ச.சந்திரா. திருவில்லிப்புத்தூர்.

07.10.2011- வெள்ளிக்கிழமை அன்று ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய காலைமலர் நிகழ்வில் முனைவர் இரா.மோகன் அவர்களின் பேட்டி தொடக்கம் முதல் முடிவு வரை உயிரோட்டத்துடன் இருந்தது.இலக்கியத்தை நன்கு கற்றோரும், கல்லாதோரும்  கூட உணரும் வகையில் நேர்காணலானது எளிமையும் இனிமையும் பொருந்தியதாக அமைந்திருந்தது.சங்க இலக்கியம் முதல் ஒப்பிலக்கியம் வரை,ஆசிரியப்பணி அநுபவம் முதல் ஆட்டோ வாசகம் வரை,திருக்குறள் முதல் புதுக்குறள் வரை,விதியின் ஒட்டம் முதல் மதியின் ஓட்டம் வரை,-என இருவேறு பேரெல்லைகளைத் தொட்ட தகைசால் பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் உரையாடல் தெளிந்த நதியின் நீரோட்டம் போல் நடைபயின்றது எனலாம்.பேச்சுக்கலை,எழுத்துக்கலை,ஆய்வுக்கலை -என முப்பெருங்கலைகளிலும் வல்லவரான இலக்கிய வித்தகரைப் பற்றி அறிந்த பொழுது ஒரே நேரத்தில் அவரது இலக்கிய வானத்தில் பகலவனும் பால்மதியும் விண்மீனும் ஒளிர்வதைக் காணமுடிந்தது.இத்தகைய பெருந்தகையோரைத் தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் இலக்கியம் சார்ந்த தொடர் நிகழ்வுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது என்போன்ற மொழி ஆர்வம் மிக்க நேயர்களின் மனமார்ந்த விருப்பம்!
                             ச.சந்திரா.
                        திருவில்லிப்புத்தூர்.   

கருத்துகள்