முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி

முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன்
கவிஞர் இரா .இரவி

இன்றைக்கு மாமனிதர் அப்துல் கலாமிற்கு அடுத்தபடியாக இளைஞர்களால் அதிகம் நேசிக்கப்படுபவர். திரு.வெ.இறையன்பு இஆப அவர்கள். இவர் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை செயலராக இருந்தார்கள்  . மிக நேர்மையான அதிகாரி. இவர் மிகச்சிறந்த நிர்வாகி என்பதற்கு பல்வேறு செயல்பாடுகளை உதாரணமாகக் கூறலாம். அகில இந்திய அளவில், தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு பல்வேறு விருதுகளை பெற்றுக் தந்துள்ளார். அகில இந்திய அளவில், தமிழக சுற்றுலாத்தலங்கள் கவனம் பெற்றது. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை எனப் பல சுற்றுலாத்தலங்கள் புது
ப்பிக்கப்பட்டன.ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுர வாசல்களில் நலிந்து போன கிராமியக் கலைகளை உயிர்ப்பிக்கும் வண்ணம்,  தெருவோரத் திருவிழா  ஒரு வருடமாக தொடர்ந்து நடைபெற்று, மதுரை மக்கள் மற்றும் சுற்றுலாத் பயணிகளின் பாராட்டுக்களைப் பெற்றது. இணையத்தளங்களிலும் இடம் பெற்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு விடுதிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. விடுதிகளில் தொடர்ந்து தங்குபவர்களுக்கு கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டது. சென்னையில் நவீன சொகுசு, பேருந்துகள் சுற்றுலாத்தலங்களுக்கு இயக்கப்பட்டது. நட்பு ஆட்டோ என்ற திட்டத்தின் கீழ், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று உரையாற்றி, ஆட்டோ ஓட்டுநர்களை நெறிப்படுத்தி, முறைப்படுத்தி, வெற்றிகரமாக செயல் பெற்று வருகின்றது. மருத்துவ சுற்றுலா, கிராமிய சுற்றுலா, சமண மதத் தலங்கள் சுற்றுலா என சுற்றுலா பல்வேறு கோணங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இப்படி திரு.வெ.இறையன்பு அவர்களின் ஒய்வறியா செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். கலைப்பண்பாட்டுத் துறையிலும், கிராமியக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, பல்வேறு சலுகைகள் வழங்கி பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். கண்ணைக் கவரும் விதத்தில், அழகிய வண்ணங்களில் சுற்றுலா கையேடுகள் குறுத்தகடுகள் வெளியிட்டு சாதித்துள்ளர். தமிழில் சுற்றுலா இணையத்தளம் தொடங்கினார். பூமாலை, சமத்துவபுரம், உழவர் சந்தை, என பல்வேறு திட்டங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படகில் பயணம் செய்த போது, கடலில் விழுந்து உயிர் பிழைத்தவர். வெளிநாடு சென்ற போது, கார் விபத்து ஏற்பட்டு அதில் இருந்து உயிர் பிழைத்தவர். அவர் வாழ்வில் எத்தனை சோதனைகள் வந்த போதும் மனம் தளராமல் உழைத்துக் கொண்டே இருக்கும் மிகச் சிறந்த உழைப்பாளி. சுறுசுறுப்பிற்கு இலக்கணமாக வாழ்பவர். இவரது காலம் சுற்றுலாத் துறைக்கு பொற்காலம் என்று சொல்லுமளவிற்கு சாதனைகள் பல நிகழ்த்தியவர்.

இவர் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர் எழுதியுள்ள நூல்கள் நியு   செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் அவரது நூல்களை நியாயமான விலையில், சிறந்த தரத்துடன் வெளியிட்டுள்ளனர். விற்பனையில் சாதனை படைத்து வருகின்றது. தேசிய அளவில் பல்வேறு விருதுகள் தமிழக சுற்றுலாத் துறைக்கு கிடைத்தவுடன் தமிழக சுற்றுலாத் துறையில் உள்ள அலுவலர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள, காவலர்கள் வரை அனைவருக்கும்  இந்த விருது பெற உழைத்த உங்களுக்கு நன்றி  என சான்றிதழ் போல அழகாக வடிவமைத்து ஒவ்வொன்றிலும் தன் கைப்பட கையெழுத்து இட்டு அனுப்பி வைத்தார். அதனை சுற்றுலாத் துறை பணியாளர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் மாட்டி வைத்துள்ளனர். அவருடைய ஒவ்வொரு செயலும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நிர்வாகத்தைப் பொருத்த வரையில்  பேச்சைக் குறைப்பீர்  உழைப்பைப் பெருக்குவீர்  என்பதை தாரக மந்திரமாகக் கொண்டவர்.
பேச்சிற்கும், செயலிற்கும் வேற்றுமை இல்லாத சிறந்த பண்பாளர். ஆங்கிலம், தமிழ் இரண்டு இலக்கியமும் அறிந்தவர். இவர் பேசாத தொலைக்காட்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து உரை நிகழ்த்தி  இருக்கிறார்கள். பொதிகை தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக இருந்து பட்டிமன்றங்களில் முத்திரை பதித்து வருகிறார்.  Z தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலையில் பேசினார்கள்  . இவரது பயனுள்ள உரைகளின் ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் விற்பனைக்கு உள்ளது. இவருடைய நகைச்சுவைகள், மற்றவரை காயப்படுத்தாத பண்பான நகைச்சுவையாக இருக்கும்.
அய்.எ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் பலருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி, நெறிப்படுத்தி சேவையாக செய்து வருகின்றார். மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்த போது ,நடவடிக்கைகளை அழகு தமிழிலேயே நடத்தி, தமிழ் வளர்ச்சித் துறையின் விருதினை ப் பெற்று உள்ளார். அவருடன் உரையாடும் சில நிமிடங்களில் பல்வேறு பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். குறித்த நேரத்திற்கு செல்வது. கையெழுத்து அச்சுப் போல மிகவும் நேர்த்தியாக இருக்கும். அளவாக, தேவையான சொற்களை மட்டும் பயன்படுத்தி, இனிமையாக பேசுதல். மற்றவரை மதித்தல்,செருக்கு இல்லாது இருத்தல் இப்படி பல்வேறு நல்ல விஷயங்களை நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
இன்றைய இளைஞர்கள் பலரும், திரு.வெ.இறையன்பு இஆப என்ற பன்முக ஆற்றலாளரை மிகவும் நேசிக்கின்றனர். மதிக்கின்றனர். அவரை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு அய்.எ.எஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பெருமளவில் உருவாகி. வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். எனவே அவரது நூல்களைப் படிப்போம். உரைகளைக் கேட்போம். நிர்வாகக் திறனைப் பாராட்டுவோம். உள்வாங்கிக் கொண்டு நாமும் உயர்வோம்.நம்மைச் சார்ந்தவர்களையும் உயர்த்துவோம். இளம் வயதில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி,மிக உயர்ந்த பதவிகளை வகித்த போதும், துளி கூட கர்வம் இல்லாத இனிமையான மனிதர். . இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் வெறும் புகழ்ச்சி அல்ல, முழுமையான உண்மை.

கருத்துகள்

கருத்துரையிடுக