திருக்குறள் அமைப்பும் அழகும்
நூல் ஆசிரியர் : திரு. ச.தண்டபாணி தேசகர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
உலகில் தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. ச.தண்டபாணி தேசகர் திருக்குறளில் ஆழ்ந்து, தோய்ந்து மிக அற்புதமாக எழுதி உள்ளார்கள். இந்நூலை படித்து பின்பு வாசகர் உள்ளத்தில் உச்சத்தை அடைந்து விடுகின்றது திருக்குறள்.
திருக்குறள் மக்களின் வாழ்க்கை இயல்புகளை மட்டும் அறிவிக்கிறது. அதனால் இலக்கியமாயிற்று. ஒரு குறிக்கோள் வாழ்வின் இலக்கணங்களை அறிவிப்பதால் இதனை இலக்கிய இலக்கணம் என்று கூடக் கூறி விடலாம். இதனைக் கொண்டு உலக மக்கள் தமது வாழ்க்கையைத் திருத்தி கொள்வர் என்பதே திருவள்ளுவரின் ஆசையாகும்.
திருவள்ளுவரின் திருக்குறளில் அரசனின் ஆண்மை புலப்படுகிறது. அமைச்சர் அறிவலை பாய்கிறது ஒற்றருடைய அரசியல் தந்திரம் ஆழங்காணற்படுகிறது. தூதருடைய சொல்வண்மை தோன்றுகிறது. எழில் நிறைந்த இளமங்கையோடு நுகரும் இன்பத்தேன் எங்கும் களியூட்டுகிறது. அறவோராகவும், துறவோராகவும் இருந்து செய்யும் அறவுரைகள் ஒளிவிடுகின்றன. செம்பொருள் திகழ்கிறது. இதிலிருந்து இவர் எத்தகையை வாழ்க்கையினர் என்று துணியக் கூடும்? முடியாது, இதனாலேயே இந்நூல் எல்லார் வாழ்வோடும் கூடி எல்லார்க்கும் இன்பம் பயப்பதாக, பொது நூலாக அழியாப் பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றுகின்றார் நூல் ஆசிரியர்.
பெயர்க்காரணம் :
திருக்குறள் என்பது அழகிய குறள் வெண்பாவினால் ஆகிய நூல் எனப் பொருள்படும். குறள் என்னும் பாவின் பெயர் அதனால் ஆகிய நூலிற்று ஆனது கருவி ஆகுபெயர் அது, திரு என்னும் அடைமொழி அடுத்து வந்தமையின், அடை அடுத்த கருவி ஆகு பெயராயிற்று என்பது இலக்கண உரையாசிரியர் கருத்து.
அழகிய குறள் வெண்பாக்களை உடைய நூல் எனப் பொருள்பட்டு அன்மொழித் தொகையாய், நூலுக்குக் காரணக் குறி ஆயிற்று” என்பர், தமிழ் வரலாறு எழுதிய ச.பூபாலப்பிள்ளை அவர்கள்.
‘திரு என்பது கண்டாரல் விரும்பப்படும் தன்மை நோக்கம்” என்று திருக்கோவையார் உரையில் பேராசிரியர் கூறுகிறார். இப்படி பெயர் விளக்கமே சான்றோர்களின் மேற்கோள்களுடன் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்.
திருக்குறளின் மறுபெயர்களை முப்பால், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, முதுமொழி, உத்தரவேதம், தெய்வ நூல், தமிழ் மறை, பொதுமறை இப்படி விளக்கி வருகிறார் மறுபெயர்களுக்கான காரணங்களை.
வேதத்திற்கும், திருக்குறளிற்கும் பொருள் ஒன்றே, அதனால் அது அந்தணர்க்கே உரியது. இது அனைவர்க்கும் உரியது என்கிறார் வெள்ளி வீதியார்.
படிக்க எளிமையாய், உணர அருமையாகி நினைக்கும் தோறும் நெஞ்சத்தை இல்லை. சொல் பெருகிய பாக்களால் என்ன பயன்? என்கிறார் மதுரைத் தமிழ் நாகனார்.
மணற்கேணி தோண்ட நீர் சுரக்கும். குழந்தைகள் வாய் வைத்துக் குடிக்கத் தாய்ப்பால் சுரக்கும். திருக்குறள் புலவர்கள் ஆராய அறிவு சுரக்கும் என்கிறார் உருத்திர சண்மகண்ணர்.
உலகத்தில் திருவள்ளுவரே புலவரன்றி வேறு சிலரையும் புலவர் என்றால் நிலவோடு கூடிய அழகான அந்திப் பொழுதையேயன்றி, இருள் சூழ்ந்த அந்தியையும் மாலை என்றது போலும் என்று எடை போடுகிறார், தமிழாசிரியர் செங்குன்றூர்க்கிழார்.
மனத் தாமரையை மலர் நூதலாலும், இருளைப் போக்குதலாலும், திருக்குறளும் செஞ்சூரியனும் ஒக்கும் என்கிறார் குளம்பாதாயனார்.
திருக்குறள் சிந்தைக்கும், செவிக்கும், வாய்க்கும் இனிய மருந்து என்கிறார் கவுணியானார்.
திருக்குறள் தேவாமுதத்தை விடத் சிறந்தது. அதனை உண்பார் தேவர்களே, இதனை அனைவரும் உண்பார்கள் என்கிறார் ஆலங்குடி வங்கனார்.
மலைகளிற் சிறந்த மேரு மலை போல, எல்லா நூல்களிலும் சிறந்தது, இத் தெய்வத் திருக்குறளே என்பர் தெய்வநாயகம் பிள்ளை அவர்கள்.
இப்படி மாபெரும் தமிழ் அறிஞர்கள், முன்னோர்கள் திருக்குறள் பற்றித் தந்த அருமையான விளக்கங்களை மிக அற்புதமாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர்.
‘மனு நூலிலும், மற்ற சாத்திரங்களிலும் கூறும் மூடப் பழக்கங்களை நீக்கிக் குறள் மேம்பாட்டுடன் விளங்குகின்றது” என்கிறார் ரெவரெண்ட்.
நூல் அமைப்பு :-
இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும், சிறு பிரிவு இயல் எனவும் அதனிற் சிறு பிரிவு அதிகாரம் எனவும் அமைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் பால் என்பது பகுதி, பண்பு முதலிய பல பொருளில் வழங்கும் பெயர்ச் சொல். இயல் என்பது இலக்கணம். தன்மை என்னும் பொருளது. பாலின் உட்பகுதியாகிய இல்லறம் முதலாயவற்றின் இலக்கணம் உணர்த்துதலின் இயல் என்றாயிற்று. இதனாலும் இது நால்வகை உறுதிப பொருள்களின் வழிவகைகளைக் கூறாது, அவற்றின் இலக்கணம் ஒன்றுமே உணர்த்துவதாதல் காண்க.
இப்படி நூலின் அமைப்பு பற்றி ஆராய்ந்து விளக்கி உள்ளார் நூல் ஆசிரியர்.
ஒழுக்கம் தான் ஒருவனுக்கு உயிர். அது தான் குடிப்பிறப்பு. அது தான் உயர்வு அளிப்பது. அது தான் நன்மைக்கெல்லாம் அடிப்படை. ஏட்டில் எழுதப் பெற்றது எல்லாம் ஒழுக்கமன்று, உலகத்தோடு ஒத்ததே ஒழுக்கம். ஒழுக்கம் உடையார் தருமவான்கள் அவர்களே, உலகில் எல்லா நல்ல காரியங்களுக்கும் தலைமை தாங்க உரியவர்கள்.
ஒழுக்கத்தை திருக்குறளில் எவ்வளவு உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார் என்பதை மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகப் பொதுமறையான திருக்குறளின் வளமையை, பெருமையை பறைசாற்றும் நூல் இது. தமிழராகப் பிறந்ததற்காகவும், தமிழ் மொழியில் திருக்குறள் இருப்பதற்காகவும் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரும் பெருமைப்படும் விதமாக நூல் உள்ளது. நூல் ஆசிரியரின் ஆய்வுரைக்குப் பாராட்டுக்கள்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக