இரை தேடும் பறவைநூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்

இரை தேடும் பறவை

நூல் ஆசிரியர் கவிஞர் கருவை  சு .சண்முக சுந்தரம்

இதய மொழி பதிப்பகம் விலை 50

நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் கருவை  சு .சண்முக சுந்தரம் வரலாற்று சிறப்பு மிக்க மதுரை தியாகராசர் கல்லூரியின் முனைவர் பட்ட  ஆய்வாளர் .  நூலின் அட்டைப்படம்  இரை தேடும் பறவை என்ற தலைப்பிற்குப் பொருத்தமாக உள்ளது .இந்நூல் தமிழீழ விடுதலைக்காகதங்கள் தன்னுயிர் ஈந்த மக்களுக்கும், மாவீரர்களுக்கும் ...என்று எழுதி தன் தமிழ் இன உணர்வை பறை சாற்றியுள்ளார் .

கவியரசு நா .காமராசன் ,கலைமாமணி ஞானசம்பந்தன் ,திரு .மோகன பாரதி ஆகியோரின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .

மதுக்கடைகளில்   விற்பனையாகும் மதுக்களின் புள்ளிவிபரங்களைப் படிக்கும்  போது .இந்த சமுதாயம் இப்படி குடித்து வீணாகின்றதே என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது ..அதனை உணர்த்து ஹைக்கூ .

எமனை வரவேற்க
அரசு ஏற்பாடு
மதுக்கடைகள் திறப்பு 

இன்றைய இளைய சமுதாயம் தனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படம் வருகிறது என்றால் கட் அவுட்  வைக்க ,அதற்கு பாலபிசேகம் செய்ய, தோரணம் கட்ட ,பல மடங்கு உயர்வான கட்டணத்தில் திரைப்படம் முதல்நாள் முதல்  காட்சி    பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் .

புதுப்பட வரவு
வகுப்பறையில் குறைந்தது
மாணவர்கள் வரவு

  மகாகவி பாரதியார் போல பறவை நேசத்துடன் ஹைக்கூ  வடித்துள்ளார் .

விடுமுறை நாட்களில்
பள்ளிக்கு வந்து ஏமாறும்
மதிய உணவுக்கு காகம்

சிறிய விசயத்தைக் கூட  கவிஞன் கற்பனையில் மிகப் பெரிதாகப் பார்ப்பான் .என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .

வெளிச்சம் தரா
மூன்றாம் பிறை
வெட்டிப் போட்ட நகம்

இஸ்லாமியப் பெண்கள் பலருக்கும் இன்றும் மத நம்பிக்கை காரணமாக பர்தா அணிவிக்கும் பழக்கம் நூல் ஆசிரியர் கண்ணில் பட்டு அதையும் ஒரு ஹைக்கூ ஆக்கி உள்ளார் .

நிலவை மறைத்த வண்ணம்
இருக்கிறது மேகம்
பர்தா

மகன் நாத்திகனாக இருந்தபோதும் அம்மா பாசத்துடன் பக்தியுடன் விபூதி பூச வந்தால் வேண்டாம் என்று மறுப்பதில்லை .எனக்கும் இந்த அனுபவம் உண்டு .இந்த நிகழ்வையும் ஹைக்கூ வாக காட்சிப் படுத்தி உள்ளார் .

விருப்பமில்லை என்றாலும்
வெறுக்கவில்லை
 அம்மா பூசி விடும் விபூதி

ஆயுத பூசை என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுனர்கள் ,வட்டிக்கு கடன் வாங்கி தெருவில் அமர்களப் படுத்துவதை பார்த்து இருக்கிறோம் .இதனை உற்று நோக்கிய  நூல் ஆசிரியர் கவிஞர் கருவை  சு .சண்முக சுந்தரம் ஹைக்கூ வடித்துள்ளார் .

ஆயுத பூசை
ஆயுள் முடிந்தது
வாழைக் கன்றுகள்

ஆய்வு மாணவர் என்பதால் சமுதாய நிகழ்வுகளை ஆய்ந்து ஹைக்கூ வாக்கி உள்ளார் .   
சராசரி மனிதன் பார்வைக்கும் ஒரு படைப்பாளியின் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உண்டு .எறும்புகள் செல்வதைக் கூ ட  ஹைக்கூ வாக வடித்துள்ளார் .

யாருக்குத் திருமணம்
சீர் வரிசையோடு போகின்றன
எறும்புகள்

முரண் சுவையுடம் ஏழ்மையை உணர்த்தும் ஹைக்கூ இதோ !

அடுப்பு எரிந்தால்தான்
அணையும்
குடும்பத்தில் பசி

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களைப்  போல இயற்கையும் பாடி உள்ளார் .

ஞாயிறு  போனதும்
திங்கள் வரவில்லை
அமாவாசை

பல்வேறு பொருள்களில் ஹைக்கூ எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறிய வேண்டுகோள் அடுத்த பதிப்பில் சில ஹைக்கூ கவிதைகள் நான்கு வரிகள் உள்ளது .அவற்றை ஹைக்கூ இலக்கணப் படி மூன்று வரிகளாக்கி விடுங்கள் .  

கருத்துகள்