பார்த்து விட்டு காயம் உள்ளவர்களை
பலி கொடுக்கக் கூடாது என்று விடுவித்து விடுகின்றனர் .மன்னர் உயிர் பிழைத்த போது  மந்திரி " எல்லாம் நன்மைக்கே" என்று சொன்னதை நினைத்து மகிழ்ந்தார் .இதுபோன்ற நெறிகள் போதிக்கும் பல குட்டிக் கதைகள் நூலில் உள்ளது. இலக்கிய காட்சிகளை கண் முன்னே காட்சிப் படுத்தும் விதமாக கட்டுரைகள்  உள்ளது .

காவல் துறையில்உயர் பதவியில் பணி  புரிந்துகொண்டே தன் முன்னேற்ற  நூல்களும் எழுதி வரும்
திரு .சைலேந்திர பாபு அவர்களின் வைர வரிகள் நூலில் உள்ளது ."தோல்வியை மனதில் சுமக்காதே !வெற்றியை தலையில்
சுமக்காதே ! இந்த வைர வரிகளை ஒவ்வொரு மனிதனும் கடைபிடித்தால் செம்மையாக வாழலாம் . இந்த நூல் கல்லாக  இருந்த வாசகனை சிற்பமாக செதுக்கி விடுகின்றது .நூலை வாங்கி படித்துப் பாருங்கள் எழுதியது உண்மை .என்பதை உணருவீர்கள் .நூல் ஆசிரியர் பேராசிரியர்
இரா .மோகன் அவர்கள் எழுதி வரும் ஒவ்வொரு நூலும் சிறப்பாக உள்ளது .அவரது
முந்தைய  நூலை மிஞ்சும் விதமாக அவரது நூலை வந்து விடுகின்றது .

நூலின் அட்டைப்படம் மிக நன்று . நூலை மிகத் தரமாக அச்சிட்ட வானதி பதிப்பகத்தாருக்கும் ,நூலை வெளியிட உள்ள ஆஷ்திரேலிய  நாட்டின்   தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

கருத்துகள்